கூட்டு எதிர்க் கட்சியினரின் திட்டத்தின்படியும், அவர்களின் அரசியல் நகர்வுகளின் படியும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கக்கூடும் என கொழும்பு அரசியலில் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் இப்பொழுது, மைத்திரி ரணில் அரசாங்கத்திற்கு பல்வேறு நெருக்கடிகள் எழுந்துள்ள நிலையில், நாட்டில் இனவாதச் சக்திகளை தூண்டிவிட்டு மேலும் அரசாங்கத்திற்கு தலையிடிகள் ஏற்படுத்தப்பட்டுவருகின்றது.
இதன் ஒரு அங்கமாக சில இனவாதப் பிக்குகளை தூண்டிவிட்டு, சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லிம் மக்களிடத்தில் பெரும் கலோபரங்களை ஏற்படுத்தி, வடக்கு கிழக்கில் மீண்டும் அமைதியற்ற சூழல் தோன்றியிருப்பதாகவும், அதை தற்போதைய அரசாங்கம் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாத முதுகெலும்பு இல்லாத ஆட்சியாளர்கள் என்று காட்டுவதற்குமான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இன்றைய காலகட்டத்தில் வடக்கு, கிழக்கில் வேறு யாராக இருந்தாலும் இனவாதத்தை தூண்டினால் அதை இன்றைய அரசாங்கம் இலகுவில் கையாளும். இதனால் நாட்டின் முதன்மையான, மற்றும் சக்தி வாய்ந்த ஒரு தரப்பான பிக்குகளை இதில் களமிறக்கினால் கண்டிப்பாக அவர்கள் மீது கை வைக்க முடியாது என்பது இத்திட்டத்தை தீட்டிய தரப்பினருக்கு நன்கு தெரியும்.
ஆதலால் இப்பொழுது கூட்டு எதிர்க் கட்சியினர் தாங்கள் களத்திற்கு இறங்காமல், பௌத்த பிக்குகளை களத்திற்கு இறக்கியிருக்கிறார்கள். அதுவும், அடிப்படை இனவாதம் கொண்ட பிக்குகளை.
இதேவேளை, ஆட்சியை இழந்த மகிந்த ராஜபக்சவிற்கும் அவர் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் இராணுவத்தில் பலம்வாய்ந்த நபர்கள் இப்பொழுதும் தங்கள் தார்மீக ஆதரவையும், குரு பக்தியையும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் ஊனமுற்ற படைவீரர்களைக் கொண்டு அரசாங்கத்தை மிரட்டும் செயற்றிட்டத்தில் ஈடுபட்டார்கள் அவர்கள். அதில் வெற்றியும் கண்டார்.
இன்னொருபுறத்தில் பேராசிரியர் பீரிஸ் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்னும் பெயரில் புதிய கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு தாமரை மொட்டும் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவையெல்லாம் அடுத்துவரவுள்ள ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து ஏவப்படும் அஸ்திரமாக இருப்பதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் கருத்துத் தெரிவிக்கின்றன.
எனினும் தேர்தலில் வெள்ளோட்டம் பார்க்கும் முயற்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய கட்சி உள்ளுராட்சித் தேர்தலில் களமிறங்குகிறது. இதில் கிடைக்கும் வெற்றி, தோல்வியை வைத்தே அடுத்த கட்ட நகர்வு எப்படி மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என இவர்கள் முடிவெடுத்திருக்கிறார்கள்.
இதற்கிடையில் அமெரிக்காவில் நடந்த தேர்தலில் எதிர்பாராத விதமாக ஹிலாரி தோற்றதும் மகிந்த ராஜபக்சவிற்கு சாதகமானதொன்று என்கிறார்கள் மூத்த அரசியல் தலைவர்கள்.
ஏனெனில், அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களான கோத்தபாய ராஜபக்சவும், பசில் ராஜபக்சவும் அமெரிக்காவின் அடுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வெற்றியை பாராட்டியதோடு, அடுத்த தேர்தலில் அமெரிக்காவின் புதிய அதிபரின் உதவியை நாடுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஒருவேளை ஹிலாரி க்ளின்டன் வெற்றி பெற்றிருந்தால் அவரின் முயற்சிகள் வேறு மாதிரியாக இருக்கும். ஆனால், புதிய அமெரிக்க அதிபரின் அணுகுமுறைகள் எவ்வாறு இருக்கும் என்று கணிக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. அவரின் வெளிநாட்டுக் கொள்கையில் எவ்வாறான ராஜதந்திரங்களைக் கையாள்வார் என்பது குறித்து இதுவரை தெளிவான ஊகங்களைக் கணிக்க முடியவில்லை.
ஆனால், அவரின் பேச்சுக்களின்படி, அவர் தன்னுடைய நாடு சார்ந்து கடும் இறுக்கமான கொள்கைகளைப் பின்பற்றுவார் என்பதை ஓரளவிற்கு அனுமானித்துக் கொள்ள முடிகிறது.
இதனால், கடும்போக்காளராக தென்படும் டொனால்ட் ட்ரம்ப்பை இலங்கையில் இருக்கும் கடும்போக்காளர்கள் தமக்கு சாதகமாக செயற்பட, அல்லது அவரின் கொள்கைகளை தமக்கு சாதகமாக எவ்வாறு மாற்றிக் கொள்ளலாம் என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்துவருவதாகவே பரவலாகப் பேசப்படுகின்றது.
இவ்வாறான அரசியல் காலநிலை மாற்றத்தினால் பெரு மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ராஜபக்சாக்கள் தரப்பு, பகீரதப் பிரயத்தனப்பட்டு இழந்த நட்புக்களை மீள உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மகிந்தவின் நாடுகான் பயணங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கூட்டு எதிர்க் கட்சியினரின் முயற்சிகளையும், நகர்வுகளையும் மைத்திரி, ரணில் அரசாங்கம் எவ்வாறு கையாளப் போகின்றது என்பது தான் அடுத்த சுவார்ஸ்யமான நிகழ்வாக இருக்கும்.
மகிந்த, கோத்தபாய, பசில் கூட்டு எதிர்க் கட்சியினரை தமது கட்டுக்குள் வைத்திருப்பது எவ்வாறு என்பதை பிரதமர் வகுத்திருப்பாரா இல்லையா என்பதை அடுத்தடுத்துவரும் நாட்கள் பதில் கூறும்.
ஆனால், அதற்குள் மகிந்த ராஜபக்ச சுதாகரித்துக் கொண்டு, செயற்படுவாரா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.