சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவின் பிரதிநிதிகள் இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளிடம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்றைய தினம் சரமாரியாக கேள்விக் கணைகளைத் தொடுத்தனர்.
சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவின் 59 ஆவது அமர்வு நேற்று ஜெனிவா மனித உரிமை பேரவையில் ஆரம்பமானது.
இந்த அமர்வில் இலங்கையின் விவகாரம் தொடர்பில் ஆராயப்பட்டபோதே இவ்வாறு இலங்கையின் சார்பில் கலந்து கொண்ட
சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன உள்ளிட்ட இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளிடம் கேள்விக்கனைகளை பெலிஸ் கேர் தலைமையிலான குழுவின் பிரதிநிதிகள் தொடுத்தனர்.
குறிப்பாக இலங்கையின் யுத்தகாலத்தில் இரகசிய முகாம்கள் பேணப்பட்டதா என்றும் கேள்வி எழுப்பிய சித்திரைவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவின் பிரதிநிதிகள் பொறுப்புக்கூறல் பொறிமுறையின் நிலைமை எந்த மட்டத்தில் உள்ளது என்றும் வினவினர்.
மேலும் பல்வேறு சித்திரவதைக் குற்றச்சாட்டுக்கள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
இது தொடர்பில் அராசங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன எனவும் சித்திரைவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவின் பிரதிநிதிகளிடம் கேள்வி எழுப்பினர்.
இரகசிய முகாம்கள் யுத்தகாலத்தில் இலங்கையில் இருந்தாக எமக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது. அவ்வாறு இரகசிய முகாம்கள் இலங்கையில் இருந்திருப்பின் அது எவ்வாறு நடந்தது என்று விளக்க முடியுமா? எனவும் ஐ.நா. பிரதிநிதிகள் கேள்வி எழுப்பினர்.
இதேவேளை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளனவா?
அவர்கள் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிடுமாறு நாம் அரசாங்கத்தை கோரிவருகின்றோம்.
எனினும் இது தொடர்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இதுதொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கமுடியுமா எனவும் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளிடம் சித்திரைவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவின் பிரதிநிதிகள் வினவினர்.
அதுமட்டுமன்றி கடந்த 2015 மற்றும் 2016 ஆண்டில் வெள்ளைவேன் கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பதிவாகியுள்ளது.
இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும், குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கை என்ன என்பதை விளக்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.
இது இவ்வாறிருக்க இலங்கை தொடர்பான விசாரணை மேற்கொண்ட ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தின் விசாரணை அறிக்கையானது யுத்தகாலத்தில் அரச படையினர் பாலியல் வல்லுறவு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன இவை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதா? என்றும் ஐ.நா. பிரதிநிதிகள் குழு வினவியது.
அத்துடன் பொலிஸ் தடுப்பின்போது சந்தேகநபர்கள் உயிரிழந்த சம்பவங்கள் குறித்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டதா? இந்த விசாரணைகளின் முன்னேற்றங்கள் எவ்வாறு உள்ளன. எனவும் இந்த சந்தர்ப்பத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும் எமக்கு அறிக்கையிடப்பட்டுள்ளவகையில் தற்போது இடம்பெயர்ந்த நிலையில் மிகவும் குறைந்தளவிலான எண்ணிக்கையானோரே மீள்குடியேற்றப்படாமல் இருப்பதாக தெரிகின்றது.
இது தொடர்பான நிலைமையை விளக்க முடியுமா? என்றும் தடுப்பு முகாம்களில் சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் சித்திரவதை குற்றச்சாட்டுக்கள் குறித்து அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது எனவும் சித்திரைவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவின் பிரதிநிதிகளிடம் கேள்வி எழுப்பினர்.
இதேவேளை இலங்கை அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைபேரவையில் கடந்த வருடம் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியது.
அந்த பிரேரணையின் பிரகாரம் பொறுப்புக்கூறல் விசாரணை பொறிமுறை தயாரிக்கப்படவேண்டியுள்ளது. அந்தப் பொறுப்புக்கூறல் பொறிமுறையின் முன்னேற்றம் எவ்வாறு உள்ளது.
அந்தப் பொறிமுறையை எப்போது முடிப்பீர்கள் என்று கூற முடியுமா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதன் தன்மை குறித்தும் காணாமல்போனார் தொடர்பில் ஆராயவுள்ள நிரந்தர அலுவலகத்தின் நிலைமை குறித்தும் விளக்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.
இது இவ்வாறிருக்க திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் மூதூரில் 17 அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திலும் விசாரணை எவ்வாறு உள்ளது. இந்த சம்பவங்கள் நடைபெற்று 10 வருடங்கள் கடந்துவிட்டன.
ஏன் தாமதமான நிலைமை காணப்படுகின்றது என்றும் சித்திரைவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் குழுவின் பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளிடம் கேள்வி எழுப்பினர்.
அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டஈடுவழங்கும் செயற்பாடு எந்த மட்டத்தில் உள்ளது என்றும் கேள்விகள் சரமாரியாக சட்டமா அதிபர் உள்ளிட்ட இலங்கையின் பிரதிநிதிகளிடம் எழுப்பப்பட்டன.
இந்த குழுவின் கூட்டத் தொடர் இன்றைய தினமும் தொடரவுள்ள நிலையில் நேற்றைய தினம் முழுவதும் இவ்வாறு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.
முன்னதாக சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய சித்திரவதைகள் குற்றச்சாட்டுக்கள்தொடர்பான இலங்கையின் நிலைப்பாட்டை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.