ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ந் தேதி அதிரடியாக அறிவித்ததை தொடர்ந்து, பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக மக்கள், வங்கிகளை நோக்கி படையெடுத்துச் செல்கின்றனர்.
சிரமப்பட்டாலும் பல இடங்களில் மோடியின் அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, மோடியின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது கோலி கூறுகையில் “இந்திய அரசியலில் நான் பார்த்த வரையில் இது மிகச்சிறந்த நடவடிக்கை.
நான் மிகவும் பாராட்டுகிறேன். இந்த நடவடிக்கை என்னை மிகவும் ஈர்த்துள்ளது.
மேலும், என்ன நடக்கிறது என்பதை பார்க்க வியப்பாக இருக்கிறது. என்னால் இதனை நம்ப முடியவில்லை.
நான் எனது ஹோட்டல் கட்டணத்தை செலுத்தும் போதுதான் பழைய நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை பற்றி உணர்ந்தேன்.
பிறகு ரசிகர்களுக்கு அதை கையெழுத்திட்டு வழங்கியிருக்கலாம் என்று கருதினேன்.
பழைய நோட்டுகளில் இனி ஆட்டோகிராப் இட்டு ரசிகர்களுக்கு வழங்குவேன்” என்றார்.