ஒரே நாள் இரவில் இப்படி ஒரு தடை வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. திடீரென்று ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றதும் மக்கள் குலை நடுங்கிப் போனார்கள். அடுத்த நாள் காலையில் ஒன்றும் பெரிய மாற்றம் நிகழவில்லை. சாதாரணமாகத்தான் இருந்தது. வங்கிகளுக்கு மக்கள் படையெடுக்கத் தொடங்கிய போதும் கால் கடுக்க நின்ற போதும்தான் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் மத்திய அரசு மசியவில்லை. கறுப்புப் பணத்துக்கு பல முனைகளிலும் இருந்து கடிவாளம் போட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
பிரதமர் மோடியின் திட்டத்தைப் பின்பற்றி ஆஸ்திரேலியாவும் அதிக மதிப்புள்ள நோட்டுகளை ஒழிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. ஆஸ்திரேலியாவின் மொத்த பணப்புழக்கத்தில் 92 சதவீதம் 50 மற்றும் 100 ஆஸ்திரேலியன் டாலர்களாக உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து ஆஸ்திரேலியாவில் ஏடிஎம்களில் பணம் எடுப்பது 3.4 சதவீதம் குறைந்தது. அதேவேளையில் டிஜிட்டல் பேமென்ட் 7.3 சதவீதம் அதிகரித்தது.
இந்த நிலையில் யுபிஎஸ் வங்கி நிபுணர் ஜோனதான் மோட், ”ஆஸ்திரேலியாவின் புழக்கத்தில் உள்ள பெரிய நோட்டுகளை அழித்து விடுவது பொருளதார வளர்ச்சிக்கும் வங்கிகளின் நலனுக்கும் நல்லது. பணத்தை வைத்து குற்றச் செயல்களில் ஈடுபடுவது குறைவதோடு வருமான வரி அதிகரிக்கும் எனக் கூறியுள்ளார் . கடந்த பிப்ரவரி மாதத்தில் ஐரோப்பிய மத்திய வங்கி அதிக மதிப்புக் கொண்ட நோட்டுகள் பல்வேறு குற்றச் செயல்களுக்கு உதவிகராமாக இருப்பதால், 500 யூரோவை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இந்தியாவும் தனது பெரிய நோட்டுகளை வாபஸ் பெறுவதை அவர் உதாரணமாக சுட்டிக் காட்டியுள்ளார்.
”இந்தியாவில் ஒரு டிரில்லியன் அளவுக்கு கறுப்புப் பணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. பிரதமர் மோடி, கறுப்புப் பணத்துக்கு எதிராக போராடுவேன் என்று அறிவித்திருந்தார். தற்போது அதனை செயல்படுத்தியுள்ளார். அதே வேளையில் மக்களிடம் ஒரு வித பயம், கோபம், பதற்றம் காணப்படுகிறது” என வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
”பிரதமர் மோடி தனது தேர்தல் பிரசாரத்தின்போது கறுப்புப் பணத்தை ஒழிப்பேன், வரிவருவாயை அதிகரிப்பேன் என உறுதியளித்திருந்தார். இந்தியாவில் கறுப்புப் பணம் என்றும் மற்ற நாடுகளில் பதுக்கல் பணத்தை ஒழிக்கும் முயற்சியில் பாதிக்கிணறு தாண்டியுள்ளார். ஐரோப்பிய வங்கி 500 யூரோவை பணத்தை ஒழித்தது போல், கணிக்க முடியாத விதத்தில் மோடி செயல்பட்டுள்ளார்” என சிட்னி மார்னிங் ஹெரால்ட் கூறியுள்ளது.
”மோடியின் இந்த மூவ் அவர் மீது மரியாதையை எழச் செய்திருக்கிறது.மோடியை சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யு- வுடன் ஒப்பிட்டு ‘தி இன்டிபென்டன்ட் ‘ பத்திரிகை புகழாரம் சூட்டியுள்ளது.
”பிரதமர் மோடி அறிவிக்கும் வரை, இப்படி ஒருத் திட்டம் இருப்பதே யாருக்கும் தெரியாது. திடமான உறுதியான இந்த முடிவு இந்தியாவின் பொருளதார மாற்றத்துக்கு வித்திடும். தடை விதிக்கப்பட்ட பணத்தை திருப்பிப் பெற்றுக்கொள்ள இந்தியாவில் மக்கள் அலைமோதுகிறார்கள்” என நியூயார்க் டைம்ஸ் தனது செய்தியில் கூறியுள்ளது.
திருமணத்திற்கு சலுகை
இதற்கிடையே பணத் தட்டுப்பாட்டால், திருமணங்களை நடத்துவதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கல்யாண சீசன் என்பதால், அரசு இதனை கவனத்தில் கொண்டு திருமணம் நடைபெறும் வீடுகளில் ரூ. 2.5 லட்சம் வரை எடுத்துக் கொள்ள சிறப்பு அனுமதி அளித்துள்ளது. மத்திய பொருளாதாரத்துறைச் செயலாளர் சக்தி கந்த தாஸ் இன்று இதனை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ”திருமணம் நடைபெறும் வீடுகளில் தாயோ அல்லது தந்தையோ தேவையான ஆவணங்களைக் காட்டி ஒரு முறை மட்டும் ரூ, 2.5 லட்சம் வரை எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது” என்றார்.
அதுபோல் விவசாயிகள் தங்கள் கணக்கில் இருந்து செக் வழியாகவோ அல்ல ஆர்.டி.ஜி.எஸ் வழியாகரூ 25 ஆயிரம் வரை எடுக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தகர்கள் ரூ 50 ஆயிரம் வரை வாரத்துக்கு எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.