மத்திய அரசின் கருப்பு பண ஒழிப்பிற்கு, அதிமுக ஆதரவு அளிக்கும் என அக்கட்சி செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்தார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு நேற்று இரவு வந்த பொன்னையன், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது,
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் கையெழுத்திட்ட அறிக்கையின் பலனாகஇ நடைபெற உள்ள 4 இடைத் தேர்தல்களிலும் அதிமுக தொண்டர்கள் தீவிர தேர்தல் களப்பணி ஆற்றினார்கள்.
அதிமுகவுக்கு வெற்றி
மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு 4 தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை தொகுதி மக்கள் முதல்வருக்கு பரிசாக தருவார்கள்.
அதிமுக ஆதரவு
கள்ள நோட்டுகள், கருப்பு பணத்தை ஒழிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு அதிமுக முழு ஆதரவு தருகிறது. ஆனால் அதே நேரத்தில் அதனை நடைமுறைப்படுத்துகிறபோது பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்களாக இருக்கிறார்கள். அதை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு பொன்னையன் கூறினார்.
பதுங்கும் பொன்னையன்
ஜெயலலிதா எதிர்த்த மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அதிமுக திடீரென ஆதரவு அளித்த நிலையில், இப்போது பணத்திற்காக மக்கள் கஷ்டப்படுவது குறித்து கடுமையான சொற்களை பயன்படுத்துவதையும் பொன்னையன் தவிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வாய் திறக்காத ஜெயலலிதா
அதேபோல அனைத்து மாநில மக்களை போலவே தமிழக மக்களும் பணத்திற்காக கஷ்டப்படுகிறார்கள். ஆனால் மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால் போன்ற முதல்வர்களை போல தனது மாநில மக்களின் நலன் குறித்து இதுவரை ஜெயலலிதா ஒரு வார்த்தையும் பேசவில்லை. 4 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என கோரும் அறிக்கையைதான் சில நாட்கள் முன்பு ஜெயலலிதா வெளியிட்டிருந்தார்.