இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் செயற்பாட்டை சீனப்பத்திரிகை விமர்சனம் செய்துள்ளது. சீனாவில் இருந்து வெளிவரும் Global times என்னும் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
இந்தியாவில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும், அதற்குப் பதிலாக புதிய 500 மற்றும் 2000ம் ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும் என்றும் கடந்த 8ம் திகதி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியா முழுவதும் வாழும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவருகின்றனர். இதற்கிடையில் இதுவரை இப்பணப் பிரச்சினையால் 40 பேருக்கும் அதிகமாக உயிரிழந்துள்ளனர்.
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பால், பல்வேறு நாடுகளும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துவருகின்றன.
உள்நாட்டிலேயே பலர், ஆதரவாகவும் எதிராகவும் கருத்து வெளியிட்டுவருகின்றனர். ஆனால் பிரதமர் மோடி அந்த முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்றும், நாட்டில் இருக்கும், கறுப்புப் பணம், கள்ள நோட்டுக்கள் இல்லாமல் செய்யப்படும் என்று அறிவித்திருக்கின்றார்.
எனினும் இது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் சீனப்பத்திரிகை,
‘மோடியின் அறிவிப்பு பாகுபாடற்ற மோசமான சதி, ஒரு காஸ்ட்லி அரசியல் ஜோக் என சொல்லலாம். தைரியமான முடிவுகளை எடுக்கும்போது, அதை செயல்படுத்த போதிய ஞானம் வேண்டும். மக்களுக்கு தகுந்த ஏற்பாடுகளை செய்வதில் மோடி அரசு தோற்றுவிட்டது.
குறிப்பாக உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலை மனதில் வைத்துதான் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
மோடி கறுப்புப் பணத்தை ஒழிக்கும் ஒரு ஹீரோ என்ற பிம்பத்தை நிலைநிறுத்தவே இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று அப்பத்திரிகை தன்னுடைய கடும் விமர்சனத்தை வெளியிட்டிருக்கின்றது.