வாசகர்களே!
வட அயர்லாந்து பிரதி முதலமைச்சரும், ஐரிஸ் விடுதலை ராணுவத்தின் முன்னாள் தலைவருமான மார்ட்டின் மக்னஸ் (Martin Mcguinness) இலங்கை சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட அனுபவம் மிக முக்கியமானது.
அத்துடன் அப்போதைய பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் அவரின் முயற்சியாலேயே அதில் ஈடுபட நேர்ந்தது.
இவ் விபரங்கள் அவ்வளவு விரிவாக இதுவரை வெளிவரவில்லை. அந்த வகையில் இக் கட்டுரை மேலும் பல பயனுள்ள தகவல்களைத் தரும் என நம்புகிறேன்.
இலங்கை சென்று திரும்பிய மார்ட்டின் மக்னஸ் ( Martin Mcguinness) அவர்களின் அனுபவம் இவ்வாறு இருந்தது.
எனது அபிப்பிராயத்தினை தெளிவாகவே முன்வைத்தேன். தமது ராஜ்யம் கிடைக்கும் வரை மக்கள் ஒருவரை ஒருவர் கொல்லலாம்.
அல்லது விசுவாசத்துடன் அதனைப் பேசித் தீர்ப்பதற்கு சமாதான மேசைக்குச் செல்ல முயற்சிக்க வேண்டும்.
(Martin Mcguinness, pirapakaran)
இலங்கையின் இந்த வரலாற்றினையும், புலிகள் நடந்து கொள்ளும் முறைகளையும் தெரிந்த பின்னரும் எனக்குக் கிடைத்த ஒரே ஏமாற்றம் பிரபாகரனை நான் சந்திக்க முடியவில்லை என்பதுதான்.
வெளியுலகத்துடனான தனது உறவை அவர் மூடியிருந்தார். அது அவரது பெரிய முட்டாள்தனமாகும்.
அவர்கள் சார்பில் பேச முயற்சிப்பவர்களைச் சந்திக்கவும் தயாராக இருக்கவில்லை.
ராஜபக்ச நிர்வாகம் தாம் தமிழர்களை வென்றுள்ளதாக நம்பலாம். ஆனால் பிரச்சனையை அவர்கள் தீர்க்கவில்லை.
வடக்கில் வாழும் சுமார் 10 லட்சம் மக்கள் இன்னமும் இரண்டாம் தர பிரஜைகளாகவே கணிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் மத்தியிலே கோபம், வெறுப்பு, கடுiமையான உணர்வுகள் உள்ளன. அவை ஒரு நாள் எதிர்காலத்தில் வெடிக்கலாம்.
நான் நெல்சன் மண்டேலா அவர்களின் மரணச் சடங்கில் பார்த்தேன். எனக்கு அவ்வளவு கோபமாக இருந்ததால் நான் அவருடன் பேசவில்லை.
தமிழருக்கு நடந்தவைகள், இடம்பெற்ற மனிதக் கொலைகள் என்பன மீண்டும் அவருடன் பேசவைக்க இடமளிக்கவில்லை.
இரண்டு மாதங்களின் பின்னர் ஆரம்ப பேச்சுவார்த்தைகளுக்காக வட அயர்லாந்திற்கான பிரித்தானிய செயலாளர் போல் மேர்பி ( Paul Murphy) 2006ம் ஆண்டு நவம்பர் நடுப்பகுதியில் இலங்கை சென்று அரச அதிகாரிகளையும், கிளிநொச்சியில் தமிழ்ச்செல்வனையும் சந்தித்தார்.
மார்டின் மக்னஸ் அவர்களின் வருகை குறித்து ரிரோன் பேர்டினட் (Tyrone Ferdinands) அவர்களின் கருத்து இவ்வாறாக இருந்தது.
மார்டின் மக்னஸ் இரண்டாவது தடவையாக யூலை மாத ஆரம்பத்தில் இலங்கை வந்திருந்தார். இத் தடவை கிளிநொச்சிக்கும் சென்றிருந்தார்.
அவர் நாடு திரும்பவிருந்த வேளையில் அவரை பஸில் ராஜபக்சவைச் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு மகிந்த கூறினார். பஸிலிடம் ஒரே ஒரு வேண்டுகோளே இருந்தது.
அதாவது புலிகளுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தித் தரும்படி அவரைக் கோருவதுதான்.
அவர் அவ்வாறு கோரியபோது நோர்வே தரப்பினருக்கு என்ன நடந்தது? எனக் கேட்டார். அதற்கு அவர் அவர்கள் உத்தியோகபூர்வ பேச்சுக்களைத் தொடரட்டும்.
நான் அதனை உதாசீனம் செய்ய விரும்பவில்லை. ஆனால் வேறு பிரச்சனைகளை நேரடியாக பேச விரும்பகிறோம் என்றார்.
பஸிலைச் சந்தித்ததும் அவர் தெரிவித்த கருத்து என்னவெனில் இரு சாராருக்குமிடையே நம்பிக்கை அறுந்துவிட்டால் அதனை மீளக் கட்டுவது அனுசரணையாளருக்கு முடியாத காரியம்.
நீங்கள் மிகவும் தீவிரத் தன்மையுடனும், எதனையும் பகிரங்கமாக வைக்கத் தயாராகவும் இல்லை.
நீங்கள் 10 வருடங்களுக்குப் பின்னால் சென்றுள்ளீர்கள். இந் நிலையில் புலிகளுடன் என்ன பேச விரும்புகிறீர்கள்? எனக் கேட்டார்.
நாங்கள் அவர்களுடன் பேசவில்லை என எண்ணுகிறீர்களா? அவ்வாறு இல்லை. நாம் இதில் மிகவும் அனுபவஸ்தர்கள். நேரடியாக தொடர்புகளை வைத்திருக்கிறோம்.
எமக்கு உண்மையில் அவர்கள் எதனைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்? என்பதை அறியவேண்டியுள்ளது.
பலர் அவர்களுடன் பேசியபோது அவர்களது மறு பக்கம் பற்றியும் கூறினர். அவர்களிடமிருந்து சில பகிரங்க சமிக்ஞைகளை எதிர்பார்க்கிறோம்.
நாம் சிறுவர்களல்ல. நாம் அதனைக் கையாளுவோம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தாருங்கள் என பஸில் கேட்டார்.
இவை பற்றி மார்டின் மக்னஸ் தெரிவிக்கையில் அரச தரப்பினர் புலிகளுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்த விரும்புகின்றனர்.
ஆனால் அவ்வாறு யாரையும் நேரடியாக சந்திக்க புலிகள் தயாராக இல்லை. எனது இரண்டாவது பயணத்தின் பின்னர் அவ்வாறான ஒரு சூழல் இருப்பதாக எனக்குப் புலப்படவில்லை.
பஸிலை நான் சந்தித்தபோது ஒரு ராணுவ தரப்பைச் சேர்ந்த ஒருவரோடு பேசுவதாக உணர்ந்தேன்.
புலிகளுக்கு எதிராக ராணுவ தாக்குதல் இருப்பதையும், தாம் அதாவது அரசாங்கம் பேச்சுவார்த்தையில் அதிக நம்பிக்கை கொண்டிருப்பதாக காண்பிப்பதற்கு அவர் முயற்சிப்பதையும் நான் உணர்ந்துகொண்டேன்.
ஆனால் புலிகள் அதற்குத் தயாராக இருக்கவில்லை. அதனால் நேரடியாக பேசுவதற்கான வாய்ப்பு இல்லை என பஸிலிடம் தெரிவித்தேன்.
இவை தொடர்பாக நோர்வே விஷேட தூதுவர் ஜொன் ஹன்சன் பவர் (Jon Hanssen Bauer) தெரிவிக்கையில் ரொனி பிளேயர் இப் பிரச்சனையில் ஈடுபட விரும்பவதாக தமக்கு சில செய்திகள் கிடைத்ததாகவும்,
ஆனாலும் இதன் பின்னணியில் வட அயர்லாந்துக் கட்சியான சின்பெய்ன் ( Sinn Fein ) செயற்படுவது குறித்து மிகவும் சொற்ப தகவல்களே கிடைத்ததாக கூறும் அவர், போல் மேர்பி விஷேட தூதுவராக நியமிக்கப்பட்டது தனக்கு ஞாபகமில்லை.
ஆனால் அது தமது முயற்சிகளுக்கு தடையாக அமையலாம் என உணர்ந்ததாக கூறினார்.
அவரது இலங்கை விஜயம் எதிர்பார்த்த அளவில் அமையவில்லை ஆனாலும் அவர் சில தொடர்புகளை ஏற்படுத்தியதாக தகவல்கள் கிடைத்ததாக கூறுகிறார்.
வேறு அரசியல்வாதிகள் இதில் தலையிடுவது பிரச்சனைக்குரியது எனினும் நாம் அனுசரணையாளர் என்ற வேலையில் அதிக கவனம் செலுத்தினோம்.
tony blair
இவை பற்றி அறிய லண்டன் சென்று ரொனி பிளேயரின் அதிகாரிகளில் ஒருவரான ஜொனதன் பவல் (Jonathan Powell) அவர்களுடன் இலங்கை நிலமைகள் குறித்து தாம் பேசிய போது அங்கு சமாதானத்திற்கான வாய்ப்புகளை விட போருக்கான நிலமைகளே அதிகம் உள்ளதாக தெரிவித்தபோது பேச்சுக்களின் முடிவில் ரொனி பிளேயர் அப் பிரச்சனையில் எதுவும் செய்யும் அளவிற்கு நிலமைகள் இல்லை என்ற முடிவிற்கு வந்தனர்.
நோர்வே இற்கு வெளியில் புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த ஜனாதிபதி மிகவும் முயற்சிப்பது தெரிந்தது.
இவை புலிகளுக்கு பெரும் விசனத்தை அளித்தது. அவர்கள் நோர்வேயைத் தவிர வேறு எவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை அல்லது இன்னொரு தரப்பாருடன் தொடர்புகளை வைத்திருப்பதை விரும்பவில்லை.
வட அயர்லாந்து கிளர்ச்சியாளர்கள் நீண்ட கால போராட்டத்தின் பின்னர் பேச்சுவார்த்தைக்குச் சென்று ஆயுதங்களை ஒப்படைத்தவர்கள். இதில் ஈடுபடுவது புலிகளின் கவனத்தை ஈர்க்கலாம் என மகிந்த எண்ணியிருக்கலாம்.
வட அயர்லாந்து நிர்வாகம் இப் பிரச்சனையில் ஈடுபடுவது குறித்து எரிக் சோல்கெய்ம் இன் கருத்து இவ்வாறு இருந்தது.
(Gerry Adams – வட அயர்லாந்தின் சின்பெயின் அமைப் பின் தலைவர்)
இதில் வட அயர்லாந்து ஈடுபடுவது பலருக்கு ஆர்வத்தை அளிப்பதாக இருந்த போதிலும் பிரபாகரன் என்பவர் ஜெரி அடம்ஸ் (Gerry Adams )இற்கு இணையானவர் அல்ல என்பது அப்போதைய கருத்தாக இருந்தது.
பாலசிங்கம் இருக்கும் வரை புலிகள் வட அயர்லாந்தில் அதிக நாட்டம் கொள்ள மாட்டார்கள். புலிகளுக்கு என்ன தேவை? என்பதை தாம் அறிவோம் என நம்புபவர்.
ஆனால் புலிகள் தரப்பினர் உலகம் முழுவதும் சென்று சமஷ்டி பற்றி அவர்கள் அறியவேண்டுமென்பதை அவர் விரும்பினார்.
சகலமும் தனது கட்டுப்பாட்டில் இருப்பதை விரும்பிய அவர் நோர்வே மட்டுமே ஒரே தொடர்பு எனவும் எண்ணினார். பேச்சுவார்த்தைகள் சுமுகமாகச் செல்லுமானால் வெளியார் தலையீடு அவசியமில்லை என அவர் கருதினார்.
கிராமத் தலைவரை ஒத்தவராக மகிந்த உள்ளார் என்பதற்கு இது மிகவும் பொருத்தமாக அமைகிறது எனக் கூறும் சோல்கெய்ம். மார்ட்டின் மக்னஸ் இன் வருகை இதற்குப் பொருத்தமாக அமைகிறது என்கிறார்.
அவர் பல வழிகளைத் திறக்க எண்ணுகிறார். அது அவருக்கு பல்வேறு அணுகுமுறைகளைத் தரும்.
இதனையே அவர் ஜெனீவா இலும் சமாதானத்திற்கு ஆதரவானவர்களையும், எதிர்ப்பவர்களையும் அங்கு அனுப்பிக் கையாண்டார்.
பிரச்சனை நீண்டு செல்வதை அவர் விரும்பவில்லை எனவே அவர் குறுக்கு வழிகளைத் தேடுகிறார்.
அது போலவே நோர்வே இற்கு வெளியிலும் வாய்ப்புகளைத் தேடுகிறார். சமாதான முயற்சிகளில் அவருக்குத் தெளிவான பார்வை இல்லை என்பதை இவை உணர்த்தி நிற்கின்றன.
(tony blair and Jonathan Powell)
இவை குறித்து ரொனி பிளேயரின் பிரதம அதிகாரியாக செயற்பட்ட ஜொனதன் பவல் (Jonathan Powell) கூறுகையில் விக்கிலீக்ஸ் தகவல்கள் நோர்வே இன் முயற்சிகளை நான் திருட முயற்சிப்பதாக செய்திகளை வெளியிட்டிருந்தது.
இது முழுமையாகத் தவறானது. மகிந்த ராஜபக்ஸவை மகிழ்ச்சிப்படுத்தவே அதில் இறங்கியதாகவும், மார்ட்டின் மக்னஸ் எங்களை அணுகி இப் பிரச்சனையில் ஈடுபடுவது பிரயோசனமானது எனத் தெரிவித்தார்.
வட அயர்லாந்து பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை அடைந்த நிலையில் அவர்களின் வேண்டுகோளுக்கும் இசைவது தேவையாக இருந்தது.
அத்துடன் அது நியாயமான கோரிக்கையாகவும் காணப்பட்டது. எனவே நாம் மிகவும் சாதாரணமாகவே ஆம் எனப் பதிலளித்தோம்.
மார்ட்டின் மக்னஸ் ஸ்பெய்ன் நாட்டின் பாஸ்க் பிரதேச பிரச்சனையிலும் ஈடுபட்டதோடு சின்பெய்ன் கட்சி தனது முக்கிய உறுப்பினர்களை பர்மா நாட்டிற்கும் அனுப்பியிருந்தது.
கிளர்ச்சியாளர்களோடும், அரசாங்கங்களோடும் ஈடுபடும் அவர்களது அனுபவங்களுக்கு மதிப்பளிப்பது பொருத்தமானது எனவும் கருதினோம் என அவர் தெரிவித்தார்.
வாசகர்களே!
தென் கிழக்கு ஆசியாவில் மிகவும் ராணுவ மயமாக்கப்பட்ட நாடாக இலங்கை அமைந்திருந்தது.
2006ம் ஆண்டு முதல் 2010 ம் ஆண்டு வரை இதுவே நிலமையாக காணப்பட்டது. அக் கால கட்டத்தில் கொலம்பியா, பர்மா, சியராலியோன், சூடான், பிலிப்பைன்ஸ், உகான்டா ஆகிய நாடுகளிலும் இவ்வாறான நிலமை காணப்பட்ட போதும் நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் மிகப் பெரிய தொகையை விழுங்கிய நிகழ்வு இதுவாகும்.
இப் பின்னணியில் ஜெனிவாவை நோக்கிய பாதையில் தொடர்ந்து நடந்தது என்ன? என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.
தொடரும்..
Erik Solheim அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள். தொகுப்பு : வி. சிவலிங்கம்