அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று சொல்லுமளவிற்கு நான் கடவுளல்ல என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றியீட்டியமை தொடர்பில் ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இந்தத் தேர்தலில் இருவரில் ஒருவர் தான் வெல்வார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
நாங்கள் எங்கள் விருப்பத்தின் அடிப்படையில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றால் அது தமிழருக்கு நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்பதால் அதனை நினைத்துப் பிரார்த்தனை செய்தோம். இன்று எங்களின் பிரார்த்தனை வெற்றி பெறாத காரணத்தால் டிரம்ப் வெற்றி பெற்றிருக்கிறார்
மேலும் புதிய ஜனாதிபதி அமெரிக்காவை நல்லதொரு வழியில் கொண்டு செல்வாரெனப் பலரும் எதிர்பார்க்கின்றனர். அது போன்று அவருடைய தலைமைத்துவத்தின் கீழ் அமெரிக்கா எங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென நாங்கள் விரும்புகின்றோம்.
இலங்கை அமெரிக்கத் தூதரகத்தில் 108 பேர் வரையான இராஜதந்திரிகள் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டு அமெரிக்கத் தேர்தல் முடிவு தொடர்பாக ஒரு மாதிரிச் சீட்டை வைத்திருந்தவாறு போட்டி நடாத்தியுள்ளனர்.
இதில் 80 வாக்குகளைக் ஹிலாரி கிளிண்டன் பெறுவார் 28 வாக்குகளேயே டிரம்ப் பெற்றுக் கொள்வாரெனவுமே சொல்லப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவு வெளிவந்தவுடன் அந்த இராஜதந்திரிகள் உட்படப் பலரும் முகத்தைத் சுளித்து கொண்டனர்.
இதேப்போல் பலருடைய எதிர்பார்ப்பையும் மீறி ட்ரம்ப் வெற்றி பெற்றிருக்கிறார். ஆகவே, அமெரிக்க மக்களுடைய தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்ளலாம்.
ட்ரம்ப் வந்தால் என்ன? எதிர்காலத்தில் யார் வந்தாலென்ன? எங்களுடைய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதே,எமது எதிர்பார்ப்பு என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.