அமெரிக்காவின் சான் ஆன்டனியோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதிபதி, ட்ரம்பை பிடிக்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என தெரிவித்துள்ளார்.
சான் ஆன்டனியோ நகரில் உள்ள டெக்ஸான் கலாச்சார நிறுவனத்தில் புதிய குடிமக்களுக்கான அறிமுக நிகழ்ச்சி அந்நாட்டு நீதிபதி ஜான் பிரிமோமோ தலைமையில் நடைபெற்றது.
இதில் அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி பிரிமோமோ, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப்க்கு எதிராக அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களை ஏற்க முடியாது என்றார்.
அவருக்கு வாக்கு அளித்தீர்களோ இல்லையோ நீங்கள் அமெரிக்க குடிமக்கள் என்றால் அவர்தான் அமெரிக்காவின் ஜனாதிபதி.
அவர் தான் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக இருக்கப் போகிறார் என்றார். ஒருவேளை டொனால்டு ட்ரம்பை உங்களுக்கு பிடிக்காவிட்டால் நீங்கள் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாட்டில் குடியேறிக் கொள்ளுங்கள் என்றார்.
அமெரிக்க மக்களுக்கு போராடுவதற்கும் போராட்டம் நடத்துவதற்கும் உரிமை உண்டு.
அதே நேரத்தில் நாட்டின் தேசிய சின்னம் மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கப்படுவதை சகித்து கொள்ள முடியாது என்றும் நீதிபதி பிரிமோமோ எச்சரித்தார்.
நீதிபதியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவரை பதவிநீக்கம் செய்யக்கோரி மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே அனைவரையும் ஒருங்கிணைக்கவே தான் அவ்வாறு பேசியதாக நீதிபதி ஜான் பிரிமோமோ விளக்கம் அளித்துள்ளார்.
தன்னுடைய பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல என்று கூறியுள்ள அவர், தான் ட்ரம்ப்க்கு ஆதரவாக பேசவில்லை நாட்டின் நன்மைக்காகவே பேசியதாக கூறியுள்ளார்.