யாழ்.குடா நாட்டில் கடந்த ஆறு நாட்களாகத் தொடர்ச்சியாக நீடித்த கடும் மழை இன்று ஓய்ந்துள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை இன்று வழமைக்குத் திரும்பியுள்ளது.
கடந்த நாட்களில் நீடித்த அடை மழை காரணமாக ஜே-86,87,88,90,91 கிராம சேவையாளர்கள் பிரிவுக்குட்ப்பட்ட வசந்தபுரம், சூரிய புரம், பொம்மைவெளி, காக்கைதீவு, அராலி போன்ற பிரதேசங்களில் பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
இதனால் பல குடும்பங்கள் இடம்பெயர வேண்டி ஏற்பட்டதுடன், வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிகமாக நலன்புரி முகாம்களில் வாழும் முகாம் மக்களும் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியிருந்தனர்.
அத்துடன் யாழ். குடாநாட்டின் தாழ்நிலப் பகுதிகள் பலவும் வெள்ளக் காடாகக் காட்சியளித்தது. தொடர் மழை காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த ஆறு நாட்களாக நீடித்த மழை இன்றுடன் ஓய்ந்து இன்று வெப்பமுடனான காலநிலை நிலவியது. இதனால், இன்று வீதிகளில் மக்களின் அதிகநடமாட்டத்தைக் காண முடிந்தது.
மழையுடனான காலநிலை தொடர்ச்சியாக நீடித்திருக்குமானால் யாழ்.குடாநாட்டில் பெரும் வெள்ள அபாயம் ஏற்படுவதற்கான ஏது நிலையிலிருந்த சூழலில் இன்று மழை ஓய்வடைந்தமையால் யாழ். மக்கள் நிம்மதியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.