கிழக்கில் டி.ஐ.ஜி.யின் மேற்பார்வையில் கருணா அணியுடன் பல செயற்பாடுகளை முன்னெடுத்தோம்
கிழக்கு மாகாணத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த ரொஹான் அபேகுணவர்த்தனவின் மேற்பார்வையில், கருணா அணியினரின் உறுப்பினர்களுடன் இணைந்து கிழக்கில் பல்வேறு நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டதாக ரவிராஜ் படுகொலை வழக்கின் பிரதான சாட்சியான முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் பிரித்திவிராஜ் மனம்பேரி நேற்று சாட்சியமளித்தார்.
ரவிராஜ் கொலையின் பிரதான சந்தேக நபராக கருதப்படும், தற்போது இறந்துவிட்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள பழனிச்சாமி சுரேஷை அதன்போதே தான் அறிந்ததாகவும் அவர் சாட்சியமளித்தார்.
கொழும்பு மேல் நீதிமன்றில் சிங்களம் பேசும் சிறப்பு ஜூரிகள் சபை முன்னிலையில் இடம்பெற்று வரும் வழக்கில், சாட்சி விசாரணையில் சிரேஷ்ட பிரதி சொலிசிற்றர் ஜெனரல் ரொஹந்த அபேசூரியவின் நெறிப்படுத்தலில் சாட்சி அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பழனிச் சாமி சுரேஷ் ஊடாக தான் இவ்வழக்கின் பிரதிவாதிகளான கடற்படை புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளான ஹெட்டி ஆரச்சிகே பிரசாத் சந்தன குமார, காமினி செனவிரத்ன, கங்கானம்லாகே வஜிர பிரதீப் சமிந்த, கருணா அணியின் உறுப்பினர் சரன் எனப்படும் சிவகாந்தன் விவேகானந்தன் ஆகியோரின் அறிமுகம் கிடைத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் பிரதிவாதிக் கூண்டில் இருந்த கடற்படை லெப்டினன் ஹெட்டி ஆரச்சிகே பிரசாத் சந்தன குமார மற்றும் காமினி செனவிரத்ன, கங்கானம்லாகே வஜிர பிரதீப் சமிந்த ஆகியோரையும் அவர் அடையாளம் காட்டினார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது மெய்பாதுகாவலராக இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் லக்ஷ்மன் ஆகியோரை படுகொலை செய்த விவகாரம் தொடர்பிலான சாட்சி விசாரணைகள் நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்திய திலகவின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு ஜூரிகள் முன்னிலையில் ஆரம்பமானது.
முதலாவது சாட்சியாளரான அரச சாட்சியாக மாற்றப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பிரித்திவிராஜ் மனம்பேரி முதலாவது சாட்சியாக நேற்று சாட்சியமளிக்க ஆரம்பித்தார்.
பிரதி சொலிசிற்றர் ஜெனரால் ரொஹந்தவின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு அவர் வழங்கிய சாட்சியம் வருமாறு
கேள்வி. நீங்கள் எப்போது பிறந்தீர்கள்?
பதில். 1976.11.27
கேள்வி.எங்கு பிறந்தீர்கள் ?
பதில். அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேசத்தின் தலாவ எனும் ஊரில். பிறந்தேன்.
கேள்வி. எங்கு எதுவரை கல்வி கற்றீர்கள்?
பதில். தலாவ மகா வித்தியாலயத்தில் உயர்தரம் வரையில் கற்றேன்.
கேள்வி. அதன் பின்னர் தொழில் நிமதித்தம் ஏதாவது திணைக்களத்தில் இணைந்தீர்களா?
பதில். ஆம் பொலிஸ் திணைகளத்தில் இணைந்தேன்.
கேள்வி. எப்போது இணைந்தீர்கள்?
பதில். 1996.01.09
கேள்வி. எந்த பிரதேசத்தில் பயிற்சியை பெற்றீர்கள்?
பதில். யாழ்ப்பாணம், களுத்துறையில் பயிற்சி பெற்றேன்.
கேள்வி. யாழில் எவ்வாறான பயிற்சியை பெற்றீர்கள்?
பதில்: ஆயத பயன்பாடு,யுத்த சூழல் தொடர்பில் பயிற்சி பெற்றேன்.
கேள்வி. களுத்துறையில்?
பதில். போக்குவரத்து, பாதுகாப்பு,உளவு தகவல்கள் சேகரிப்பு தொடர்பில் பயிற்சி பெற்றேன்
கேள்வி: பயிற்சிக்கு பின் எப்பகுதிகளில் சேவை செய்தீர்கள் ?
பதில். யாழ். காங்கேசன்துறை,பளை,ஊர்காவற்துறை,அம்பாறை மட்டக்களப்ப, கொழும்பு கடவத்தை.
கேள்வி. வடக்கு கிழக்கை தவிர வேறு எங்கு சேவையாற்றியுள்ளீர்கள்?
பதில். ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு,களுத்துறை பொலிஸ் கல்லூரி,பொலிஸ் காலாட்படைத் தலைமையகம் .
கேள்வி. பயிற்சிகளின் பின்னர் எங்கு எவ்வாறான கடமைகளை முன்னெடுத்தீர்கள்?
பதில். யாழ்.பயிற்சிகளை தொடர்ந்து காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் 1996 ஆம் ஆண்டு சுமார் 6 மாதங்கள் வரையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டேன்.
பின்னர் பளை பொலிஸ் நிலையத்தில் மூன்று மாதங்களும் கோப்பாயில் 5 மாதங்களும்,ஊர்காவற்துறையிலும் நெடுந்தீவு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டேன்.
அதன் பின்னர் 1998 ஆம் ஆண்டு காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர். பெத்திகிலிராலவின் பாதுகாப்பு உத்தியோத்தராகவும் சாரதியாகவும் செயற்பட்டேன்.
பின்னர் 2003 ஆம் ஆண்டு யாழிலிருந்து இடமாற்றம் பெற்று பிரதி பொலிஸ்மா அதிபர் நெவில் விஜேசிங்கவின் பாதுகாப்பு மற்றும் சாரதியாக கடமையாற்றினேன்.
கேள்வி. அதன் பின்னர் எங்கு கடமையாற்றினீர்கள்?
பதில். 2005 ஆம் ஆண்டு கிழக்கு பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய .ரொஹான் அபேகுணவர்தனவின் சாரதியாகவும் பாதுகாப்பு உத்தியோகத்தவராகவும் உளவுத்துறை தொடர்பிலான நடவடிக்கையிலும் செயற்பட்டேன்.
கேள்வி. அவரின் கீழ் செய்த உளவுப்பிரிவு கடமைகள் என்ன?
பதில். அப்போது யுத்த சூழல் நிலவிய நிலையில் விடுதலை புலிகளுக்கு எதிராக அதிலிருந்து பிரிந்து வந்த கருணா குழுவினருடன் சேர்ந்து பிரதி .பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைவாக செயற்பட்டேன்.
கேள்வி. கருணா குழுவின் உறுப்பினர்களை நீர் எப்படி தொடர்பு கொண்டீர்? எங்கு வைத்த சந்தித்தீர்கள்.
பதில். அவர்களை பிரதி பொலிஸ்மா அதிபர் ஊடாகவே அறிந்தேன். அவர்கள் அம்பாறை மற்றும் மட்டக்களப்பில் உள்ள பிரதி பொலிஸ்மா அதிபரின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு வந்து செல்வார்கள்
கேள்வி. பாதுகாப்பு தரப்பினருக்கு கருணா குழுவினர் உதவினார்களா? எப்படி உதவினார்கள்?
பதில். ஆம். பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கிய விஷேட நடவடிக்கை பிரிவில் கருணா குழுவின் உறுப்பினர்கள் உள்ளடக்கப்படிருந்தனர். அக்குழு ஊடாக விஷேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கேள்வி: பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழான அந்நடவடிக்கைகள் என்ன?
பதில். எமது அதிகாரிகள் கருணா குழுவினருடன் சேர்ந்து புலிகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்துவர்.
கேள்வி. அதில் நீர் பங்கேற்றீரா? உமது பங்களிப்பு எவ்வாறானது?
பதில். ஆம். கருணா குழு உறுப்பினர்களை குறிப்பிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்வதே எனது கடமை
கேள்வி. அதன்போது நீர் அறிந்த கருணா குழு உறுப்பினர்களின் பெயர்களை கூற முடியுமா?
பதில். பார்த்தீபன், சாமி அல்லது சிரேஷ், சிந்துஜன்அ ராஜா,கஜன், சூட்டி.
கேள்வி. இவர்களை எப்படி அறிந்துகொண்டீர், இவர்களுக்கு பொலிஸாருக்கு இடையிலான தொடர்பு என்ன?
பதில. மட்டக்களப்பு, அம்பாறையில் வைத்து அறிந்துகொண்டேன் உளவு தகவல்களை பகிர்ந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதே பிரதான தொடர்பாகும்.
கேள்வி.திடீரென நீர் களுத்துறைக்கு இடமாற்றபட்டதற்கான காரணம் என்ன?
பதில். அம்பாறை மகாஓயாவிலிருந்து மட்டக்களப்புக்க்கு செல்லும் வீதியில் புலிகளின் முகாம் ஒன்று இருந்தது. அதன் மீது தாக்குதல் நடத்த பிரதி அதிபர் உத்தரவிட்டார்.
அதற்காக கருணா குழு உறுப்பினர்களுடன் நாம் சென்றோம். இடையில் அதிரடிப்படை முகாம் ஒன்றை தாண்டியே அவ்விடத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.
எனினும் அதிரடிப்படையினர் எம்மை அங்கு செல்ல அனுமதிக்கவில்லை பின்னர் தாக்குதலை கைவிட்டு பிரதி பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய திரும்பினோம். இந்த விடயம் ஊடகங்கள் ஊடாக புலிகளுக்கு தெரிந்தது. அதனால் எமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. ஆகவேதான் இடமாற்றம் கிடைத்தது.
கேள்வி. நீர் கூடுதலாக .செலுத்திய வாகனம் எது?
பதில். மோட்டார் சைக்கிள்,ஜீப்.
கேள்வி. அவை யாருக்கு சொந்தமானவை?.
பதில்: கருணா குழுவினருக்கு சொந்தமானவை.
கேள்வி. எவ்வகையான மோட்டார் சைக்கிள்கள் கருணா குழுவிடம் இருந்தனஈ அவை பயன்படுத்தப்பட காரணம் என்ன?
பதில். பல்ஸர், டிஸ்கவரி ரக மோட்டார் சைக்கிள்கள் இருந்தன. தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அவை பயன்படுத்தப்பட்டன.
கேள்வி. நீங்கள் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் போதும் கருணா குழுவினருடன் தொடர்புகளை பேனினீர்களா? யாருடன் தொடர்பு கொண்டீர் ?
பதில் . ஆம். சாமியுடன் தொடர்பிலிருந்தேன்.
கேள்வி. நீர் சாட்சியளிக்கும் சம்பவம் எது என அறிவீரா?
பதில். ஆம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை விவகாரம் ஆகும்.
கேள்வி. 2006.11.9 ஆம் திகதியன்று நீர் சாமியின் அழைப்பின் பேரில் கங்காராம பகுதிக்கு சென்றீரா? ஏன் சென்றீர் அங்கு என்ன நடந்தது?
பதில். ஆம். கங்காராம பகுதியில் உள்ள லொண்டறிவத்த பகுதிக்கு சென்றேன். அங்கு கடற்படையினரின் உளவு பிரிவு அலுவலகம் ஒன்று இருந்தது.
சாமியின் அழைப்பின்பேரிலேயே அங்கு சென்றேன். அவ்விடத்திலிருந்து அலரி மாளிகைக்கு 100 அல்லது 150 மீற்றர்களே தூரமிருக்கும். பெயர்பலகை இல்லாத போதும் 3 மாடிகளை கொண்ட அந்த இடத்தில் கடற்படையின் புலனாய்வுபிரிவின் குழுவொன்று இயங்கியது.
சாமி அறிமுகம. செய்து வைத்தவருக்கு அமைவாக அங்கிருந்த கடற்படை புலனாய்வாளர்களுடன் அறிமுகமானேன். அங்கு பதினைந்து முதல் இருபது வரையிலானோர் இருந்தனர். பிரதிவாதிகளான பிரசாத், செனவிரத்ன,வஜீர அகியோரும் அங்கிருந்தனர்.(பிரதிவாதிகளை தனித்தனியாக அடையாளம் காட்டினார்.)
கேள்வி. லொண்டறிவத்த புலனாய்வு முகாமில் நீர் என்ன செய்தீர்?
பதில். அடிக்கடி அங்கு சென்றுவந்த நான் பல தகவல்கள் குறித்து உரையாடினேன். தேநீர் அருந்தினேன்
கேள்வி.2006.11.09 ஆம் திகதி அங்கு சென்ற போது என்ன நடந்து?
பதில். அன்று மாலை 4.30 மணியளவில் அங்கு சென்றேன் அப்போது சாமி , ஹெட்டியராச்சி,சரன்,வஜீர,செனவிரத்ன ஆகியோர் இருந்தனர். அப்போது என்னை மறுநாள் காலையில் மோட்டார் சைக்கிளில் பொரளை கனத்தை பகுதிக்கு வருமாறு கூறினர்.
கேள்வி. வரச் சொன்னதற்கான காரணத்தை கூறினார்களா?
பதில். ஆம் நாளை புலிகளின் தலைவர் ஒருவரை கொள்ளப்போகிறோம். வருகிறீர்களா எனக்கேட்டனர். நான் சம்மதம் தெரிவித்தேன்.
கேள்வி. . சாமி உமக்கு தந்த மோட்டார் சைக்கிள் எது?
பதில். பல்ஸர் ரக சிவப்பு நிற சைக்கில்.இரண்டு தலைக்கவசங்களும் இருந்தன. சாமிக்கு மேலதிகமாக காலை 6. மணிக்கு குறித்த இடத்திற்கு வருமாறு வஜீரவும் கூறினார்.
கேள்வி. நீர் அங்கு போனீரா?
பதில் ஆம். மறுநாள் காலை 6.00 அல்லது 6.15 மணியளவில் அங்கு சென்றேன்.
இதனையடுத்து நேற்றை சாட்சி விசாரணைகளை முடிவுறுத்துவதாக நீதிபதி மணிலால் வைத்தியதிலக அறிவித்தார். அதன்படி சாட்சி விசாரணைகள் இன்றய தினமும் இடம்பெறுமென அவர் அறிவித்தார்.
நேற்றய விசாரணைகளின் போது முறைப்பாட்டாளர் தரப்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிடர் ஜெனரால் ரொஹான் த அபேசூரியவும் பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான அனோஜ பிரேமரத்ன, அசித் சிறிவர்தன உள்ளிட்டோரும் ஆஜராகியிருந்தனர். இன்றைய விசாரணைகள் தொடரும் வரையில் பிரதிவாதிகளையும் பிரதான சாட்சியாலரையும் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.