முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளன்று 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்றி சக்திமிக்க – நிலையான அரசு என்பதை தேசிய அரசு நிரூபித்துள்ளது என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்.
“கடந்த நவம்பர் 18ஆம் திகதி குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷவின் 72ஆவது பிறந்த தினமாகும்.
அதற்கு அடுத்தநாள் 19 ஆம் திகதி முக்கிய நாள். அன்றுதான் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவின் பவிக்காலம் முடியும் காலமாகும்.
நாட்டு மக்களின் அதிஷ்டம், சுமனதாஸவின் (மஹிந்தவின் ஆஸ்தான சோதிடர்) கணிப்பு மற்றும் பி.பி.ஜயசுந்தரவின் (முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர்) பொருளாதார நடவடிக்கை என்பவற்றால் 2 ஆண்டுகளுக்கு (பதவிக்காலம் நிறைவடைவதற்கு) முன்னரே தேர்தலுக்கு மஹிந்த ராஜபக்ஷ சென்றார்.
இதனூடாக அந்த அடக்குமுறை யுகத்துக்கு முடிவுகட்ட முடிந்தது. தேசிய அரசின் வரவு – செலவுத் திட்டம் கடந்த 18ஆம் திகதிதான் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
2ஆவது வரவு – செலவுத் திட்டத்தையும் நிறைவேற்றி எமது அரசு சக்திமிக்க- நிலையான அரசு என்பதை எம்மால் காட்டமுடிந்துள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.