விஜேவீரவை நினைவு கூர முடியுமென்றால் ஏன் பிரபாகரனை நினைவுகூர முடியாது? எனக் கேள்வி எழுப்பும் வாசுதேவ நாணயக்கார எம்.பி. மாவீரர் அனுஷ்டிப்பு என்ற போர்வையில் தனித் தமிழீழத்தை அனுஷ்டிப்பதை எதிர்க்கின்றேன் என்றும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மஹிந்த அணி ஆதரவு எம்.பியான வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்;
இலங்கையில் இரண்டு தடவைகள் கிளர்ச்சிகளை மேற்கொண்ட விஜேவீரவின் மறைவை அனுஷ்டிக்கின்றனர்.
இதற்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. அவ்வாறானதொரு சூழ்நிலையில் பிரபாகரன் உயிர்நீத்த தினத்தை அனுஷ்டிப்பதில் என்ன தவறு ? இதில் தவறேதும் இல்லை. ஜே.வி.பி. யும் ஒரு காலத்தில் தடைசெய்யப்பட்டிருந்தது.
பிரபாகரன் இறந்த தினம் அனுஷ்டிக்கப்படலாம். அதேவேளை யுத்தத்தில் உயிர்நீத்த மக்களை அனுஷ்டிப்பது தார்மீக கடமை. அதற்கு தடைவிதிக்கலாகாது. ஆனால் இதன் போர்வையில் இலங்கைக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்டவர்களை நினைவு கூருவதும், தனித் தமிழீழத்தை நினைவு கூருவதும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது.
இந்த இரண்டு விடயங்களும் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளன என்றார்.
வடக்கில் மாவீரர்கள் தின நிகழ்வுகள் ; ராவணா பலய எச்சரிக்கை
வடக்கில் சிறப்பாக இடம்பெற்ற உயிரிழந்த விடுதலை புலிகள் உறுப்பினர்களை நினைவு கூரும் மாவீரர்கள் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் , பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கைகள் எவ்விதமாக அமைய போகின்றது என கேள்வி எழுப்பியுள்ள ராவணா பலய , நாட்டை துண்டாடும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்ற நல்லாட்சி அரசாங்கத்தின் உத்தேச புதிய அரசயிலமைப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க போவதாகவும் அறிவித்துள்ளது.
ராவணா பலயவின் செய்தியாளர் மாநாட்டில் இன்று கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாது தெரிவிக்கப்பட்டது. இதன் போது உரையாற்றிய இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் கூறுகையில் ,
வடக்கில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் மௌனிக்கின்ற நிலையில் தென்னிலங்கையில் சிறிய சம்பவம் என்றாலும் கைதுகள் இடம்பெறுகின்றன.
வடக்கில் 270 திற்கும் மேற்பட்ட பௌத்த விகாரைகள் காணப்படுகின்றன. அதனை விக்ணேஷவரன் அறியாமலிருக்க வாய்ப்பில்லை. அவற்றை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வடக்கில் காணப்படும் விகாரைகள் தொடர்பில் கண்காணித்து அவற்றை மறுசீரமைத்து விகாராதிபதிகளை அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு செய்யவிடின் தொல்பொருள் ஆராச்சி தினைக்களத்தினால் அவை ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்பட்டு அழிக்கப்படலாம்.
மேலும் மாவீரர் அனுஷ்டிப்புகளில் ஈடுப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டை பிளவுப்படுத்தும் செயற்பாட்டினையே அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
எனவே நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அனைவரும் முன்வரவேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.