கொச்சி: பெண்களை பலாத்காரம் செய்பவர்களின் ஆண்மையை நீக்குவது தான் அவர்களுக்கு அளிக்கும் சரியான தண்டனை என நடிகை மீரா ஜாஸ்மீன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தந்தையே பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடுமை கூட கலாச்சாரம், பண்பாட்டிற்கு பெயர் போன இந்தியாவில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து நடிகை மீரா ஜாஸ்மீன் கொச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாலியல் பலாத்காரம் செய்பவர்களின் ஆண்மையை நீக்குவது தான் அவர்களுக்கு அளிக்கும் சரியான தண்டனை.
அவ்வாறு செய்தால் தான் பெண்களை தொட பயம் வரும். தற்போது இருக்கும் சட்டங்கள் பலாத்கார குற்றங்களை தடுக்க சரியானவை இல்லை என்றார்.
பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பத்து கல்பனாக்கள் மலையாள படத்தில் மீரா ஜாஸ்மீன் நடித்துள்ளார்.
இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தான் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.