தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் தனது மகன் வேறு சமூகத்துப் பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்ததால் அப்பெண்ணை கொடூரமாக கொலை செய்த பெற்றோர் 3 மாதங்களுக்கு பின் பொலிஸில் சிக்கியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பரமத்தியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 52).
இவர் அங்குள்ள பிள்ளைகளத்தூர் அருகே செங்கல்சூளையில் பணி புரிந்து வந்துள்ளார்.
இவருடைய மனைவி சுமதி (41). இவர்களுக்கு சூர்யா (24) என்ற மகன் உள்ளார்.
வில்லிபாளையத்தை சேர்ந்த ரவி என்பவரின் மகள் சௌந்தர்யா (21). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக சௌந்தர்யா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூர்யாவுக்கும், சௌந்தர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதையடுத்து, செளந்தர்யா சூர்யாவுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது சூர்யாவின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை.
இந்த நிலையில், சூர்யாவின் பெற்றோர் கடந்த ஆகஸ்ட் மாதம் வில்லிபாளையத்திலுள்ள அவரது தாயிடம் சௌந்தர்யாவை ஒப்படைத்து விடுவதாக சூர்யாவிடம் கூறிவிட்டு அழைத்துச் சென்றுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சௌந்தர்யாவை பார்ப்பதற்காக சூர்யா வில்லிபாளையத்துக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் இல்லாததால், சௌந்தர்யாவின் தாய் தங்கம்மாளிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சௌந்தர்யா இங்கு வரவே இல்லை என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சூர்யா, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சௌந்தர்யாவை எனது பெற்றோர் அழைத்து வந்து உங்களிடம் ஒப்படைத்து விட்டனர் என்று கூறிச்சென்றுள்ளார்.
வீட்டுக்குச் சென்ற சூர்யா, சௌந்தர்யா குறித்த தனது பெற்றோரிடம் விசாரித்தபோது, அவர் தனது வீட்டிற்கு செல்லப்பிடிக்காமல் திருப்பூருக்கு சென்று விட்டதாக கூறியுள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த சூர்யா , இது குறித்து கடந்த 23ஆம் திகதி பரமத்தி பொலிஸ் நிலையத்தில், “சௌந்தர்யாவை கடந்த 3 மாதங்களாக காணவில்லை” என முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாட்டின் பேரில்,பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக சூர்யா, அவரது பெற்றோர் மனோகரன், சுமதி ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணையில், தனது மகனின் நலன் கருதி தாயிடம் ஒப்படைத்துவிட்டு வருவதாக கூறி சூர்யாவின் பெற்றோர் சௌந்தர்யாவை பிள்ளைக்களத்தூரில் உள்ள செங்கல்சூளைக்கு முச்சக்கரவண்டியில் அழைத்துச்சென்றுள்ளனர்.
அங்கு அவர்கள் 2 பேரும் சேர்ந்து சௌந்தர்யாவை, கொடூரமாக தாக்கி அவர் அணிந்திருந்த சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், சௌந்தர்யாவின் சடலத்தை அப்பகுதியில் குழி தோண்டி புதைத்த திடுக்கிடும் தகவலும் வெளியானது.
இதையடுத்து சடலம் பரமத்திவேலூர் துணை பொலிஸ் சுஜாதா, விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு, சேலம் அரச வைத்தியசாலை வைத்தியர்கள் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.
இந்தக் கொலை தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவின் பெற்றோரை நேற்றுமுன்தினம் கைது செய்துள்ளனர்.