அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவு சமீபத்தில் வெளியானதையடுத்து இலங்கையில் இருந்து பலவிதமான கோணங்களில் டொனால்ட் ட்ரம்ப் நோக்கப்பட்டார்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஹிலாரி கிளின்டன் எப்போதுமே மென்மையான போக்குக் கொண்டவர்.
இதனை இன்னும் விளக்கமாகக் கூறுவதானால், விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாகவும் ஹிலாரி கிளின்டன் ஆரம்பத்திலிருந்து ஆதரவான நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வந்தவர்.
இத்தேர்தலில் ட்ரம்ப் வெற்றியீட்டியிருப்பதனால் அவரது அரசியல் எதிராளியான ஹிலாரியை நேசித்த விடுதலைப் புலிகளின் அனுதாபிகளுக்கு உண்மையிலேயே ஏமாற்றமும் வருத்தமும்தான்.
புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களுக்கோ அல்லது இலங்கையில் வாழும் புலிகளின் அனுதாபிகளுக்கோ ட்ரம்ப் ஈட்டிய வெற்றியில் உடன்பாடு கிடையாது.
இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டையே இனிமேல் ட்ரம்ப் கடைப்பிடிக்கப் போகிறாரென்றே தமிழர்கள் இப்போது கருதுகின்றார்கள்.
இவ்வாறான கண்ணோட்டம் ஒரு வகையானது.இது தவிர, இலங்கையில் உள்ள அரச விரோத எதிர்ச் சக்திகள் ட்ரம்ப்பின் வெற்றியை வேறு விதமாக எண்ணிக் குதூகலிக்கின்றன.
இலங்கையில் தேசியவாதம் என்ற போர்வையில் இனவாத ஆதரவுச் சக்திகள் தங்களையும் ட்ரம்ப்பையும் ஒரே குறிக்கோள் கொண்ட சமாந்தரமான கொள்கையாளர்களென்றே கருதுகின்றன.
தேசியவாதத்தை முன்னிறுத்தி தேர்தலில் குதிக்கின்ற போது, சிறுபான்மையினரின் ஆதரவில் தங்கியிருக்க வேண்டியதில்லை என்பதே இலங்கையிலுள்ள இனவாதிகள் முன்வைக்கின்ற வாதம்.
அதாவது எதிர்வரும் காலங்களில் இலங்கையில் நடைபெறப் போகின்ற தேர்தல்களில் தமிழ், முஸ்லிம் மக்களின் தயவைப் பெறாதபடி, சிங்கள மக்களின் தனியான ஆதரவுடன் அரசாங்கம் உருவாக வேண்டுமென்பதே இங்குள்ள இனவாத சக்திகளின் விருப்பம்.
ட்ரம்பின் வெற்றியையடுத்து இவர்கள் தங்களது உள்ளக் கிடக்கையை வெளிப்படையாகவே எடுத்துக் கூறியிருந்தனர். இவ்வாறான பார்வை வேறொரு வகையானது.
உலகெங்கும் வாழும் முஸ்லிம்களைப் போன்று இலங்கை முஸ்லிம்களுக்கும் ட்ரம்ப் மீது மிகுந்த வெறுப்பு உண்டு.
ஐ.எஸ். ஐ.எஸ். போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்கு மாத்திரமே ட்ரம்ப் எதிரானவரென்று கூறி விட முடியாது.
சாதாரண முஸ்லிம்களுக்கு வெறுப்பேற்றுகின்ற வகையிலும் தேர்தல் காலத்தில் வெளிப்படையாக அவர் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.
எனவே இலங்கை முஸ்லிம்கள் புதிய அமெரிக்காவை எவ்வாறான கோணத்தில் அவதானிக்கின்றார்களென்பதை இங்கு கூற வேண்டியதில்லை.
இறுதியாக நாம் இலங்கை அரசின் கண்ணோட்டத்தையே இங்கு அவசியமாக ஆராய வேண்டியிருக்கிறது.
உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தின் போது, இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக இன்றைய அரசாங்கம் கடந்த சுமார் இரு வருடங்களாகவே கடுமையான போராட்டம் நடத்தி வருகின்றது.
ஐ.நா.வின் நிபந்தனைகள், நெருக்குதல்கள் மாத்திரமன்றி சர்வதேசத்தின் கெடுபிடிகளும் இன்னும் தொடர்ந்தபடியே இருக்கின்றன.
ஐ. நா.வில் ஏற்படக் கூடிய எந்தவொரு தலைமைப் பதவி மாற்றமும் இலங்கையின் விவகாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லையென்பதை கடந்த காலம் உணர்த்தியிருக்கிறது.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பதவிக் காலம் முடிவுக்கு வரவிருக்கின்ற போதிலும், புதிய செயலாளரின் நிர்வாகத்தின் கீழும் இலங்கை விவகாரம் தொடர்பான ஐ. நா. வின் போக்கு மாற்றமடையப் போவதில்லையென்பதே உண்மை.
இலங்கையானது போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறும் கடப்பாட்டைக் கொண்டுள்ளதென்பதை பான் கீ மூன் இப்போது மீண்டும் ஞாபகப்படுத்தியிருக்கின்றார்.
இதனிடையே அமெரிக்கத் தேர்தலில் வெற்றியீட்டியிருக்கும் ட்ரம்பின் உதவியை இலங்கை நாடவிருப்பதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டில் அமெரிக்காவினதும் ஐ.நா.வினதும் கடும் போக்கைத் தணிப்பதே இலங்கையின் நோக்கமாகும்.
யுத்தக் குற்றச்சாட்டுகள் விடயத்தில் சர்வதேச ரீதியில் உருவாகியிருக்கும் அழுத்தங்களைத் தணிப்பதன் மூலம், உள்நாட்டில் உருவாகவிருக்கும் நெருக்கடியில் இருந்து மீண்டு கொள்ளலாமென இலங்கை எதிர்பார்க்கின்றது.
யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச பங்களிப்புடன் விசாரணை நடத்தப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டுமென பாதிக்கப்பட்ட தமிழர்கள் தரப்பு வலியுறுத்தி வருகின்ற போதிலும், சர்வதேச அழுத்தங்களைத் தணிப்பதிலேயே இலங்கை அரசாங்கம் எண்ணம் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகின்றது.
எனவே தமிழர்களின் ஆதங்கம் தீரப் போவதில்லையென்பது உறுதியானது.
அதேசமயம், மற்றொரு யதார்த்தத்தையும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டியிருக்கின்றது.
அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளில் ஆட்சி மாற்றங்களால் தேசியக் கொள்கைகள் மாற்றம் பெறுவதில்லை.
அமெரிக்காவின் செல்வாக்கில் செயற்படுகின்ற ஐ. நா.வுக்கும் இந்த யதார்த்தம் பொருத்தமானது.
எனவே அமெரிக்காவின் ஆட்சி மாற்றமானது மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்களிலிருந்து இலங்கையை விடுவிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.