உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூத்த பத்திரிக்கையாளர் சோவிடம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் விசாரித்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா சோவை சந்தித்து உரையாடினார். அதன்பிறகு உடல்நலம் தேறி வீட்டிற்குத் திரும்பி வந்த அவர், பின்னர் ஏப்ரல் மாதம் மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சோவுக்கு மீண்டும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோவை தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நேற்று இரவு நலம் விசாரித்தனர்.