இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையின் முன்னாள் இயக்குனர் பொன்மணி குலசிங்கம் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ணில் காலமானார்.
நான்கு பிள்ளைகளின் தாயான அவருக்கு வயது 88.
இசைப் பட்டதாரியான இவர், தனது பதினான்காவது வயதிலிருந்து இசைத் திறமையைக் காட்டும் வானொலிப் பாடகியாக விளங்கினார்.
1956 ஆம் ஆண்டு சிறுவர் மற்றும் மகளிர் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக வானொலியில் சேர்ந்து கொண்ட இவர், படிப்படியாக உயர்ந்து இசைக் கட்டுப்பாட்டாளர், மேலதிக இயக்குனர், இயக்குனர் என்ற நிலையை எட்டியுள்ளார்.
பல முன்னணி அறிவிப்பாளர்கள் மற்றும் வானொலி தயாரிப்பாளர்களை அறிமுகம் செய்த பெருமை இவரைச் சாரும்.
இவரது காலம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையின் பொற்காலம் என்று பல தமிழ் ஒலிபரப்பாளர்களும் கூறுகிறார்கள்.
இவர் புகழ்பெற்ற இசையமைப்பாளர் முத்துசாமி தலைமையில் இயக்கிய இலங்கைப் பாடகர்களின் ”ஈழத்துப் பாடல்கள்” நிகழ்ச்சி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெரும் வவேற்பை பெற்ற ஒன்று. கண்டி மற்றும் யாழ் ஒலிபரப்புகளும் இவரது காலத்திலேயே அறிமுகம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.