பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்ட அந்த ‘சார்’ பாடசாலை ஆசிரியராகவும் கூட இருக்கலாம் என்று, சபை முதல்வரும் நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்க்கல்வி அமைச்சருமான லக்ஷ;மன் கிரியெல்ல, இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் ஜே.வி.பி தலைவருமான அநுரகுமார திசாநாயக்க எம்.பி,நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே, அமைச்சர் கிரியெல்ல மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முன்னதாக எழுந்த அநுரகுமார திஸாநாயக்க, ‘நான் வியாழக்கிழமையும் நாடாளுமன்றத்தில் மிகத் தெளிவான கேள்வியொன்றை எழுப்பியிருந்தேன்.
அதாவது, டிசான் குணசேகர என்பவரைக் கைது செய்ய வேண்டாம் என்று பொலிஸ் மா அதிபருக்கு சார் ஒருவர் உத்தரவிடுகிறார். அது ஊடகங்களில் வெளியானது. டிசான் விக்கிரமரட்ன குணசேகர என்பவர்,முன்னாள் பஸ்நாயக்க நிலமேயாவார்.
கடந்த ஆட்சியின் உயர்மட்ட குடும்பத்தின் உறவினரான அவர், கனிம மணல் கூட்டுத்தபானத்தின் பணிப்பாளராகவும் மற்றும் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் எஃப்.சி.ஐ.டி.யில் இருக்கிறது. அவ்வாறான ஒருவரைக் கைதுசெய்ய வேண்டாம் என்று உத்தரவிட்டது அமைச்சரா?
பொலிஸ் மா அதிபருக்கு இருக்கும் சார், அமைச்சராக இருக்க வேண்டும் அல்லது பிரதமராக இருக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.
ஆகவே, கைதுசெய்ய வேண்டாம் என்று பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்ட அந்த சார் யார்? என்பதை, பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் நாடாளுமன்றத்துக்கு வந்து தெரிவிக்க வேண்டும்’ என்று அநுரகுமார திசாநாயக்க, இதன்போது கேட்டுக்கொணட்டார்.
‘இது இவரது (அநுரகுமார திசாநாயக்கவின்) அர்த்தப்படுத்தல் மட்டுமே. அது சரியாகவும் இருக்கலாம் அல்லது தவறாகவும் இருக்கலாம். அந்த அர்த்தப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டு நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்ட முடியாது. சார் என்றால் பாடசாலையின் ஆசிரியராகவும் இருக்க முடியும். நாம் எமது ஆசிரியர்களை இன்னும் சார் என்று தான் அழைக்கிறோம்’ என்று தெரிவித்தார்.
இதேநேரம், இந்த விவகாரம் தொடர்பில் வியாழக்கிழமை சபையில் கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த சம்பவத்தின் போது பொலிஸ் மா அதிபர் நடந்துகொண்ட விதம் மிகவும் தவறானது என்றும் இது தொடர்பில் அவரிடம் விளக்கம் கோரப்படும் என்றும் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.