விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியும், மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக இருந்தவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உப தலைவருமான கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன், கடந்த வாரம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முதன்மையான தளபதிகளில் ஒருவராக இருந்த கேர்ணல் கருணா, 2004ஆம் ஆண்டு, புலிகள் அமைப்பை உடைத்துக் கொண்டு வெளியேறினார்.
அப்போது கருணாவுக்கு, ஐ.தே.க. அரசாங்கமும், அதற்குப் பின்னர் வந்த மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கமும், இராணுவப் புலனாய்வுப் பிரிவும் போதுமான பாதுகாப்பை வழங்கியிருந்தன.
விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான முக்கிய துரும்பாக அப்போது கருணா பல்வேறு உள்நாட்டு வெளிநாட்டு தரப்புகளினால் கையாளப்பட்டார்.
கிழக்கில் விடுதலைப் புலிகளை உடைத்து அவர்களின் படை பலத்தை சிதைத்தது, தமிழ்மக்கள் மத்தியில் வடக்கு, கிழக்கு என்ற பிரிவினையை ஏற்படுத்தியது, வன்னியில் புலிகளின் பலம், பலவீனம் பற்றிய இரகசியங்களை வெளியிட்டது என்பனவற்றின் மூலம், நான்காவது கட்ட ஈழப்போரை அரசாங்கத்துக்குச் சாதகமாகத் திருப்பியவர் கருணா.
அதற்காகவே அவருக்கு முன்னாள் ஜனாதிபதி ம ஹிந்த ராஜபக் ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர் பதவியையும், பிரதி அமைச்சர் பதவியையும் கொடுத்தார். எல்லா வசதிகள், வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றம், மஹிந்த ராஜபக் ஷவை எப்படி ஓரம்கட்டியதோ, அதுபோலவே,, கருணாவையும் விளிம்பு நிலைக்கு தள்ளியது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அவரது உயர் பதவி பறிக்கப்பட்டது. தேசியப்பட்டியல் ஆசனமும் வழங்கப்படவில்லை.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்த பின்னர், கருணா குழு என்ற பெயரில் செயற்பட்ட போதும், அரசியல் கட்சியாக இயங்கிய போதும், பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பாக இருந்தார் என்ற குற்றச்சாட்டு கருணா மீது உள்ளது.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கைகள், மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள் இன்னும் பல விசாரணை அறிக்கைகளில், குற்றச்செயல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களில் ஒருவராக கருணா அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.
ஆனாலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இரண்டு ஆண்டுகள் வரை கருணா, எந்த விசாரணைகளையும் சந்திக்காமல், நீதிமன்றப் படிக்கட்டுகளிலும் ஏறாமல் கழித்திருந்தார்.
கருணாவின் சகாவான பிள்ளையான் எனப்படும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், பல மாதங்களாக சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அடைபட்டுக் கிடக்கின்ற போதும், கருணாவின் சுதந்திரத்துக்கு தடையேதும் ஏற்படுத்தப்படவில்லை.
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து வலியுறுத்தப்பட்டபோது, கருணாவும், கே.பியும் சுதந்திரமாக உலாவும் போதும், அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பதில் அர்த்தமில்லை என்று அமைச்சர்களே பகிரங்கமாக கூறியிருந்தனர்.
கே.பியும், கருணாவும் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய பிரமுகர்கள் என்ற அடிப்படையிலேயே அந்தக் கருத்து வெளியிடப்பட்டது.
எனினும், கே.பி. மலேஷியாவில் பிடிபட்டு, கொழும்பு கொண்டு வரப்பட்ட பின்னர், தனியான ஆயுதக்குழுவை வைத்து செயற்படவோ, மீறல்களில் ஈடுபட்டதான குற்றச்சாட்டுகளைச் சந்திக்கவோ இல்லை.
ஆனால், கருணாவின் தலைமையில் ஒரு ஆயுதக் குழு இயங்கியது.
அதனை அவர் முன்னர் சில ஊடகப் பேட்டிகளில் மறுத்திருந்தார். எனினும், ரவிராஜ் கொலை வழக்கின் அரசத்தரப்புச் சாட்சி கூட, கருணா குழுவுடன் தாம் சேர்ந்து இயங்கியதை உறுதி செய்திருக்கிறார், தாம் கருணாவைச் சந்தித்ததையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
கருணா குழு என்ற பெயரில் கிழக்கிலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஏராளமான மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்பட்டன.
ஆட்கடத்தல்கள், கப்பம் பெறுதல், கொலைகள் என்று ஏராளமான குற்றச்சாட்டுகள் கருணா குழு மீது சுமத்தப்பட்டன, அவர் அதனை ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. அதனை நிராகரித்தார்.
இத்தகைய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் தொடர்புபட்டவராக இருந்தாலும், இப்போதைய அரசாங்கமும், கருணாவைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தியே வந்தது.
ஆனால், கடந்தவாரம் கருணா திடீரென நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டார். வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்ட அவர் உடனடியாகவே கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
இதையடுத்து, டிசம்பர் 7ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படும் போது, “இத்துப்போன வாகனத்துக்காக கைது செய்திருக்கிறார்கள், விரைவில் வெளியே வந்து விடுவேன்” என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியபடி தான் கருணா சென்றிருந்தார்.
மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில், ஹொங்கொங்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, 800 மில்லியன் ரூபா பெறுமதியான குண்டுதுளைக்காத வாகனம் ஒன்றே கருணாவை சிறைக் கம்பிகளுக்குள் தள்ளிச் சென்றிருக்கிறது.
அப்போதைய ஜனாதிபதியின் செயலாளரினால் இறக்குமதி செய்யப்பட்ட இந்த வாகனம், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை. இலக்கத்தகடும் இருக்கவில்லை.
இதனால், ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், அந்த வாகனத்தை கருணா தனது சாரதியின் மூலம் மட்டக்களப்பு கிரானில் உள்ள ஒரு வாகனத் திருத்துமிடத்தில் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகின்றது.
இரண்டு ஆண்டுகளாக மறைந்து கிடந்த அந்த வாகனம், கடந்த மாத முற்பகுதியில் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் தான், கருணாவுக்கு தொடங்கியது பிரச்சினை.
இந்த வாகனம் தொடர்பாகவும், இதனை பதிவு செய்யாமல் என்ன தேவைக்குப் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டன.
இதன் தொடர்ச்சியாகவே, அரச வாகனத்தை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கருணா கைது செய்யப்பட்டார். கருணா மீது இதற்கு முன்னர் கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டுகளுடன் ஒப்பிடுகையில், அவர் கைது செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு மிகச் சிறியது.
அதனால் தான், கருணா “இத்துப் போன வாகனத்தை வைத்து கைது செய்திருக்கிறார்கள், விரைவில் வெளியே வந்து விடுவேன்” என்று நம்பிக்கையோடு கூறிச் சென்றார்.
கருணா இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டமை திட்டமிட்ட ஒரு நடவடிக்கை என்று கூறப்பட்டாலும், இது ஒன்றை மறைப்பதற்காக செய்யப்பட்ட இன்னொரு செயல் போலவே தெரிகிறது.
கடந்த மாதம் 29ஆம் திகதி கருணா கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, கடந்த 23 ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், விசேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை தளபதியான ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் கே.எல்.எம்.சரத்சந்திர கைது செய்யப்பட்டிருந்தார்.
பிரதி பொலிஸ்மா அதிபர் கே.எல்.எம்.சரத்சந்திர, மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் இருந்த போது, அவரது பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராகவும் முன்னர் பணியாற்றியிருந்தார். தற்போது கூட ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில், பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வருகிறார்.
இவரது கைது அரசியல் மட்டங்களில் பெரியளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஏனென்றால், ஓய்வுபெற்ற பின்னர், விசேட அதிரடிப்படையின் வாகனத்தைப் பயன்படுத்தி, அரசாங்கத்துக்கு 140,000 ரூபா இழப்பை ஏற்படுத்தினார் என்பதே இவர் மீதான குற்றச்சாட்டு.
பல நூறு கோடி ரூபா மோசடிகளை செய்தவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள், அரசாங்க சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் பலரும், சுதந்திரமாக உலா வந்து கொண்டிருக்கும் போது, பிரதி பொலிஸ்மா அதிபர் கே.எல்.எம்.சரத்சந்திர மட்டும் கைதானதன் பின்னணி பலருக்கும் சந்தேகங்களை ஏற்படுத்தியது.
போரின் இறுதிக்காலகட்டத்தில், விசேட அதிரடிப்படைத் தளபதியாக இருந்த இவர், கிழக்கில் புலிகளின் கடைசி அணிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்.
போரில் பங்கெடுத்த தளபதி ஒருவர், சாதாரணமான ஒரு குற்றத்துக்காக கைவிலங்கிடப்பட்டு கொண்டு செல்லப்பட்ட காட்சி ஊடகங்களில் வெளியானபோது, தெற்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம், ஜனாதிபதியின் கவனத்துக்கு சென்றபோது, பொலிஸ் மா அதிபரிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினார் என்றும், செய்திகள் வெளியாகின.
எனினும், அடுத்தடுத்த நாட்களிலேயே பிரதி பொலிஸ்மா அதிபர் கே.எல்.எம்.சரத்சந்திர பிணையில் விடுவிக்கப்பட்டார். ஜனாதிபதியின் அறிவுறுத்தலே அதற்குக் காரணமாக இருக்கலாம்.
ஏற்கனவே, சில வழக்குகளில் கைதான இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் விடயத்திலும், ஜனாதிபதி அதிருப்தி வெளியிட்ட சில நாட்களிலேயே அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டமை நினைவிருக்கலாம்.
எவ்வாறாயினும், பிரதி பொலிஸ்மா அதிபர் கே.எல்.எம்.சரத்சந்திரவின் கைது அரசாங்கத்துக்கு அழுத்தங்களை ஏற்படுத்தியிருந்தது. அதன் மீதான கவனத்தை திசை திருப்பவே, அதே குற்றச்சாட்டில் கருணாவின் கைது நடந்திருக்கிறது.
கருணா மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்ற நிலையில், வாகனத்தை துஷ்பிரயோகம் செய்தார் என்று சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு மிகச் சிறியது.
அதேவேளை, கருணாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அரசாங்கம் விசாரணை செய்யும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தாலும், அதற்கான தருணம் இப்போது வந்து விட்டதா என்று தெரியவில்லை.
ஏனென்றால், கருணாவை முன்னர், பயன்படுத்திக் கொண்டவர்களில் பலர் இன்னமும் அதிகாரத்தில் இருக்கின்றனர். அவர்கள் கருணாவை நெருக்கடியில் சிக்கவைத்து வேடிக்கை பார்க்கமாட்டார்கள்.
அவர்கள் ஏவிய அம்பு தான் கருணா. எனவே, அந்த அம்பு எங்கிருந்து ஏவிவிடப்பட்டது என்ற இரகசியங்கள் அம்பலமாவதை, அவரைப் பயன்படுத்திக் கொண்ட எவரும் நிச்சயம் விரும்பமாட்டார்கள்.
இந்தக் கவசம் தான் கருணாவை இதுவரையில் பாதுகாத்து வந்தது. இனிமேலும் அதுவே கருணாவின் பலமாக இருக்கும்.
மனித உரிமை காரணங்களுக்காக கருணாவை சிறைக்குள் தள்ளும் திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் இன்னும் வலுவான குற்றச்சாட்டுகள் அவர் மீது தொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
அவ்வாறான குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான சூழல் ஒன்று உருவாகி வருவதாகவே தெரிகிறது. சில கொலை வழக்குகளின் விசாரணைகளில் வெளிப்படும் தகவல்கள், கருணாவுக்கு பெரும் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடியவை.
விடுதலைப் புலிகளின் தளபதியாக இருந்த காலத்தில் கருணாவுக்குப் பெரும் மதிப்பும் மரியாதையும் காணப்பட்டது. ஆனால், புலிகளை உடைத்து, அரசாங்கத்துடன் இணைந்த பின்னர் கருணா தனது எல்லா மதிப்பையும் இழந்து போனார்.
அதனால் தான், கருணாவின் கைது, தமிழ் மக்கள் மத்தியில் எந்த மட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கவில்லை.
-சுபத்திரா-