எந்தவொரு இடத்திலும் புத்தர் சிலையை வைப்பதற்கோ அல்லது அதனை வழிபடுவதற்கோ முழுமையான உரிமை உள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
எனினும், பௌத்த மதத்தை வழிபடும் மக்கள் இல்லாத பகுதிகளில் அச்சுறுத்தும் வகையில் புத்தர் சிலைகளை வைப்பதே முரண்பாட்டு நிலைமையை ஏற்படுத்தியிருக்கின்றது என அவர் சபையில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் பௌத்தவிவகார அமைச்சு, தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சு மற்றும் சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சுக்கள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் தென் பகுதிகளில் பல பௌத்த விஹாரைகள் பொருளாதாரமின்மை காரணமாக மூடப்பட்டு வந்தமையை ஊடகங்கள் ஊடாக அறிந்துள்ளோம்.
இவை சிறிய விஹாரைகளாக இருந்தும், அவற்றால் அந்தந்த பகுதிகள் ,-கிராமங்கள் மத, கலாசார, பண்பாட்டு விழுமியங்களால் கட்டியெழுப்பப்பட்டு வந்தன என்பது உண்மையே.
எனவே, இந்த நிலைமைகள் தொடராமல், அந்தக் கட்டமைப்பினை உறுதிப்படுத்தவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
குறிப்பாகக் கூறப் போனால், இவ்வாறான சிலரது செயல்கள் காரணமாக கௌதம புத்த பெருமானின் சிலை என்பது ஓர் ஆக்கிரமிப்பின் அடையாளமா என ஒரு சாரார் நினைக்கும் அளவுக்கு மாறியிருப்பதால், கௌதம புத்த பெருமானின் மகிமை மதிக்கப்பட வேண்டிய நிலையில் அது, சில இனவாதிகளின் குறுகிய சுயலாபங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு, புத்தரின் மகிமை புறக்கணிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.