ஹம்பாந்தோட்டை தொழிற்சாலை வலையமைப்பு மற்றும் கொழும்பு நிதி நகரத்தில் முதலீட்டிற்காக வரும் வெளிநாட்டவர்களுக்கு அவசியமான அனுமதி மற்றும் வசதிகள் ஒருநாளில் வழங்கப்படவுள்ளது.
இந்த வேலைத்திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் முதலீடு செய்வதற்காக வரும் வெளிநாட்டவர்களுக்கு துரிதமாக வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது வரலாற்றின் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
அந்த வேலைத்திட்டத்தில் செயற்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலித் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை தொழிற்சாலை பகுதியில் குறைந்த பட்சம் பாரிய அளவிலான 400 தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. முதல் இரண்டு வருடத்தினுள் 2 இலட்ச வேலைவாய்ப்புகள் அங்கு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கொழும்பு நிதி நகரத்திற்காக உலகின் பொருளாதாரத்தில் முன்னிலை வகிக்கும் பிரபல 5 நாடுகளில் மூன்று நாடுகளான சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஒரே முறை இணைந்து இலங்கை வரவுள்ளது.
இந்தியாவின் சென்னை மற்றும் டுபாய்க்கு இடையிலான தென் பசிபிக் பிராந்தியத்தின் பாரிய பொருளாதார மத்திய நிலையமாக நிர்மாணிக்கப்படுகின்ற கொழும்பு நிதி நகரத்தின் மூலம், முதல் இரண்டு வருடத்தினுள் 3 லட்சத்து 80 ஆயிரம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உலகின் வலுவான நாணயங்களான அமெரிக்க டொலர், சீனா யுவான், சிங்கப்பூர் டொலர், இந்திய ரூபாய், ஜப்பான் யென், தாய் பாத், பிரித்தானியாவின் ஸ்ரேலிங் பவுன், ஐரோப்பாவின் யூரோ ஆகியவைகள் இங்கு பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்க முக்கிய விடயமாகும்.
சீனா ஜப்பான் மற்றும் இந்தியாவுக்கு மேலதிகமாக சிங்கப்பூர், தென்கொரியா, மலேஷியா, ஹொங்கொங் ஆகிய பிரதான நாடுகளின் வாடிக்கையாளர்கள் கொழும்பு நிதி நகரத்திற்கு வருகைத்தருவது விசேடமான விடயமாக கருதப்படுகின்றது.