வவுனியாவில் தமிழ் இளைஞனொருவரை தாக்கி தனியார் பேரூந்தில் சாரதியும் நடத்துனரும் கடத்திச்சென்றதாக படுகாயமடைந்த இளைஞனின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக உறவினர்கள் மூலம் தெரியவருவதாவது,
வவுனியா நகர பேரூந்து நிலையத்தில் த.சுபராஜ் என்ற 26 வயது இளைஞன் நடத்தி வரும் உணவகத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்ற வவுனியா கொழும்பு வழித்தடத்தில் பயணிக்கும் தனியார் பேரூந்தின் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட்ட பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிலர் பிளேன் டீ கேட்டுள்ளனர்.
அங்கு வழங்கப்பட்ட பிளேன் டீ சூடாக இல்லை என இவ் இளைஞனுடன் வாய்த்தர்க்கப்பட்டு சென்ற அவர்கள் மறுநாள் இரவு 10.30 மணியளவில் குறித்த இளைஞன் உணவகத்தில் தனியாக நிற்பதை அவதானித்து பேச வருமாறு குறித்த தனியார் பேரூந்து சாரதி மற்றும் நடத்துனர்கள் அழைத்துள்ளனர்.
இந் நிலையில் சமரசம் செய்வதற்காக அழைப்பதாக நினைத்து சென்ற இளைஞன் மீது இரும்புக்கம்பியால் அங்கிருந்த சிலர் தாக்கி மயக்கமடையச்செய்துள்ளதுடன் இளைஞனை தமது பேரூந்தில் தூக்கி போட்டு மதவாச்சி நோக்கி சென்றுள்ளனர்.
இந் நிலையில் குறித்த பகுதியில் பல பெரும்பான்மை இனத்தவர்கள் நின்ற போதிலும் கச்சான் விற்பனையில் ஈடுபடும் ஒருவர் குறித்த உணவகத்திற்கு வந்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
இதனையடுத்து கடையில் இருந்தவர்கள் குறித்த பகுதிக்கு சென்ற சமயம் தனியார் பேரூந்து மதவாச்சி நோக்கி உள் மின் விளக்கை அணைத்து விட்டு செல்வதை அவதானித்து மோட்டார் சைக்கிளில் பின் சென்றுள்ளனர்.
இதனால் உசாரடைந்த தனியார் பேரூந்து சாரதியும் நடத்துனரும் குறித்த இளைஞனை ஈரப்பெரியகுளம் பகுதியில் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து இளைஞனை உறவினர்கள் வவுனியா அழைத்து வந்து வைத்தியசாலையில் சேர்ப்பித்த நிலையில் தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.