வாசகர்களே!
2017ம் ஆண்டின் நுழை வாயிலில் நிற்கும் நாம் 2007ம் ஆண்டின் ஆரம்ப நிகழ்வுகளோடு இப்போது வரலாற்றினை ஆரம்பிக்கிறோம்.
தற்போது 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் பல சம்பவங்கள் மிக விரைவாகவே நடந்தேறியுள்ளன.
விடுதலைப் புலிகளின் தோல்வியும், அநியாய மரணங்களும், சர்வதேச அரசுகளின் சூழ்ச்சிகள், மகிந்தவின் தோல்வியும், மைத்திரியின் வெற்றியும், அரசியல் அமைப்பு மாற்றங்களும், கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறைகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும் என வரலாறு நீழ்கிறது.
எரிக் சோல்கெய்ம் இன் கருத்துப்படி 2007ம் ஆண்டு நான்காவது ஈழப் போரின் ஆரம்பமாகவே கொள்கிறார்.
2006ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் கண்காணிப்புக் குழுவினர் வட மாகாணத்திலிருந்து வெளியேறியமை குறித்து முன்னாள் அமெரிக்க தூதுவர் றொபேர்ட் பிளேக் ( Robert O. Blake ) தெரிவிக்கையில்…
“வடமாகாணத்தில் நடைபெறும் சம்பவங்கள் கற்பனையா? அல்லது யதார்த்தமா? என்பதைப் பகுத்துப் பார்ப்பதற்கான சுயாதீனமான சாட்சியத்தைத் தந்தவர்கள் கண்காணிப்புக் குழுவினர் என அவர் வர்ணித்திருந்தார்.
அதாவது அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து புலிகளும், அரச தரப்பினரும் மாறி மாறி குற்றம் சாட்டிய நிலையில் உண்மையைக் கண்டறிவது மிகவும் பிரச்சனைக்குரியதாக இருந்தது.
கண்காணிப்புக் குழுவினர் அங்கு இல்லை எனில் பொய்களும், புனைவுகளுமே இன்றைய வரலாறாக மாறியிருக்கும்.
2007ம் ஆண்டின் ஆரம்பம் பொதுப் போக்குவரத்தான பஸ் வண்டிகளிலும், ரயில் வண்டிகளிலும் பயணம் செய்தவர்களே புலிகளின் இலக்காக மாறினார்கள்.
கொழும்பிற்கு அண்மையிலுள்ள நித்தம்புவ பகுதியில் ஜனவரி 5ம் திகதி பஸ் வண்டிக்குள் குண்டு வைக்கப்பட்டது.
அடுத்த 24 மணித்திலாங்களில் கிக்கடுவ என்ற உல்லாச பயணிகள் அதிகமுள்ள பகுதியில் குண்டு வெடித்தது.
இவ் இரு பகுதிகளிலும் இடம்பெற்ற மரணங்கள் சிங்களப் பகுதிகளில் மிகுந்த பீதியை ஏற்படுத்தியது. புலிகளின் தாக்குதல்கள் எங்கு நடைபெறும் என்பதைத் தீரமானிக்க முடியாத பயத்தில் மக்கள் வாழ்ந்தனர்.
ஜனவரி நடுப்பகுதியில் வாகரைப் பகுதியைக் கைப்பற்றியுள்ளதாக ராணுவம் அறிவித்தது. இவ் அறிவித்தல் அங்கு ஏற்பட்டுள்ள மனித அவலத்தை உணர்த்தியது.
பெப்ரவரி மாதமளவில் முதல் 10 மாதங்களில் உள் நாட்டில் இடம்பெயர்ந்தோர் தொகை 210,000 ஆகியது.
இதனால் மொத்த அகதிகளின் தொகை 500,000 ஆகியது.
இதற்கிடையில் வாகரையில் தோல்வியைத் தழுவிய புலிகளின் கொடுமைகள் அம்பலமாகின.
வைத்தியசாலைக்கு அண்மையில் மக்களைக் கேடயமாக்கி காயமடைந்த போராளிகளுக்கு சிகிச்சை பெற்றனர்.
எந்த மக்களுக்காக போராடுவதாக கூறினார்களோ அந்த மக்கள் இன்று கீழே தள்ளப்பட்டு தமது நலன்களுக்கே முன்னுரிமை கொடுத்தனர்.
ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தமது நோக்கம் பொது எதிரியை ஒழித்து தாயகத்தினைப் பாதுகாப்பதே.
இதன் மூலம் நாட்டில் சமாதானத்தையும், அமைதியையும் ஏற்படுத்தி சகலரும் மகிழ்ச்சியான வாழ்வை அனுபவிப்பதை உறுதிப்படுத்துவதாகவும் என்றார்.
இப் பின்னணியில் ஜனவரி இறுதிப் பகுதியில் காலியில் இடம்பெற்ற நன்கொடை வழங்கும் நாடுகளின் தூதுவர்களின் சந்திப்பின் போது மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் இயக்குனர் டாக்டர். பாக்கியசோதி சரவணமுத்து அவர்கள் உரையாற்றும்போது
அரசாங்கம் அதிகார பரவலாக்த்தை வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதை விட, பாராளுமன்றத்தில் தனது பலத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளிலேயே அதிக ஆர்வம் செலுத்துகிறது.
அதாவது ஜனவரி 28ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 18 பாராளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த 6 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இணைந்த செய்தியைத் தொடர்ந்தே இக் கருத்தை அவர் வெளியிட்டார்.
இவ்வாறு குறிப்பிட்ட பாக்கியசோதி சரவணமுத்து அவர்கள் புலிகள் தரப்பு குறிப்பிடத்தக்க அளவிற்குப் பலவீனமாக இருப்பதாக குறிப்பிட்டு இதனை மேலும் பலவீனமாக்குவதே அரசின் அணுகுமுறை எனவும், அதனை மேலும் தொடரச் செய்வதே நோக்கம் என்றார்.
அரச தரப்பினர் ஒரு புறத்தில் சமாதானத்தைத் தருவதாகவும், மனித உரிமைகளைப் பேணுவதாகவும் கூறிக்கொண்டு ராணுவத் தீர்வை நோக்கிய அடக்குமுறை அரசியலை நடத்த எண்ணுவதாக குறிப்பிட்டார்.
அரசாங்கம் சர்வதேச அரசுகளின் அறிக்கைகளை அலட்சியப்படுத்துவதையும் போக்காக கொண்டுள்ளதாக தெரிவித்த அவர் அரசாங்கம் மாற்று ஏற்பாடுகளையும் செய்து வருவதாக அதாவது சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளிடமிருந்து ஆயுதங்களைப் பெற ஏற்பாடுகளைச் செய்வதாகவும் குறிப்பிட்டார்.
இக் கருத்தரங்கில் கலந்துகொண்ட நோர்வே தூதுவரும் அங்கிருந்த அமெரிக்க தூதுவரிடம் அரசாங்கம் எதைச் செய்ய விரும்புகிறதோ அதனை அவர்கள் செய்யத் தயங்கப்போவதில்லை.
ஏனெனில் அவர்கள் ராணுவ வெற்றியை நோக்கிச் செல்வதாக கருதுகின்றனர்.
அத்துடன் அச் சந்தர்ப்பத்தில் வெளியான கோதபய இன் பத்திரிகைப் பேட்டியில் புலிகளை வடக்கிலிருந்து துரத்துவோம் எனக் கூறிய செய்தியையும் நினைவூட்டினார்.
ஆனால் அன்றைய சந்திப்பின்போது கலந்துகொண்ட கோதபய, அரசாங்கம் சமாதானத்தை அடைவதற்கு தன்னாலான அனைத்தையும் செய்யும் எனத் தெரிவித்தார்.
நோர்வே தூதுவரின் அனுபவத்தின்படி யாருக்கு எங்கே இனிக்கும் செய்தியை வழங்குவது என்ற வித்தையை நன்கே அறிந்திருந்தார்கள் எனக் கூறுகிறார்.
நோர்வே தூதுவருக்கும், அமெரிக்க தூதுவருக்கும் இடையே அங்கு இடம்பெற்ற தனிப்பட்ட உரையாடலின்போது பஸில் ராஜபக்ஸ நோர்வே தூதுவரிடம் புலிகள் கிழக்கு மாகாணத்தை விட்டு வெளியேறினால் வடக்கில் ராணுவம் தாக்குதலைத் தொடுக்காது எனத் தெரிவித்த செய்தியைக் கூறினார்.
தூதுவரைப் பொறுத்தவரையில் அரச தரப்பினர் பின் கதவு வழியாக புலிகளுடன் ஏற்படுத்திகொண்ட தொடர்புகளின் அடிப்படையில் அவர்கள் இதற்குச் சம்மதித்திருப்பதாக கூறியதாக தெரிவித்தார்.
ஆனால் புலிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் இவ்வாறான யோசனைகளுக்கு ஒருபோதும் உடன்பட மாட்டார்கள் என்பதை நன்கு தெரிந்திருந்தார்.
சில மாதங்களுக்குப் பின்னர் பெப்ரவரி ஆரம்பத்தில் கிளிநோச்சி சென்றார்.
2002ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் வரையறுக்கப்பட்ட பல இடங்களில் ராணுவம் குடிகொண்டிருப்பதாகவும் அது ஒப்பந்தத்தினை மீறும் செயல் எனவும் புலிகள் முறையிட்டு அரசாங்கம் போருக்கான நிலமைகளை ஏற்படுத்துவதாக சர்வதேச சமூகத்திடம் தெரிவிக்குமாறு தமிழ்ச்செல்வன் கூறினார்.
தமிழ்ச்செல்வனின் கருத்தைக் கேட்ட நோர்வே தூதுவர் புலிகள் சம்பூர், வாகரை ஆகிய பகுதிகளிலிருந்து ராணுவத்தை விலகுமாறு கூறுவார்களா? இது மிகவும் நிச்சயமற்ற சூழலையே உணர்த்தியது என்கிறார்.
வடக்கு கிழக்கு இணைப்பிற்கெதிரான உயர்நிமன்றத் தீர்ப்பும், தற்போது சம்பூர், வாகரை வீழ்ச்சியும் புதிய கள நிலவரங்களைத் தோற்றுவித்திருந்தன.
கிழக்கு மாகாணம் வீழ்ச்சியடையுமானால் போர்நிறுத்த ஒப்பந்தம் வலுவற்ற ஒன்றாகி புதிய ஒப்பந்தத்தினை நோக்கி நிலமைகள் தள்ளப்படலாம்.
கிழக்கு மாகாண மாற்றங்கள் சமாதான முயற்சிகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்த கவலைகள் பத்திரிகையாளர் மத்தியில் எழுந்தன.
மிகவும் அதிக விலை கொடுத்துக் கைப்பற்றிய கிழக்குப் பகுதியை அரசு போர் நிறுத்த ஒப்பந்தம் என்ற காரணத்திற்காக விட்டுக்கொடுக்குமா? என்ற கேள்விகள் எழுந்தன.
போர் நிறுத்த ஒப்பந்த அமுலாக்கல் இல்லையெனில், நோர்வே தரப்பினர் அங்கு செயற்படுவதில் அர்த்தமில்லை.
இந் நிலமைகள் குறித்து கோதபய தெரிவிக்கையில் நாம் எமது இறுக்கத்தினை விடப்போவதில்லை.
மனித உரிமைகள், மனித அவலங்கள் என்ற தடைகளைப் போட்டு எம்மை நிறுத்த முடியாது. பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற முயற்சியில் இவை நியாயமானவை என்றார்.
மங்கள சமரவீர தெரிவிக்கையில் ஜனாதிபதி மகிந்த இன் அரசில் இனவாதம் என்பது இன்று அரசின் உத்தியோகபூர்வ கொள்கை என்றாகிவிட்டது.
நாடு பாதி பொலீஸ் அரசாக மாறிவிட்டது. பயங்கரவாதத்தை ஒழித்தல் என்ற பெயரில் தமிழ் மக்கள் புலிகளின் மடியில் விழும்படி தள்ளப்பட்டுள்ளார்கள்.
கோதபயவும் அவரது அடிவருடிகளும் ராஜபக்ஸ சகோதரர்களுக்கு எதிராக உள்ள சகல ஜனநாயக சக்திகளையும் தேடத் தொடங்கியுள்ளனர் என்றார்.
2007ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் திகதி அரசுக்கு பெரும் அதிர்ச்சி கிடைத்தது. கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு அருகாமையிலிருந்த விமானப்படைத் தளம் புலிகளால் தாக்கப்பட்டது.
இத் தாக்குதல் சிறிய அளவில் சேதத்தை ஏற்படுத்திய போதிலும் அதன் தாக்கம் குறிப்பாக தென்பகுதியில் பாரியதாக இருந்தது.
இச் சம்பவம் நடைபெற்று ஒரு மாத்தின் பின்னர் அதாவது ஏப்பரல் 24ம் திகதி பலாலி ராணுவத்தளம் தாக்குவதற்கு முயற்சிக்கப்பட்து.
இது தோல்வியில் முடிவடைந்த போதிலும், அடுத்த 5 நாட்களில் இலங்கைக்கும், அவுஸ்ரேலியாவிற்குமிடையே கிரிக்கட் போட்டி நடைபெற்ற வேளையில் புலிகள் கொழும்பிற்கு அண்மையில் உள்ள எரிபொருள் கிடங்கின் மீது தாக்கினார்கள்.
இதனால் பீதியடைந்த அரசு இரவில் விமான நிலையத்தை மூடுவதாக அறிவித்தது.
இதனால் 40 சதவீத பயணங்கள் மீள் மாற்றம் செய்யப்பட்டன. சில ரத்துச் செய்யப்பட்டன. இதனால் அரசிற்கு பெரும் செலவினம் ஏற்பட்டது.
இம் மாற்றங்கள் குறித்து கண்காணிப்புக் குழுவினைச் சேர்ந்த ஜொன் ஹன்சன் பவர் (Jon Hanssen Bauer ) தெரிவிக்கையில் 2007ம் ஆண்டு ஆரம்பத்தில் போரில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தெளிவாக காணப்படாவிடினும், நாட்கள் செல்லச் செல்ல ராணுவத்தின் முன்னேற்றம் தெளிவாகியது.
இவற்றை கூட்டுத் தலைமை நாடுகளுக்கு அறிவித்தார்கள்.
புலிகளுடன் தொலைபேசி வழியாகவும், வேறு வழிகள் மூலமாகவும் தொடர்புகளோடு இருந்தார்கள்.
கூட்டுத் தலைமை நாடுகள் அரசுடன் உறவைத் தொடர்ந்தன. மக்களைக் கேடயமாக்கும் முறைகள் குறித்து தமது அதிருப்தியினை புலிகளுக்கு அவ்வப்போது தெரிவித்தார்கள்.
கண்காணிப்புழு அங்கு இருப்பதால்தான் போர் நீடித்துச் செல்வதாக பஸில் அவருக்கு கூறினார். அகதிகளின் துன்பங்கள் தொடர்பாக சர்வதேச அரசுகளுக்கு அறிவித்தார்கள்.
அகதிகளின் அவலங்கள் அதிகரித்த நிலையில் தாம் அமெரிக்கா சென்று மனித நேய உதவிகளை வழங்குமாறு கோரியதாகவும் தெரிவிக்கும் அவர், நாட்கள் செல்லச் செல்ல கூட்டுத் தலைமை நாடுகளே இப் பிரச்சனையில் அதிகளவில் ஈடுபட்டதாக கூறுகிறார்.
நோர்வே நாடு சமாதானத்திற்கான அனுசரணையாளராகவும், அதனைக் கண்காணிப்பவராகவும் செயற்பட்டதால் அதிகளவு விமர்சனங்களுக்கு முகம் கொடுத்ததாக தெரிவிக்கும் அவர், தாம் அங்கு சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு உதவுவதற்காகவே சென்றதாகவும், அதனால்தான் சிறிய தொகையினர் ஆயுதங்கள் அற்று அங்கு சென்றதாகவும் தெரிவிக்கிறார்.
நிலமைகளுக்கு யார் பொறுப்பு? என்பது குறித்த அறிக்கைகளை வெளியிட்டதால் தாம் இலக்காக மாறியதாக கூறும் அவர் இதனை தாம் உணரவில்லை என்கிறார்.
தாம் கிளிநொச்சி சென்ற வேளையில் பொதுமக்களின் பாதுகாப்பே தமது கவலை என புலிகள் தெரிவித்ததாகவும், அதனால் கண்காணிப்புக் குழுவினர் அங்கிருப்பது அவசியம் எனக் கூறியிருந்தனர்.
ஆனால் அரசுடன் பேசுவதற்கு தாமே வழியாக செயற்பட்டதாகவும் கூறினார். மிக அதிகளவில் பொதுமக்கள் பாதிப்படைவதைத் தவிர்க்கவே தாம் செயற்பட்டதாக கூறும் அவர் போருக்கு வெளியிலேயே அதிக மக்கள் கொல்லப்பட்டதாக கூறினார்.
சிங்கள தமிழ் மக்களிடையே மிகவும் முறுகல் நிலை காணப்பட்டதாகவும், யாரோ ஒருவர் நிலமைகளை அமைதி வழிக்கு திருப்பி அந் நெருக்கடிகளைத் தணிக்கவேண்டும் என நம்பியதாக கூறுகிறார்.
( அடுத்த வாரம் தொடரும்)
-சிவலிங்கம்-