இறுதி எச்சரிக்கையாக அமைச்சர் சுவாமிநாதனுக்கு இன்று நான் சொல்கின்ற செய்தி. நொந்துபோய் இருக்கின்ற எம் மக்களுடைய வாழ்க்கையுடன் விளையாடவேண்டாம் எங்கள் மக்களுடைய தன்மானத்துக்கு நீங்கள் இழுக்கை ஏற்படுத்த வேண்டாம் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான எம் ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
கரவெட்டி பிரதேசசெயலகத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட கலாசார பெரு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கரவெட்டி பிரதேசசெயலர் ச.சிவஸ்ரீ தலைமையில் பெரு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் அவர் மேலும் கூறியதாவது எங்களுடைய பண்பாட்டுக்கும் வாழ்க்கை முறைக்கும் எதிரான விடயங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த உலோகத்தகட்டிலான வீட்டினை எமது தலைவரான எதிர்கட்சித்தலைவர் வீடு என்று கூட கூறுவதில்லை. கூடு என்றுதான் அழைக்கின்றார்.
திரும்ப திரும்ப பிரதமரிடத்திலும் பாராளுமன்றத்திலும் எமது தலைவர் சொல்வது எமது மக்கள் மிகவும் நொந்து போய்விட்டார்கள்.
அடிப்படையிலான ஒருவீடு கொடுக்க வேண்டும். கூடு எல்லாம் வேண்டாம். இந்த இரும்புக்கூட்டினை கொடுப்பதன் மூலமாக அவர்களுக்கு நீங்கள் நிவாரணம் கொடுக்கவில்லை. அவர்களுக்கு நிரந்தர வதிவிடம் நீங்கள் அமைத்து கொடுக்கவில்லை.
ஒரு நிரந்தர கல்வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகின்றது. அதைவிட இரட்டிப்பான செலவில் தற்காலிக இரும்புக் கூட்டை கொடுப்பதன் மூலமாக எங்களை ஏமாற்றுகின்ற செயற்பாட்டில் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள்.
அந்த மிகுதிப் பணம் எவருடைய பையிலே போய் சேருகின்றது என்பது எங்களுக்கு தெரியும். இது முற்று முழுதான ஓர் ஊழல் செயற்பாடு. அதை ஊழலில் ஊறிப்போன செயற்பாடு என்பதை நாம் சொல்லி இருக்கின்றோம்.
அதையும் கேட்காமல் அமைச்சர் சுவாமிநாதன் தொடர்ச்சியாக எங்கள் மக்களை ஏமாற்றுகின்ற விதத்திலே பத்திரிகையில் விளம்பரங்களை போட்டு செயற்படுத்துவதாக இருந்தால் அந்த ஊழலை நாம் வௌிப்படுத்துகிற காலம் வந்துள்ளது.
வெளிப்படையாக எவருக்கு எவ்வளவு கையூட்டு கொடுக்கபட்டுள்ளது என்பதை அறிவிப்பதற்குரிய காலம் வந்திருக்கின்றது.
இறுதியாக இறுதி எச்சரிக்கையாக அமைச்சர் சுவாமிநாதனுக்கு நான் இன்று சொல்லுகின்ற செய்தி, நொந்து போய் இருக்கின்ற எம் மக்களுடைய வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம். எங்களுடைய மக்களுடைய தன்மானத்திற்கு நீங்கள் இழுக்கு கொண்டுவர வேண்டாம்.
தமிழ் பெயரைத்தாங்கி இருக்கின்ற உங்களுடைய பெயருக்கும் வீணாக இழுக்கை கொண்டு வர எங்களை உந்தாதீர்கள். ஊழலை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம். எங்களுடைய மக்களுக்கு அவசர தேவை ஒன்று இருக்கின்றது.
என்ற ஒரே காரணத்தை வைத்து மற்றவர்கள் தங்களுடைய பைகளை பணத்தினால் நிரப்புகின்ற செயற்பாட்டினை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
அதற்கு எதிரான நடவடிக்கையினை எடுப்போம் என்ற இறுதி எச்சரிக்கையை அமைச்சருக்கு கொடுக்கின்றோம் என்றார்.
முட்டுக்கட்டை போடப்பட்டாலும் பொருத்து வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்: மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் திட்டவட்டம்
பொருத்துவீட்டுத் திட்டத்திற்கு எவ்வகையிலான முட்டுக்கட்டைகள் போடப்பட்டா லும் அத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, சிறைசாலைகள் மறுசீரமைப்பு, இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டெம்பர் மாதம் கிளிநொச்சி பொதுச்சந்தையில் ஏற்பட்ட தீயினால் வியாபார நிலையங்கள் முற்றாக அழிவடைந்த வர்த்தகர்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், வீட்டுத்திட்டம் அமைப்பதில் தற்போது பல பிரச்சினைகள் எழுகின்றது.
குறிப்பாக கல் வீட்டினை அமைப்பதற்கு மண் தேவை மற்றும் வீட்டினை கட்டுவதற்கு மேசன்மார்களின் தேவையும் காணப்படுகின்றது. இந்நிலையில் அவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.
இவ்வாறு பல பிரச்சினைகள் கல் வீட்டுத்திட்டத்தினை அமைக்கும்போது ஏற்படும்.
இதனால் நான் பிரதமருடன் பேசி ஒரு தொகை வீடுகளை நிர்மாணிப்பதற்காக வேண்டுகோளை முன்வந்திருக்கின்றேன்.
அந்த வீட்டுத்திட்டத்திற்கமைய ஒரு பொருத்துவீட்டினை நான் சுன்னாகத்திலே அமைத்திருக்கின்றேன்.
இந்த பொருத்து வீட்டை அதிகமானோர் சென்று பார்வையிட்டுமுள்ளனர். ஆனாலும் இவற்றுக்கு எதிர்ப்பு வெளியிடுவதற்கும் பலர் இருக்கின்றனர்.
அதனைப்பற்றி இச்சந்தர்ப்பத்தில் பேச விரும்பவில்லை. எனினும் இத்திட்டம் முற்றுமுழுதாக மக்கள் நலம் சார்ந்ததேயாகும். ஆகவே இத்திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும்.
இதேவேளை கிளிநொச்சி பொதுச் சந்தை தீயில் எரிவடைந்த நிலையில் பலர் என்னிடம் தொடர்பு கொண்டு நஷ்டஈடுகளை வழங்கி உதவுமாறு கோரியிருந்தனர். அதற்கமைய நஷ்டஈடு வழங்கும் செயற்பாட்டில் நான் முழுமூச்சாக செயற்பட்டிருந்தேன்.
பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு உரிய வகையிலான நஷ்டஈடு வழங்க வேண்டுமென்ற அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் முன்வைத்து அதற்கான அனுமதியையும் பெற்றிருந்தேன்.
விரைந்த செயற்பாட்டின் விளைவாகவே இன்றையதினம் (நேற்று) இந்த நஷ்டஈட்டை வழங்கமுடிந்துள்ளது.
இதேவேளை கிளிநொச்சியில் புதிய சந்தைக் கட்டடத் தொகுதியை அமைக்க 155 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதற்கான கட்டுமானப்பணிகள் எதிர்வரும் ஆண்டில் முன்னெடுக்கப்படும். அத்துடன் தீயணைப்புச் சேவைப் பிரிவையும் கிளிநொச்சியில் அமைப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான நிலையில் இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமைக்கு பிரதமர், நிதியமைச்சர் ஆகியோருக்கு இத்தருணத்தில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன் எனத் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த நிகழ்வின் முடிவில் பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பிக்காத மக்களுக்கு மாற்றுத்திட்டம் ஏதும் உள்ளதா என ஊடகவியலாளர்களினால் தொடுக்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்காமல் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது