இந்தியாவில் திருநங்கைகள் மட்டுமே படிக்கப் போகும் பள்ளிக்கூடம் கொச்சியில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் கல்கி சுப்ரமணியம் இந்த பள்ளியை கொச்சியில் இன்று திறந்து வைத்தார்.
நாட்டில் பெரும்பாலான திருநங்கைகளுக்கு முறையான கல்வி கிடைப்பதில்லை. பள்ளிகளில் அவர்கள் படித்து வந்தாலும், ஒரு கட்டத்தில் புறக்கணிப்பு காரணமாக படிப்பை பாதியில் கைவிட வேண்டிய சூழல் இருக்கிறது.
கல்வி அறிவு இல்லாமல் முறையான வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை.
இதனாலேயே சில திருநங்கைகள் பாலியல் தொழிலாளர்கள் ஆகும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்த வரை திருநங்கைகளுக்கு அதிக முக்கியத்தும் கொடுத்து அவர்களை முன்னேற்றம் அடைய செய்ய வேண்டுமென்ற சிறந்த நோக்கத்தில் கேரள அரசு செயல்பட்டு வருகிறது.
சமூகத்தில் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே வாழ்கின்ற திருநங்கைகளைப் பாதுகாக்க கேரள அரசு தனி வாரியம் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது கேரளாவில் உள்ள 4 ஆயிரம் திருநங்கைகளில் 24 சதவீதம் பேர் 10 ஆம் வகுப்பும், 19 சதவீதம் பேர் பிளஸ்-2, 10 சதவீதம் பேர் இளநிலை பட்டப்படிப்பும் வரை படித்துள்ளனர்.
ஏழு சதவீதம் பேர் எந்தவித ஆதரவும் இல்லாமல் வாழ்கின்றனர். பெரும்பாலானோர் திருநங்கை என்று அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை. தாய், தந்தையரிடம் கூற அச்சப்பட்டு, மறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.
திருநங்கைகளுக்கு தொழில் அங்கீகாரம், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்த கேரள அரசு விரைவில் சட்டம் கொண்டு வர உள்ளது.
முதியோர் இல்லங்களில் இருந்து வரும் வயதானவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, சிறுவர், சிறுமிகள் இல்லங்களுக்குத் தடை இல்லாமல் நிதி வழங்க என கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
பெண் தன்மையோடு இருக்கும் குழந்தைகளையும் ஆண் தன்மையோடு இருக்கும் குழந்தைகளையும் அரவணைக்க வேண்டும். அவர்களை அடித்துத் திருத்தி விட முடியாது.
அத்தகைய குழந்தைகளை தைரியமான குழந்தைகளாக, அவர்கள் போக்கிலேயே வளர்க்க வேண்டும். அவர்களை தன்னம்பிக்கை மிக்கவர்களாக மிளரச் செய்வது கல்வி மட்டுமே. இதனை கேரள மக்கள் முழுமையாக புரிந்து வைத்துள்ளனர்.
இதனால் திருநங்கைகளுக்கு சிறந்த கல்வி வசதியை அளிக்கும் வகையில் கொச்சி நகரில் திருநங்கைளுக்கான பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கைளுக்கு என தொடங்கப்பட்ட பள்ளி என்ற பெருமையை இந்த பள்ளி பெற்றுள்ளது. விடுதி வசதியும் இருக்கிறது.
‘டிரான்ஸ் இன்டியா’ என்ற அமைப்பு இதற்கான அனைத்து உதவிகளையும் செய்துள்ளது. இந்த பள்ளியை தொடங்க கிறிஸ்தவ அமைப்பு ஒன்று இடமளித்து உதவி செய்துள்ளது.
இந்த பள்ளிக் கூடத்தில் ஆசிரியைகளாக திருநங்கைகளே பணியாற்றுகின்றனர்.
முதற்கட்டமாக 6 ஆசிரியைகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல் ஆண்டில் 10 திருநங்கைகள் சேர்க்கப்படவுள்ளனர். பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்ட திருநங்கைகளும் இந்த பள்ளியில் சேரலாம்.
சமூக ஆர்வலர்களும், பேராசிரியர்களும் தன்னார்வத்தில் இந்த பள்ளியில் பணியாற்ற முன் வந்துள்ளனர்.
விரைவில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான திருநங்கைகள் இந்த பள்ளியில் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருநங்கைகளுக்கான நாட்டின் முதல் பள்ளியை தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் திருநங்கையுமான கல்கி சுப்ரமணியம் இன்று திறந்து வைத்தார்.
நாட்டில் திருநங்கைகளுக்கான முதல் பள்ளி திறக்கப்பட்டுள்ள சமயத்தில், ஒரு அதிர்ச்சி சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது.
நைடா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகர் மகளிர் கல்லூரியில் நாட்டின் முதல் திருநங்கை முதல்வராக மனோபாய் பன்தோத்யா பதவியேற்றார்.
ஆனால், அவருக்கு கல்லூரி ஆசிரியைகள், அலுவலர்கள் பணியில் சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை. கல்லூரி மாணவிகள் கூட அவரது மனதை நோகடித்துள்ளனர்.
மனோபாய் பிறப்பால் ஆண். இவரது இயற்பெயர் சோம்நாத். கடந்த 2004-ம் ஆண்டு அறுவைசிகிச்சை மூலம் தன்னை பெண்ணாக மாற்றிக் கொண்டார்.
1995-ம் ஆண்டு முதல் திருநங்கைகளுக்கான தனி இதழையும் நடத்தி வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி இந்தக் கல்லூரியின் முதல்வராக மனோபாய் நியமிக்கப்பட்டார். ஆனால் ஒன்றரை வருடம் கூட முதல்வர் பொறுப்பில் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
தனது ராஜினாமா கடிதத்தை நைடா மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி விட்டார். தகவலை மாவட்ட ஆட்சியரும் உறுதி செய்துள்ளார்.
இது குறித்து மனோபாய் கூறுகையில், ”கல்லூரியில் எனக்கு எதிராக அனைத்து பேராசிரியைகளும் திரண்டு விட்டனர்.
அலுவலர்களும் எனக்கு எதிராகவே இருக்கின்றனர். நான் அவர்களை சமானப்படுத்த முயன்றேன். கல்லூரியில் ஒழுக்கத்தை வலியுறுத்தி சில நடவடிக்கைகள் எடுத்தேன்.
அதுதான் எனக்கு எதிராகத் திரும்பி விட்டது. மாவட்ட நிர்வாகம் எனக்கு எல்லாவித ஒத்துழைப்பும் அளித்தது. சிறந்த கல்லூரியாக மாற்ற முயற்சித்தேன்.
ஆனால் பேராசிரியைகள், மாணவிகள் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. சில சமயங்களில் என்னை முற்றுகையிடுகின்றனர். எனக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கின்றனர்.
நான் மிகவும் சோர்வடைந்து விட்டேன். எவ்வளவோ கனவுகளோடு இந்த கல்லூரிக்குள் நான் காலடி எடுத்து வைத்தேன். அத்தகையும் தூள் தூளாகி விட்டது” என வேதனை தெரிவித்துள்ளார்.