“மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று முழக்கமிட்ட அம்மாவின் வழியில் நம் பயணத்தை தொடருவோம்” என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கூறினார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் நிர்வாகிகள் மத்தியில் பேசினார் சசிகலா. அப்போது, ஜெயலலிதாவின் மறைவை குறித்து பேசும் போது கண்ணீர் விட்டு அழுத்தார்.
அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, இன்று அதிமுக தலைமை அலுவலகம் வந்து பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
பின்னர் சசிகலா தொண்டர்கள் பேசினார். கைக்குட்டையினால் அடிக்கடி கண்களை துடைத்துக்கொண்டே கண்ணீருடன் பேசினார்.
அவர், ’’ஏறத்தாழ 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் எத்தனையோ கூட்டங்களுக்கு சென்றிருக்கிறேன்.
ஆனால் இன்று மேடைக்கு வந்து உங்களிடையே பேசுகிற ஒரு சூழல் எனக்கு உருவாகி இருக்கிறது.
உங்களின் அன்பு கட்டளையை ஏற்கவேண்டிய கடமையும், அன்பு கட்டளையும், கட்டாயமும் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.
நான் கனவிலும் கூட நினைக்காத ஒன்று. கற்பனை செய்துகூட பார்க்க முடியாத ஒன்று நடந்துவிட்டது.
தலையில் இடி ஒன்று விழுந்ததைப்போல நன்கு உடல்நலம் தேறி வந்த ஜெயலலிதா நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்.
தன்னை நம்பி வந்த யாரையும் கைவிடாதவர். இன்று தனது மரணத்தின் மூலம் நம் அனைவரையும் கைவிட்டுவிட்டார்.
ஜெயலலிதாவுக்கு இந்த இயக்கம்தான் வாழ்க்கை. எனக்கோ ஜெயலலிதாதான் வாழ்க்கை.
இறைவன் தன் அன்பு மகளை தன்னிடம் அழைத்துக்கொண்டுவிட்டான். 75 நாட்கள் எவ்வளவோ போராட்டங்கள்.
மருத்துவர்கள் போராட்டத்தோடு, கோடான கோடி தொண்டர்களின் ஆன்மீக வழிபாடுகளும் ஒன்றுசேர, அவை ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றிவிடும் நான் நம்பியிருந்தேன். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு வரும் அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டது.
ஒரு தேவதை இல்லாத அரசியல் மாடம் கலையிழந்து நிற்கிறது. எனக்கோ அனைத்தையும் இழந்துவிட்டு நிற்கிற நிர்க்கதி நிலை.
சில நிமிடங்கள் மட்டுமே ஜெயலலிதாவை சந்தித்தவர்கள், சிலமுறை மட்டுமே ஜெயலலிதாவை பார்த்தவர்கள் என அவர்களே இன்று ஜெயலலிதாவின் பிரிவில் துடிக்கிறார்கள் என்றால், 33 வருடங்களை ஜெயலலிதாவுடன் மட்டுமே என் வாழ் நாட்களை கரைத்துவிட்ட எனக்கு எப்படி இருக்கும் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
ஜெயலலிதாவின் அரசியல் ஆரம்ப காலம்முதல் தொடர்ந்து பயணித்தேன். அப்போது யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.
ஜெயலலிதா என்ற வார்த்தை மக்கள் இதயத்தில் இந்த அளவிற்கு ஊடுருவும் என்று. ஆனால் இத்தனை ஆண்டுகள் அவரோடு இருந்த என் ஆசையெல்லாம் அவர் நன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான்.
ஜெயலலிதாவை பற்றிய சிந்திப்புகளிலேயே என் வாழ்நாட்களை செலவழித்தவள் நான். எனக்கு இப்போது 62 வயது ஆகிறது.
கடந்த 33 ஆண்டுகளாக என்னுடைய 29வது வயது முதல் ஜெயலலிதாவோடுதான் இருந்துள்ளேன். அவரை விட்டு நான் பிரிந்திருந்த நாட்கள் மிக மிக குறைவு. ஜெயலலிதாவும் கழகமுமே வாழ்ந்து வந்தேன்.
ஜெயலலிதா கட்டிக்காத்த கழகத்திற்காகவும், கோடான கோடி கழகத்தினருக்காகவும், நான் வாழ வேண்டும் என்கிற உறுதியை எனக்குள் எடுக்க வைத்திருக்கிறது’’ என்று கண்ணீருடன் பேசினார்.
மேலும், அவரது முதல் குரலை கேட்க இந்த ஆடியோவை க்ளிக் செய்யவும்..!