கிழக்கு மாகாணம் ராணுவத்திடம் வீழ்ந்ததைத் தொடர்ந்து அரசின் போக்கில் மாறுதல்கள் காணப்பட்டன. அரசிற்கும், ஐ நா சபை நிறுவனங்களுக்குமிடையே கசப்புடன் கூடிய உறவு வெளிப்பட்டது.
2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் ஐ நா சபையின் மனித நேய உதவிகளுக்கான செயலாளர் ஜோன் ஹோம்ஸ் ( John Holmes) இலங்கைக்கு வந்திருந்தார்.
சுமார் ஒரு வருட காலத்தின் பின்னர் ஐ நா சபையின் உயர் மட்ட அதிகாரி ஒருவரின் வருகை இதுவாகும்.
இவர் அரச அதிகாரிகளைச் சந்திப்பதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்ட போதிலும், அரச சார்பற்ற நிறுவனங்களைச் சந்திக்க அல்லது கிளிநொச்சி செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இவர் நாட்டை விட்டு வெளியேறியதும் அவர் சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்ட்டர் இற்கு வழங்கிய நேர்காணல் வெளியாகியிருந்தது.
அதில் இலங்கையில் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு நிறுவப்பட வேண்டுமெனவும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் செயற்படுவதற்கான மிகவும் ஆபத்தான இடங்களில் இலங்கையும் ஒன்று எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இவரது கருத்து இலங்கையில் பெரும் புயலைக் கிளப்பியிருந்தது. தற்போது காலமான அப்போதைய பிரதமர் ரத்ன சிறி விக்ரமநாயக்க அவரது கருத்தை நிராகரித்ததோடு, மனித உரிமைச் செயற்பாட்டாளருக்கு பாதுகாப்பு இல்லை என்பது மிகவும் நாகரீகமற்ற வார்த்தை எனவும் தெரிவித்தார்.
அப்போதைய பாராளுமன்ற பிரதம கொறடா பெர்னான்டோ புள்ளே ஒரு படி மேலே போய் அவர் புலிகளிடம் பணம் பெற்றார் என்றார்.
இவ் வேளையில் ராணுவம் இன்னொரு வெற்றியை அடைந்தது.
இவ் வெற்றியை 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் திகதி நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் அரசு தெரிவித்தது.
புலிகளின் பெருமளவு ஆயுதங்களுடன் வந்த மூன்று கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டது எனவும். பிரபாகரனுக்கு பாதுகாப்பு வழங்கும் மூன்று சிறிய ரக விமானங்களும், ஆயுதங்களும் குண்டு வீசி அழிக்கப்பட்டன எனவும் கடற்படைத் தளபதி வசந்த கர்னகொட தெரிவித்தார்.
கிழக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான அமைச்சர் பஸில். அமெரிக்க தூதுவர் றொபேர்ட் பிளேக் அவர்களைச் சந்தித்த வேளையில் கிழக்கில் கருணா குழுவினர் மக்களைத் துன்பப்படுத்துவது, கொள்ளையடிப்பது போன்றவற்றை தாம் அறிவோம் எனவும், தாம் சிவிலியன் – ராணுவ இணைப்பு அதிகாரி ஒருவரை நியமிப்பதாகவும் தெரிவித்தார்.
வடக்கின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டு அரச சார்பற்ற நிறுவன அதிகாரி ஒருவரின் கருத்துக்ளை அறிந்துகொண்ட அமெரிக்க தூதுவர் மகிந்தவிற்கு நல்ல நோக்கங்கள் இருக்கலாம்.
ஆனால் அவருக்கு உதவியாக உள்ளவர்களுக்கு போதிய அனுபவங்கள் இல்லை, பதிலுக்கு அனுபவஸ்தர்களை அமர்த்தவும் அவர்களுக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்தார்.
அக்டோபர் நடுப்பகுதியில் ஐ நா சபையின் மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆபர் (Louise Arbour) இலங்கை வந்தார்.
அவர் கிளிநொச்சி செல்ல மறுக்கப்பட்டார். புலிகள் அதனைப் பிரச்சார நோக்கங்களுக்காக பயன்படுத்தலாம், எனவும் மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் கூறி மறுத்தனர்.
அதிகளவு மக்கள் காணாமல் போவதும், மனித உரிமை மீறல்களும் அதிகரித்த நிலையில் அங்கு மனித உரிமை கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டுமென்ற யோசனையையும் அரசு நிராகரித்தது.
இலங்கை அரசிற்கும், மனித உரிமை ஆணையாளர் செயலகத்திற்குமிடையே உள்ள உறவு தொழில்நுட்ப உதவி என்ற மட்டுப்படுத்த நிலையிலிருந்து களத்தில் நேரடிப் பார்வை என்ற அளவுக்கு மாற்றப்படவேண்டும் என்றார்.
அப்போதைய மனித உரிமைகளுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்க அவ் வேண்டுகோளை நிராகரித்தார்.
அனுராதபுர விமானத் தளம் தாக்கப்பட்டது
அடுத்த ஒரு வாரத்தில் புலிகளின் விமானப்படைப் பிரிவு அனுராதபுர விமானத் தளத்தினைத் தாக்கியது. அரசினால் வெளியிடப்பட்ட சேத விபரங்களை விட மிக அதிகளவு சேதம் ஏற்பட்டிருந்தது.
உதாரணமாக வேவு பார்க்கும் விமானங்களில் 75 சதவீதம் அழிக்கப்பட்டது. அதாவது சுமார் 14 விமானங்கள் அழிக்கப்பட்டன.
பத்திரிகை அறிக்கைகளின்படி 27 விமானங்களில் 24 பாதி அல்லது முழுமையாக அழிந்தன. கிழக்கு மாகாண வெற்றியில் மிதந்திருந்த அரசிற்கு இது பெரும் சவாலாக அமைந்தது.
தமிழ்ச்செல்வன் கொலைசெய்யப்பட்டார்.
மேற் குறித்த சம்பவம் நடைபெற்று 10 நாட்களுள் அதாவது நவம்பர் 2ம் திகதி கிளிநொச்சியின் பிரதான பகுதிகளில் விமானங்கள் குண்டு வீசின.
பதுங்கு குழிகள் தாக்கப்பட்டபோது அதற்குள் உறங்கியிருந்த ஏழு பேரில் 6 பேர் ஸ்தலத்தில் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் தமிழ்ச்செல்வன் என மறுநாள் காலை புலிகள் அறிவித்தனர்.
அத் தாக்குதலில் ராணுவம் திட்டமிட்டு அவரைத் தாக்கியதா? என்பது விவாதத்திற்குரியது. ராணுவம் ரகசியத் தகவலின் அடிப்படையில் தாக்கியதாக சர்வதேச வட்டாரங்களில் கருதப்படுகிறது.
இம் மரணத்தைத் தொடர்ந்து அவரது இடத்திற்கு பொலீஸ் பிரிவிற்குப் பொறுப்பான நடேசனை நியமிப்பதாக புலிகள் அறிவித்தனர்.
நடேசனின் மனைவி சிங்கள சமூகத்தைச் சார்ந்தவர். அத்துடன் அவர் மூன்று மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர்.
ஜெனீவாவில் 2006 இல் இடம்பெற்ற பேச்சுவார்தைகளில் இரண்டு சுற்றுக்களில் கலந்துகொண்டவர்.
நவம்பர் 6ம் திகதி கொழம்பில் இடம்பெற்ற கூட்டுத் தலைமை நாடுகளின் சந்திப்பின்போது நடேசனின் நியமனம் குறித்து பேசப்பட்டது.
மிகவும் அனுபவம் குறைந்த நடேசனது நியமனம் பிரபாகரன் சர்வதேச சமூகத்துடன் ஏற்படுத்தியுள்ள உறவை குறைக்கும் நோக்கம் கொண்டதாக கருதப்பட்டது.
ஆனால் அனுபவம் வாய்ந்த நோர்வே அதிகாரி ஒருவர் நடேசனுடன் தனது பல கால தொடர்புகள் காரணமாக தெரிவிக்கையில் நடேசனுக்கு மொழி அறிவும், விவேகமும், இறுக்கமான கோட்பாடுகளைக் கொண்டவர் அல்ல எனவும் தெரிவித்தார்.
தமிழ்ச்செல்வனின் மரணம் சிங்களப் பகுதிகளில் பல்வேறு கருத்துகளைத் தோற்றுவித்தது.
சிங்கள தேசியவாதக் கட்சியான ஜாதிக கெல உறுமய இயற்கை விதிகளின்படியே மரணம் ஏற்பட்டதாக கூறியது.
பலருக்கு ஆச்சரியமளிக்கும் விதத்தில் ஐக்கியதேசியக் கட்சி அக் கொலையைக் கண்டிக்கவில்லை. முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் கக்கிம் தனது அனுதாபத்தைத் தெரிவித்தார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசைச் சேர்ந்தரும், உதவி அமைச்சருமான ஆர். யோகராஜன் தெரிவிக்கையில் சிங்கள மக்களில் சிலர் மகிழ்ச்சி அடையலாம்.
ஆனால் சகல தமிழ் மக்களும் கவலையடைந்துள்ளார்கள். தமிழ் மக்களின் தலைவர்களில் ஒருவர் அவர், சமாதான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள செயலூக்கமுள்ளவர் என்றார். கடும்போக்காளரின் கரங்கள் பலமடையலாம் என அமெரிக்க தூதுவராலயத்தின் அபிப்பிராயம் இருந்தது.
நவம்பர் ஆரம்பப் பகுதியில் லண்டனில் கருணா கைதான செய்தி பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
நாட்டிற்குள் தவறான பெயருடன் கூடிய ராஜதந்திர கடவுச் சீட்டுடன் அவர் நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இலங்கை அரசின் உயர்மட்ட உதவியுடன் அவர் வந்திருந்தார். வுஆஏP இன் புதிய தலைவர் பிள்ளையானுக்கும், கருணாவிற்குமிடையே ஏற்பட்ட முறுகல் நிலையால் ஏற்பட்ட பாதுகாப்பின்மையால் அவர் வெளியேறியிருந்தார்.
கருணாவின் சட்டவிரோத நுழைவு ராணுவத்திற்கும், அவருக்குமிடையேயான தொடர்புகள் குறித்த சந்தேகங்களை தெளிவுபடுத்துவதாக இருந்தது.
வாசகர்களே!
2007ம் ஆண்டு புலிகளின் வீரம் செறிந்த போராட்டங்கள் குறித்து வெளியான மிகைப்படுத்தப்படுத்தப்பட்ட செய்திகளின் ஏமாற்றங்களின் ஆண்டாக அமைந்தது.
கருணாவின் விலகல், அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண வீழ்ச்சி என்பன அரசின் இரட்டைப் போக்கை அம்பலமாக்கின. பேச்சுவார்த்தை, அரசியல் தீர்வு என என காலத்தை இழுத்தடித்து சர்வதேச சமூகத்தை ஏமாற்றினர்.
இலங்கை அரசு மிகவும் திட்டமிட்டே இவ்வாறு செயற்பட்டதா? அல்லது சர்வதேச சமூகமும் குறிப்பாக கூட்டுத் தலைமை நாடுகளும் இணைந்தே செயலாற்றியதா? போன்ற இன்னபிற கேள்விகள் எழுகின்றன.
தமிழ்ச்செல்வனின் மரணமும் புலிகளின் போக்கில் காணப்பட்ட இறுக்க நிலை நடேசனின் வரவால் தளரலாம் என்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்தியதும் கவனத்திற்குரியதாக அமைந்தன.
இப் பின்னணியில் 2007ம் ஆண்டு மாவீரர் தின உரை வழமைபோலவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் ராணுவம் கிளிநொச்சிக்குள் ஊடுருவியுள்ள நிலையில் இவ்வுரையும் பெரும் தடைகளை எதிர்நோக்கியது.
( அடுத்தவாரம் பார்க்கலாம் )
-சிவலிங்கம்-