• வன்னிக்காட்டில் பிரபாகரன்
• முற்றுகையிட்ட இந்தியப் படை
• கொள்ளையும் கண்டுபிடிப்பும்
நிதிக்கையாடல் மற்றும் இயக்க விரோத நடவடிக்கைகள் காரணமாக மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படவிருந்த கிருபாகரன் பின்னர் வடக்கு கிழக்கு மாகாண சபையின் நிதியமைச்சராக இருந்த விந்தை பற்றி கடந்த வாரம் கூறியிருந்தேன்.
புலிகள் அமைப்பினருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தினருக்கும் இடையே கிழக்கில் நடைபெற்ற மற்றொரு சுவாரசியமான சம்பவத்தைக் இந்தவராம் கூறுவதாக தெரிவித்திருந்தேன்.
இயக்க மோதலுக்கு முற்பட்ட காலத்தில் நடைபெற்ற சம்பவம் இது தனியார் வீடொன்றில் கொள்ளை நடந்திருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பாக இந்தப் புகாரைப் பெற்றுக் கொணடவர் கிருபாகரன்.
இரண்டு இயக்கங்களுமே கொள்ளையர்களைப் பிடித்துத் தருவதாக ஒப்புக் கொண்டன.
கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கொள்ளை நடவடிக்கையின் போது தமக்குள் ஒருவரை ஒருவர் பெயர் சொல்லி அழைத்துக் கொண்டனர்.
அப்படி அழைக்கப்பட்ட பெயர்கள் புலிகள் இயக்க உறுப்பினர்களின் பெயர்களாக இருந்தன.
அதனால் புலிகள்தான் அக்கொள்ளையில் ஈடுபட்டதாக கிருபாகரனும், ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களும் கூறினாரகள்.
மக்கள் மத்தியிலும் அக் கதையே பரவத் தொடங்கியது. அதனால் புலிகள் இயக்கத்தினரும் கொள்ளயர்களை இனம்காணத் தீவிரமாக முயன்றனர்.
இறுதியாக கொள்ளயரில் ஒருவரை புலிகள் இயக்கத்தினர் பிடித்து விட்டனர்.
அவருக்கு மரணதண்டனை விதிப்பதாகவும் முடிவானது. மரணதண்டனையின் பின்னர் அவரைப் புதைக்க குழு வெட்டினார்கள்.
யாருக்கு மரணதண்டனை விதிக்கப்படவிருந்ததோ அவரைக் கொண்டே குழிவெட்டினார்கள்.
குழியை வெட்டும் போதுதான் மரண பயம் அவரைப் பிடித்துக் கொண்டது.
என்னைக் கொல்லாதீர்கள். கிருபாகரன் சொல்லித்தான் கொள்ளை நடந்தது.
நான் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர் என்று மன்றாடினார் அவர்.
அவரை ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஈ.பி.ஆர்.எல்.எப் முகாமுக்கு சென்றனர் புலிகள்.
அங்கு கிருபாகரன் இருந்தார். அவரிடம் சென்ற புலிகள் இயக்க பொறுப்பாளர் “கொள்ளையில் சம்பந்தபட்டவர்களை பிடித்து விட்டோம்.
ஆளை வாகனத்தில் கொண்டு வந்திருக்கிறோம். அவர் தன்னை உங்கள் ஆள் என்று சொல்கிறார்” என்று கூறினார்கள்.
கிருபா வாகனத்தில் இருந்தவரைச் சென்று பார்த்துவிட்டு “இவர் எங்கள் ஆள் அல்ல” என்று சொல்லி விட்டார்.
“நாங்களும் அப்படித்தான் நினைத்தோம். இவரை கொண்டு போய் மரணதண்டனை விதிக்கப்போகிறோம். குழியும் வெட்டி வைத்து விட்டுத்தான் வந்திருக்கிறோம்.” என்றனர் புலிகள் இயக்கத்தினர்.
உடனே கிருபாகரனின் முகம் மாறி விட்டது. கிருபாகரனும் அவரது சகாக்களும் தனியாகச் சென்று குசுகுசுத்தனர்.
பின்னர் புலிகள் இயக்கத்தினரிடம் வந்தார் கிருபாகரன்.
“தோழர் தவறு ஒன்று நடந்து போச்சுது. இவர் எங்கள் முன்னாள் தோழர்தான், அதனால் நாங்கள் இவரை பார்த்துக் கொள்கிறோம். எங்களிடம் தாருங்கள்” என்று கேட்டார்.
“அவர் உங்கள் முன்னாள் தோழர் என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும். கொள்ளை நடந்த இடத்திலும் சொல்ல வேண்டும்.” என்று புலிகள் இயக்கத்தினர் நிபந்தனை போட்டனர்.
அதனைக் கிருபாகரன் ஏற்றுக் கொண்டதால் தாம் பிடித்துவைத்த ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினரை அவரிடமே ஒப்படைத்துச் சென்றனர் புலிகள் இயக்கத்தினர்.
காடுகளின் பாதுகாப்பு
நாம் இப்போது மீண்டும் 1988ம் ஆண்டுக்கு செல்லலாம்.
இந்தியப் படைக்கு எதிரான போரில் புலிகளுக்கு முல்லைதீவு காடுகள்தான் அடைக்கலம் கொடுத்தன.
முல்லைதீவு காடுகள் போராட்டத்தில் பிரதான பங்கு வகிக்கும் என்பதை பிரபாகரன் எப்போதுமே நினைவில் வைத்திருந்தார்.
அதனால் காடுகளுக்குள் களவாக மரம் வெட்டுபவர்களுக்கு புலிகள் கடும் தண்டனைகளும் விதித்துவந்;தனர்.
களவாக வெட்டப்படும் மரங்களை ஏற்றிச் செல்லும் லொறிகள் பிடிபட்டால் மரங்களை இறக்கிவிட்டு லொறிகளை தீயிட்டுக் கொளுத்துமாறும் பிரபாகரன் உத்தரவிட்டிருந்தார்.
வன்னிக்காடுகள் குறிப்பாக முல்லைத்தீவு காடுகள் பாதுகாக்கப்பட்டமைக்கு புலிகளின் கடும் நடவடிக்கைகளும் ஒரு முக்கிய காரணம் எனலாம்.
யாழ் குடாநாட்டை கைப்பற்றிய இந்தியப் படையினர் மாங்குளம், முல்லைதீவு, கிளிநொச்சி, மன்னார் ஆகிய வன்னி நிலப்பகுதிகளையும் கைப்பற்றி நிலைகொண்டனர்.
பரா கொமாண்டோக்களும், கூர்க்காப் படையினரும் வன்னிப் போரில் முக்கிய பாத்திரம் வகித்தனர்.
வன்னி முற்றுகை
வன்னித் தரைப் பகுதிகளை கைப்பற்றி நிலைகொண்ட பின்னர் பிரபாகரனின் பிரதான முகாமை காட்டுக்குள் சென்று நிர்மூலம் செய்வதுதான் இந்தியப் படைத்தளபதிகளின் திட்டமாக இருந்தது.
பிரபாகரன் மணலாற்றுக் காட்டுப் பகுதியில் அலம்பில் என்னும் இடத்தில்தான் பிரதான முகாம் அமைத்து இருக்கிறார் என்று இந்தியப் பiயினருக்கு தகவல் கிடைத்திருந்தது.
காட்டுப் பகுதியை தாம் படிப்படியாக சுற்றிவளைப்பதால் பிரபாகரன் இந்தியப் படையுடன் சமாதானத்திற்கு வருவதைத் தவிர வேறுவழியில்லை என்று நினைத்தது இந்திய அரசு
முல்லைதீவ, மாங்குளம் ஆகிய இடங்களில் அப்போது இலங்கை அரசின் இராணுவ முகாம்களும் இருந்தன. மாங்குளம் இராணுவ முகாம் பாரியது.
இந்தியப் படையினரும், இலங்கை இராணுவத்தினரும் வன்னி நிலப்பரப்பில் பரவலாக நிலைகொண்டிருந்ததால் மணலாற்றுக் காட்டுக்குள் இருந்த பிரபாகரனும் புலிகளும் முற்றுகைக்குள் சிக்கிவிட்டனர் என்றே நம்பப்பட்டது.
காட்டுக்குள் சில காலம் உணவுப் பொருட்களுக்கு பஞ்சம் நிலவியது. புலிகள் அமைப்பின் தளபதிகளில் ஒருவரான அன்பு அப்போது நடைபெற்ற ஒரு சம்பவத்தை பின்னர் நினைவு கூர்ந்தார்.
“காட்டுக்குள் உண்பதற்கு எதுவும் கிடைக்காமல் தோழர்கள் பட்டினியில் வாடிய போது யாரோ ஒரு உறுப்பினர் எங்கிருந்தோ பயறு கொண்டு வந்தார்;.
அதனை அவித்துச் சாப்பிட ஏற்பாடுகள் நடந்தன. பசியோடும், ஆவலோடும் எல்லோரும் காத்துக் கொண்டிருந்த வேளையில் எதிர்பராதவிதமாக சட்டி உடைந்து பயறும் அடுப்பில் கொட்டி நெருப்போடும் சாம்பலோடும் கலந்து விட்டது.
சோதனைக்கு மேல் சோதனையாக நடந்த இந்;நிகழ்ச்சி அனைவரையும் திடுக்கிடவைத்தது. மனம் கலங்கவைத்தது.
ஆனால், பிரபாகரன் கொஞ்சமும் கலங்காமல் அடுப்பருகே மண்டியிட்டு அமர்ந்தார்.
தீயை அணைத்தார். சாம்பலோடு கிடந்த பயறு வகைகளைக் கைகளால் பொறுக்கி ஊதி மற்றொரு பாத்திரத்தில் போட்டார்.
கொஞ்சமும் கூட சலிப்படையாமல் அவர் செய்ததைப் பார்த்த மற்றத் தோழர்கள் ஓடிவந்து பயறைப் பொறுக்கத் தொடங்கினார்கள்.
பின்னர் பிரபாகரனே தன் கையால் பயறை அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுத்தார்.
கடைசியில் அவருக்கு எதுவும் மிஞ்சவில்லை. தண்ணீரைக் குடித்துவிட்டுக் காய்ந்த வயிற்றுடன் அவர் படுத்துக் கொண்டதைக் கண்ட உறுப்பினர்கள் நெஞ்சம் கரைந்தனர் என்று அவர் நினைவு கூர்ந்திருந்தார்.
படிப்படியாக மணலாற்றுக் காட்டுப்பகுதிக்குள் இருந்த புலிகளுக்கு தேவையான விநியோகங்கள் கிடைக்கத் தொடங்கின.
கிழக்கு மாகாணத்தோடும் காட்டு வழியூடான தரைத் தொடர்பும் விநியோகமும் புலி இயக்கத்தினருக்கு இருந்தது.
கடல் வழித் தொடர்பு மூலம் தமிழ்நாட்டில் இருந்தும் உணவு மற்றும் தேவையான விநியோகங்களை புலிகள் பெற்றுக்கொண்டனர்.
மணலாற்றுக் காட்டுக்குள் சகல வசதிகளும் கொண்ட தலைமையகத்தை புலிகள் நிறுவிக் கொண்டனர். அங்கிருந்து வடக்கு- கிழக்கில் இந்தியப் படைக்கு எதிரான போரை நெறி;ப்படுத்திக் கொண்டிருந்தார் பிரபாகரன்.
துருப்பிடித்த ரிவோல்வர்
எம்முடைய இயக்கம் ஆரம்பக் காலகட்டத்தில் ஒரே ஒரு துருப்பிடித்த ரிவோல்வரைக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டது.
எம்முடைய தலைவர் முதன் முதலில் ஒரு துரோகியைக் கொல்வதற்காக அவரிடம் இருந்ததும் துருப்பிடித்த துப்பாக்கிதான்.
ஆனால் அவரிடம் தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்பன தாராளமாக இருந்தன. அந்த விடாமுயற்சி காரணமாகவே இன்று உலகம் வியக்கும் வண்ணம் எம்மை உயரச் செய்தது.
ஆயுதங்களை இயக்குவது பற்றிக்கூட சினிமாப் படங்கள் ஊடாகவும், புத்தகங்கள் ஊடாகவுமே நாம் அறிந்து இருக்கிறோம்.
முதன்முதலில் உப இயந்திரத் துப்பாக்கியைப் பாரத்தபோது, அதுவும் இராணுவத்தினரின் கைகளில் சற்று தூரத்தில்தான் பார்த்திருக்கிறேன்.
அதன் பக்கவாட்டமாக அமைந்துள்ள காற்றுச் செல்லும் துளைகள் ஊடாகவும் குண்டுகள் பாயுமோ என்ற சந்தேகம் கூட என்னுள் இருந்தது” இப்படிக் கூறியவர் புலிகளின் முன்னாள் யாழ் மாவட்ட தளபதி மறைந்த கிட்டு.
புலிவேட்டை
புலிகளின் கதை இனிமேல் முடிந்தது.
புலிகள் மிக மோசமாக பலவீனமாகி விட்டனர் என்று இந்தியப் படையினர் மட்டுமல்ல, ஏனைய தமிழ் இயக்கங்களும் அவ்வாறே நினைத்தன.
அதனால் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியப் படைக்கும், இந்திய அரசுக்கும் விசுவாசமாக நடந்து நல்ல பெயர் எடுப்பதில் முக்கியமாக மூன்று இயக்கங்கள் போட்டி போட்டன.
ஈ.பி.ஆர்.எல்.எப்,- ஈ.என்.டி.எல்.எப், ரெலோ ஆகியவைதான் அந்த மூன்று இயக்கங்கள்.
போட்டியில் முன்னணியில் நின்றது ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புத்தான்.
யாழ் நகரில் உள்ள அசோகா ஹோட்டலில் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தினர் தமது அலுவலகத்தை திறந்தனர். அக் ஹோட்டலுக்கு அருகே இந்தியப் படையின் பெரிய முகாம் ஒன்று இருந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எப் செயலாளர் நாயகம் பத்மநாபா உட்பட அந்த இயக்கத்தின் முக்கிய பிரமுகர்கள் அசோகா ஹோட்டலில் வந்து தங்கிக் கொண்டனர்.
அங்கிருந்து கொண்டு முன்னாள் உறுப்பினர்களைத் திரட்டத் தொடங்கினார்கள்.
பத்மநாபா இயக்கத்துக்கு ஆள் திரட்டுவதில் எந்தவொரு அளவு கோலையும் வைத்திருந்தவரல்ல. கட்டுப்பாடு விடயத்திலும்; இறுக்கமான போக்கைக் கடைப்பிடித்தவரும் அல்ல.
அவ்வப்போது தோன்றும் தேவைகளுக்கு ஏற்ப யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம் என்பதுதான் பத்மநாபாவின் உறுப்பினர் சேர்ப்புக்கான விதியாக இருந்தது.
உறுதியான உறுப்பினர்களை பயிற்றுவி;ப்பது, கட்டுப்பாட்டை மீறும் உறுப்பினர்களை தண்டிப்பது, தவறான சக்திகளை இயக்கத்தின் உள்ளே கொண்டுவந்து இயக்க அமைப்புக்களை பலவீனப்படுத்தாமல் இருப்பது போன்றவை ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்க விதிகளாக இருந்த காலமும் உண்டு.
அக் காலகட்டத்தில்தான் ஈ.பி.ஆர்.எல்.எப் என்பது ஏனைய இயக்கங்களில் இருந்து வேறுபட்ட புரட்சிகர அமைப்பாக நோக்கப்பட்டது.
ஈ.பி.ஆர்.எல்.எப் வளர்ச்சி அதே திசையில் சென்றிருக்குமானால் புலிகளுக்கு சமமான ஆனால் வித்தியாசமான புரட்சிகர அமைப்பாக ஈ.பி.ஆர்.எல்.எப் இன்று விளங்கியிருக்கும்.
1983க்கு பின்னர் உறுப்பினர் திரட்டலில் ஏற்பட்ட பாரிய வீக்கமும், இயக்க வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்த திறமையான உறுப்பினர்களிடம் முடிவெடுக்கும் அதிகாரங்கள் இல்லாதிருந்தமையுமே ஈ.பி.ஆர்.எல்.எப் படிப்படியாக சரிவை எட்டக் காரணமாக இருந்தது.
வெளிப்பகட்டு
1983க்கு பின்னர் உறுப்பினர்களின் எண்ணிக்கை மூலம் பரபரப்பையும், ஆரவராத்தையும் காட்டும் ஒரு அமைப்பாக ஈ.பி.ஆர்.எல்.எப் ஒரு பலமான கட்சி. புலிகளுக்கு மாற்றமான சக்தி என்றெல்லாம் நம்பியிருந்தனர்.
ஆனால் ஒரே இரவுக்குள் ஈ.பி.ஆர்.எல்.எப்பை புலிகள் தடைசெய்து முடித்த போது அந்தப்ப பிமைகள் தகரந்தன.
பெரும் அலுவலகங்கள், எங்கும் முகாம்கள், வாகன வலயங்கள், வாய்வீச்சுக்கள் என்று வெளி;ப்பகட்டில் காட்டிய அக்கறையை உட்கட்டமைப்பிலே உறுதிவாய்ந்த புலிகளை எதிர்கொள்ள முடியாமல் ஒரே இரவில் தகர்ந்தது.
இது ஒரு வரலாற்றுப் படிப்பினையாகும்.
ஆயினும் தனது வீழ்ச்சியில் இருந்தும் ஈ.பி.ஆர்.எல்.எப் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பது இந்தியப் படையோடு அந்த இயக்கத்தினர் வந்த போது மேற்கொண்ட அனுகுமுறைகளில் தெரிந்தன.
மட்டக்களப்பில் கிருபாகரன் போல யாழ்ப்பாணத்திலும் வாய்ப்புத் தரப்பட்டது.
“அசோகா ஹோட்டலில் பத்தமநாபாவைச் சென்று சந்தித்தால் எத்தனை மோசமானவர்களாக இருப்பினும் அவர்கள் பாபவிமோசனம் பெற்றுவிட்டார்கள் என்று அர்த்தம்”.
முன்னர் என்ன பாபம் செய்திருந்தாலும் அவர்களுக்கு உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டு கையில் ஆயுதம் தரப்பட்டது.
“புலிகள் பாசிஸ்டுகள். அவர்களை ஒழிக்க போராட வேண்டும்” என்றனர். தாம்கூறிய பாசிஸ்டுகளை ஒழிக்க சமூக விரோதிகளை வளர்த்துவிடலாமா என்று நினைத்துப் பார்க்க நேரம் இருக்கவில்லை.
யாழ்ப்பாணமெங்கும் ஒரே பரபரப்பு. ஈ.பி.ஆர்.எல்.எப்.பை சுருக்கமாக ஈப்ஸ் என்று அழைத்தனர் மக்கள்.
ஈப்ஸ் வந்து விட்டது. அசோகா ஹோட்டலில் குவிந்து நிற்கிறார்கள். இனி ஈப்ஸ்ஸின் காலம்தான். புலிகள் தலையெடுக்கவே முடியாது” என்றேல்லாம் எங்கும் ஒரே பேச்சு.
யாழ்ப்பாணத்தில் புலி வேட்டையில் இறங்கியது ஈ.பி.ஆர்.எல்.எப்.
உண்மையிலேயே பத்மநாபா சாதாரண மக்களை துன்புறுத்தும் நடவடிக்கைகளை மனதார வெறுக்கும் ஒரு தலைவராகவே இருந்தார்.
ஆனால் அவர் தேரந்தெடுத்த உறுப்பினர்கள், அவரால் பாப விமோசனம் வழங்கப்பட்டவர்கள் பத்மநாபாவுக்Nகு தண்ணிகாட்டக் கூடியவர்களாக இருந்தனர்.
விளைவு யாழ்ப்பாணத்தில் இந்தியப் படையினர் மீது வெறுப்புக் கொண்டிருந்த மக்கள் கூறினர்: “இந்தியப் படையினர் பரவாயில்லை. ஈப்ஸ் மோசமப்பா!”
மக்கள் நினைத்தது சரிதான் என்பதற்கு உதாரணமாக மட்டுமல்லாமல், யாருமே நினைத்தும் பார்க்க முடியாத சில கோரச் சம்பவங்கள் அரங்கேற ஆரம்பித்தன.
நெஞ்சை உலுக்கும் அச் சம்பவங்கள் பற்றி வரும் வாரம் கூறுகிறேன்.
(தொடர்ந்து வரும்)
அரசியல் தொடர் அற்புதன் எழுதுவது
-தொகுப்பு கி.பாஸ்கரன்-