முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இவர்கள் சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெறுகிறோம் என்று தனித்தனியாகக் கடிதம் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட 19 எம்.எல்.ஏ-க்களுக்கும் சபாநாயகர் தனபால், கட்சித் தாவுதல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்த நிலையில் இன்று எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தினர்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர்களிடம், 19 எம்.எல்.ஏ-க்களும் அ.தி.மு.க-வில்தான் இருக்கின்றனர். இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட முடியாது என்பதுபோல ஆளுநர் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
இந்தச் சூழ்நிலையில் புதுச்சேரியில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்க தமிழ்செல்வன், ஏழுமலை ஆகியோர் சென்னைக்குத் திடீரென புறப்பட்டனர்.
அவர்கள் தலைமைச் செயலகத்துக்கு வருவதாகத் தகவல் வெளியானது. அவர்களிடம் போனில் இதுகுறித்து பேசியபோது, “சபாநாயகர் தனபாலை சந்தித்து கடிதம் கொடுக்கச் செல்கிறோம்” என்றனர்.
“அந்தக் கடிதத்தில் என்ன இருக்கிறது” என்று கேட்டபோது, “முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி இருக்கிறது” என்று சூசகமாகத் தெரிவித்தனர்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 19-லிருந்து 23 ஆக உயர்ந்துள்ள நிலையில் அ.தி.மு.க கூட்டணி கட்சி எம்.எல்.ஏ-க்களான தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோரின் ஆதரவும் தினகரனுக்கு கிடைத்துள்ளதால் அவரின் பலம் 26 ஆக உயர்ந்துள்ளது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களே சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உரிமைக் கோர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தினகரனின் அடுத்தகட்ட வியூகத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் மன்னார்குடி உறவுகள்.