தனது கணவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பெண்ணுக்கு கிளியின் ‘சாட்சியத்தின்’ பின் நடைபெற்ற வழக்கில் ஆயுள் தண்டனை
தனது கணவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட பெண்ணொருவருக்கு, கிளியொன்றின் ‘சாட்சியத்தின்’ பின்னர் நடைபெற்ற வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த கிளெனா துராம் எனும் இப்பெண், தனது கணவர் மார்ட்டின் துராமை 5 தடவைகள் துப்பாக்கியால் சுட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார்.
2015 ஆம் ஆண்டு இச்சம்பவம் இடம்பெற்றது. கிளெனா துராமுக்கும் தலையில் துப்பாக்கிச் சூடு ஏற்பட்டிருந்தது. எனினும் அவர் உயிர்தப்பினார்.
மார்ட்டினின் சடலத்துக்கு அருகில் கிளெனாவும் இரத்தம் தோய்ந்த நிலையில் காணப்பட்டார்.
இவ்விருவரையும் யாரோ கொன்றுள்ளதாகவே முதலில் பொலிஸார் எண்ணினர். எனினும், ஒரு மணித்தியாலத்தின் பின்னர் கிளெனா துராம் உயிருடன் இருப்பதை பொலிஸார் உணர்ந்தனர்.
தனது முன்னாள் கணவருக்கும் தனது பிள்ளைகளுக்கும் கிளெனா எழுதிய தற்கொலை குறிப்பொன்றும் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கிளெனா மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தனது கணவர் மார்ட்டினை தான் கொல்லவில்லை என பொலிஸாரிடம் கூறிய கிளெனா, தற்கொலை குறிப்புகளை எழுதியதாகவும் தனக்கு நினைவில்லை என்றார்.
காயத்தின் பின் வைத்தியசாலையில் விழித்தெழும்பும் வரை நடந்தவை எதுவும் தனது நினைவில் இல்லை என்றார்.
எனினும், மார்ட்டின் துராம் கொல்லப்பட்ட பின்னர் இவர்களின் வீட்டிலிருந்து கிளியொன்றை அவரின் முன்னாள் மனைவியான கிறிஸ்டினா கெல்லர் தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றிருந்தார்.
கிறிஸ்டினாவும் மார்ட்டினும் வளர்த்த கிளியை பின்னர் மார்ட்டின் வளர்த்து வந்தார்.
தனது வீட்டுக்கு கொண்டுவரப்பட்ட கிளி, “சுட வேண்டாம்” என அடிக்கடி கூறிக்கொண்டிருந்ததைக் கேட்டு கிறிஸ்டினா வியப்படைந்தார். மார்ட்டினின் குரலின் சாயலில் இக்கிளி பேசியது.
இது மார்ட்டினின் கடைசி வார்த்தைகளாக இருக்கலாம் என கிறிஸ்டினாவும் மார்ட்டினின் பெற்றோரும் சந்தேகமடைந்தனர்.
அதையடுத்து கிளெனா துராமுக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டது.
ஆபிரிக்கன் கிறே இனத்தைச் சேர்ந்த இக்கிளிக்கு ‘பட்’ என பெயரிடப்பட்டிருந்தது.
இவ்வழக்கில் கிளியை நீதிமன்றில் சாட்சியமளிக்க வைக்கும் யோசனை பின்னர் கைவிடப்பட்டது.
எனினும், இவ்வழக்கில் கிளெனா துராம் (49) கடந்த மாதம் குற்றவாளியாக காணப்பட்டார். இந்நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை விதத்து கடந்த திங்கட்கிழம நீதிமன்றம் தீர்ப்பளித்தது.