விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வெள்ளையாபுரம் கிராமத்தில், ராமமூர்த்தி என்பவர் தனது அக்காக்களின் மகள்கள் இருவரை ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அழைப்பிதழ் அடித்துக்கொடுத்த விவகாரம், சமூக ஊடகங்களில் பரவி தற்போது பெரும் பரபரப்பு ஏற்படுத்திவருகிறது.
இதைப் பற்றி நாம் விசாரித்தபோது, ஊர்க்காரர்கள் பேச மறுத்துவிட்டனர். அந்த ஊரைப்பற்றித் தெரிந்தவர்கள் சிலர் மட்டும் பேசினார்கள்…
“ராமமூர்த்தி, ஆடு மாடு மேய்க்கும் கூலி வேலை செய்கிறார். அவர் அக்காக்களின் மகளில் ஒரு பெண் உடல் நலமில்லாமல் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார்.
அவருக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம்செய்வது சாத்தியமில்லாத விஷயம் என்பதால், அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள ராமமுர்த்தியை விட்டால் வேறு ஆளில்லை என்பதால், குடும்பத்தினர், ஊர்க்காரர்கள் சம்மதத்தோடு இந்த முடிவை எடுத்துள்ளனர்.
தெரியாத்தனமா இதற்கு பத்திரிக்கை அடித்துக் கொடுத்ததால்தான் இப்ப பிரச்னையாயிருச்சு. அதிகாரிகள் வந்து விசாரிச்சாங்க. அதனால, ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்யப்போறேன்னு கலெக்டருக்குஎழுதிக் கொடுத்திட்டாப்ல” என்றனர். தற்போது அதிகாரிகள், ஊரைக் கண்காணித்தபடி உள்ளனர்.
இந்தப் பகுதியில், இதுபோல ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மணப்பது சகஜமானது என்கிறார்கள் சிலர்.