• சிங்கள பொது எதிரணி இராணுவ தரப்பினரே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் சின்னையா சேனநாயக்க, இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க போன்றோர் மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்தும்போது, தமிழா் தரப்பினர் இதை ஏன் அவர்களின் ஒப்புதல் வாக்குமூலமாக எடுத்துக்கொள்ளக்கூடாது??
• பொன்சேகா சின்னையா சேனநாயக்க மீதே முதலில் யுத்தக்குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டும்: வலியுறுத்துகின்றது பொது எதிரணி
முன்னாள் இராணுவத் தளபதியான ஜகத் ஜயசூரிய மீது யுத்தக் குற்றம் சுமத்துவதாயின் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கடற்படை தளபதி டிரவிஸ் சின்னையா, இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க உள்ளிட்டோர் மீதும் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என்று பொது எதிரணியின் இராணுவத்தினருக்கான அமைப்பின் தலைவர் மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்தார்.
பத்தரமுல்லை நெலும் மாவத்தை அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பொது எதிரணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் இராணுவ தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக யுத்தக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை பெரும் தவறாகும். தெற்கின் கட்டளை பிரதானியாக இவர் செயற்பட்ட காலத்திலும் கூட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தலைமையில் நாட்டில் யுத்தம் முன்னெடுக்கப்பட்டது.
எனவே முதலில் சரத் பொன்சேகா வின் மீது தான் யுத்தக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட வேண்டும். மேலும் இன்று மகேஷ் சேனநாயக்கவிற்கு இராணுவ தளபதி பதவி வழங்கப்பட்டுள்ளது.
இவர் அக்காலத்தில் செயற்பாட்டு அதிகாரியாக கடமையாற்றியிருந்தார். ஆனால் அவரின் மீது எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை.
அதேபோல் ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புச் சபையில் டிரவிஸ் சின்னையா கடமையாற்றி இருக்கிறார் என்பதை அறிந்தும் அவருக்கு கடற்படை தளபதி பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர்களை ஏன் யுத்த குற்றாவாளிகள் ஆக்கவில்லை.
தற்போது ஜகத் ஜயசூரியவிற்கு அமெரிக்கா செல்வதற்கான விசா இரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சரத் பொன்சேகா, டிரவீஸ் சின்னைய உள்ளிட்ட அமெரிக்காவின் தரகர்களுக்கு மாத்திரமே விசா வழங்கப்படுகின்றது.
ஆனால் யுத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாத்த இராணுவ வீரர்கள் மீது மாத்திரம் யுத்த குற்றம் சுமத்தப்படுவது நியாயமற்றது. எதிர்தரப்புடன் இருந்த மக்களுக்கு உணவு வழங்கி பாதுகாத்த இராணுவம் என்ற நற்பெயர் இலங்கை இராணுவத்திற்கு இருக்கின்றது.
மேலும் வெற்றிகரமாக 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்துள்ள இராணுவம் என்ற பெயரும் உள்ளது. முன்னாள் போராளியாக இருந்த தமிழினியையும் கூட பாதுகாத்து அவரை புத்தகம் எழுதவும் நாம் இடத்கொடுத்துள்ளோம்.
அதனால் உடனடியாக வெளிவிவகார அமைச்சு இந்த விடயம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட வேண்டும். அதுவே இராணுவத்தின் பக்கத்திலான பொறுப்பு கூறலாகவும் அமையும்.
மேலும் இராணுவ ஊடகப்பேச்சாளர் இந்த விடயம் பற்றி தாம் அறிந்துள்ளோம் என்று கருத்து வெளியிடுகின்ற போது மறுபுறத்தில் ஐனாதிபதி தான் இதனை பற்றி அறியவில்லை என்று தெரிவித்திருப்பது வேடிக்காயாக உள்ளது என்றார்.