திருவனந்தபுரம்: அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது என்று கூறியுள்ள நடிகர் கமல்ஹாசன், இது தொடரக்கூடாது என்றும் அரசுக்குப் பாடம் கற்றுக் கொடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ” இதைவிட அவலம் வேறு வேண்டுமா? அந்தப் பொண்ணு பேரு ஸ்ருதி, அக்ஷ்ரா என்று இருந்தால் மட்டும்தான் நான் கோபப்படணுமா? அனிதா எனக்கும் மகள்தான்.
இன்னும் இன்னும் கொடுமைகள் நடந்தால்தான் அரசுகள் தீர்வு தரும் என்றால் நீங்க வேண்டாம். நாங்களே பார்த்துக்கொள்கிறோம். நல்ல மருத்துவரை இழந்துவிட்டோம். திருமாவளவன் பொங்கி எழவேண்டும்.
அவர் ஏன் வரவேண்டும் என்கிறேன் என்றால், ஒரு காரணத்துக்காகத்தான் சொல்கிறேன். அவர் நன்றாக கோபப்படுவார். அவர் மட்டுமல்ல எல்லோரும் சேர்ந்து வெகுண்டு எழவேண்டும். மத்திய மாநில அரசுகள், நீதிமன்றங்கள் எல்லாம் நாம் வைத்ததுதான்.
அங்கே சென்று நன்றாக வாதாட வேண்டும், வாதாட வேண்டியவர்கள் எல்லாம் பேரம் பேசுகிறார்கள். இந்த விவாகரத்தில் அந்தப்பெண் எந்த ஊர், என்ன சாதி மதம் கட்சி என்றெல்லாம் பார்க்க கூடாது. பேதங்கள் கடந்து நியத்துக்காக நாம் அனைவரும் போராடவேண்டும்.
அனிதாவின் கனவு மண்ணோடு மண்ணாகிவிட்டது. ஒன்று சேர்ந்து அரசுக்குப் பாடம் கற்றுக் கொடுப்போம் ” என்று நடிகர் கமல்ஹாசன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.