கடந்த வாரம், உல­க­ளவில் இலங்­கையைப் பிர­ப­லப்­ப­டுத்­து­வ­தற்குக் கார­ண­ மாக இருந்­தவர் முன்னாள் இரா­ணுவத் தள­பதி ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரிய.

இவ­ருக்கு எதி­ராக இலத்தீன் அமெ­ரிக்க நாடு­களில் தொட­ரப்­பட்ட போர்க்­குற்ற வழக்­குகள், சர்­வ­தேச ஊட­கங்­களில் முக்­கிய செய்­தி­க­ளாக இடம்­பெற்­றி­ருந்­தன.

ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரிய இலங்கை இரா­ணு­வத்தின் முன்னாள் தள­பதி. போர் முடிந்த பின்னர், பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­விடம் இருந்து இரா­ணுவத் தள­பதி பதவி பிடுங்­கப்­பட்ட போது, 2009 ஜூலையில் இவர் இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்டார்.

2013 ஆகஸ்ட் 1 ஆம் திகதி வரை அவர் இரா­ணுவத் தள­ப­தி­யாக இருந்­தவர். பின்னர், பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாக நியமிக்கப்பட்ட அவர், 2015இல் ஆட்சி மாற்­றத்­தை­ய­டுத்து, பிரே­சி­லுக்­கான தூது­வ­ராக நிய­மிக்­கப்­பட்டார்.

2015 ஆகஸ்ட் 5ஆம் திகதி பிரே­சி­லுக் ­கான தூது­வ­ராக நிய­மிக்­கப்­பட்ட அவர், கடந்த ஆகஸ்ட் 27ஆம் திக­தி­யுடன் அந்தப் பத­வியில் இருந்து ஓய்­வு­பெற்று விட்டார் என்று வெளி­வி­வ­கார அமைச்சு கூறு­கி­றது.

இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்னர், 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, 2009ஆம் ஆண்டு போர் முடி­வுக்கு வந்­தது வரை­யான காலப்­ப­கு­தியில், ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரிய வன்னி படை­களின் தலை­மை­ய­கத்தின் தள­ப­தி­யாக பணியாற்றியிருந்தார்.

இந்தக் காலப்­ப­கு­தியில் இடம்­பெற்ற சம்­ப­வங்­க­ளினால் தான், அவர் மீது இலத்தீன் அமெ­ரிக்க நாடு­களில் வழக்­குகள் தொட­ரப்­பட்­டுள்­ளன.

2007ஆம் ஆண்டு, வன்­னியில் படை நட­வ­டிக்­கை­களை விரி­வாக்கத் திட்­ட­மிட்ட அப்­போ­தைய இரா­ணுவத் தள­பதி சரத் பொன்­சேகா, வன்னிப் படை­களின் தள­ப­தி­யாக இருந்த   மேஜர் ஜெனரல் உபாலி எதி­ரி­சிங்­கவை நீக்கி விட்டு, ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரி­யவை நிய­மித்­தி­ருந்தார். அதற்கு முக்­கி­ய­மான காரணம் இருந்­தது.

விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போர் நட­வ­டிக்கை வன்னிப் படை­களின் தலை­மை­ய­கத்தின் கீழ் இருந்த படைப்­பி­ரி­வு­க­ளா­லேயே முன்னெ­டுக்­கப்­பட்­டன.

ஆனால், அதனை முற்­றி­லு­மாக கட்­டுப்­ப­டுத்தி, வழி­ந­டத்­தி­யது பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தான். கொழும்பில் இருந்தும், அவ்வப்போது நேர­டி­யாக கள­மு­னைக்குச் சென்றும், சரத் பொன்­சே­காவே சண்­டையை வழி நடத்­தி­யி­ருந்தார்.

வன்னிப் படை­களின் தலை­மை­ய­கமும், அதன் தள­ப­தி­யான ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரி­யவும், இந்தப் போர் நட­வ­டிக்­கை யில் ஒருடம்மியாகத் தான் பயன்­ப­டுத்­தப்­பட்­டனர்.

சண்­டையை தான் விரும்­பி­ய­வாறு நடத்­து­வ­தற்­காக சரத் பொன்­சேகா ஏற்­ப­டுத்திக் கொண்ட மாற்றம் இது. அதற்­காகத் தான், ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரி­ய­வையும் அவர் வன்னிப் படை­களின் தள­ப­தி­யாக நிய­மித்­தி­ருந்தார்.

ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரி­யவும் சரத் பொன்­சே­காவின் எதிர்­பார்ப்­புக்கு அமைய கடைசி வரை, போர் நட­வ­டிக்­கை­களில் எந்தத் தலையீடுகளையும் செய்­யா­ம­லேயே இருந்து வந்தார்.

ஆனாலும், சரத் பொன்­சேகா நீக்­கப்­பட்­டதும், இரா­ணுவத் தள­ப­தி­யாகும் வாய்ப்பு ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரி­ய­வுக்கு கிட்­டி­யது.

அவர் இரா­ணுவத் தள­ப­தி­யான பின்னர், பல சந்­தர்ப்­பங்­களில், தாமே வன்னி மனி­தா­பி­மானப் போர் நட­வ­டிக்­கைக்குத் தலைமை தாங்கியதாக உரிமை கோரி­யி­ருந்தார்.

மஹிந்த ராஜபக் ஷ காலத்தில் போர்க்­குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்ட போது, அதனை நிரா­க­ரித்த ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரிய, தாமே போரில் ஈடு­பட்ட படை­க­ளுக்கு தலைமை தாங்­கி­ய­தா­கவும், போர்க்­குற்­றங்கள் எதிலும் படை­யினர் ஈடு­ப­ட­வில்லை என்றும் கூறி­யி­ருந்தார்.

உண்­மையில், சரத் பொன்­சே­கா­வினால் ஓரம்­கட்டி வைக்­கப்­பட்­டி­ருந்­தவர் தான், ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரிய.

அதனால் தான், சரத் பொன்சேகா வெளி­யேற்­றப்­பட்­டதும், அந்த கௌர­வத்தை தன­தாக்கிக் கொள்ள முயன்றார்.

2015 ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர், பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தானி பத­வியில் இருந்து நீக்­கப்­பட்ட ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரி­யவை, பிரே­சி­லுக்­கான தூது­வ­ராக தற்­போ­தைய அர­சாங்கம் நிய­மித்­தி­ருந்­தது.

பிரே­சிலில் உள்ள தூத­ர­கத்தில் இருந்து பணி­யாற்­றி­னாலும், அருகில் உள்ள இலத்தீன் அமெ­ரிக்க நாடு­க­ளான, சிலி, ஆஜென்­ரீனா, பெரு, கொலம்­பியா, சூரி னாம் ஆகிய ஐந்து நாடு­க­ளுக்கும், இவர் தூது­வ­ராகச் செயற்­பட்டு வந்தார்.

இந்­த­நி­லையில் தான், கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி பிரேசில் மற்றும் கொலம்­பியா ஆகிய நாடு­களில், திடீ­ரென ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரி­ய­வுக்கு எதி­ராக போர்க்­குற்ற வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டன.

AP-640x381

முன்னாள் ஐ.நா. நிபுணர் யஸ்மின் சூகா தலை­மையில் செயற்­ப­டும்-­தென்­னா­பி­ரிக்­காவைத் தள­மாகக் கொண்ட- உண்மை மற்றும் நீதிக்­கான அனைத்­து­லக திட்டம் என்ற அமைப்பே இந்த போர்க்­குற்ற வழக்­கு­களை தாக்கல் செய்­தி­ருந்­தது.

இதற்கு ஆஜென்­ரீ­னாவைச் சேர்ந்த, Centro de Estudios Legales y Sociales, பிரே­சிலைச் சேர்ந்த CONECTAS, சிலியில் உள்ள Nelson Caucoto and Associates, கொலம்­பி­யாவில் உள்ள, Comisión Colombiana de Juristas, பெருவில் உள்ள, The Instituto de Defensa Legal ஆகிய மனித உரிமை அமைப்­புகள் உத­வி­களை வழங்­கின.

கடந்த மாதம் 28ஆம் திகதி கொலம்­பி­யா­விலும், பிரே­சி­லிலும் இந்த வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டன.

சிலி, பெரு, ஆஜென்­ரீனா ஆகிய நாடு­களில் அடுத்த சில நாட்­களில் வழக்­குகள் தாக்கல் செய்யப்­படும் என்றும் அறி­விக்­கப்­பட்­டது. ஆனால், இலங்கைத் தூது­வ­ருக்கு எதி ­ராக வழக்கை பெற்றுக் கொள்­வ­தற்கு சூரினாம் நாட்டு அதி­கா­ரிகள் மறுத்­தி­ருந்­தனர்.

2007ஆம் ஆண்டு தொடக்கம், 2009ஆம் ஆண்டு வரை, ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரிய வன்னி படை­களின் தள­ப­தி­யாக இருந்த போது, வவு­னியாவில் உள்ள ஜோசப் முகாமில் இருந்து இரா­ணுவ நட­வ­டிக்­கையை மேற்­பார்வை செய்தார்.

இவ­ரது மேற்­பார்­வையில் இருந்த இரா­ணுவப் பிரி­வுகள், மருத்­து­வ­ம­னைகள் மீது தாக்­குதல் நடத்­தி­ய­தா­கவும், ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் கொல்­லப்­பட்­ட­தா­கவும், காணாமல் ஆக்­கப்­பட்­ட­தா­கவும், சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­ட­தா­கவும் இந்த வழக்கில் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்­ளது.

இதற்கு ஆதா­ர­மாக, வவு­னியா ஜோசப் முகாமில், தடுத்து வைக்­கப்­பட்டு சித்­தி­ர­வதை செய்­யப்­பட்டு, விடு­விக்­கப்­பட்ட 14 பேரின் சாட்­சி­யங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. முன்­ன­தாக, ஜோசப் முகாம் சித்­தி­ர­வ­தைகள் தொடர்­பாக யஸ்மின் சூகா, வெளி­யிட்ட அறிக்­கையில் இந்த சாட்­சி­யங்­களை வெளி­யிட்­டி­ருந்தார்.

வவு­னி­யாவில் உள்ள படைத் தலை­மை­ய­கமே ஜோசப் முகாம் என்று அழைக்­கப்­ப­டு­கி­றது. இதனை JOSEPH முகாம் என்றே பல்­வேறு மனித உரிமை அமைப்­பு­களும் அறிக்­கை­யிட்­டுள்­ளன. இப்­போது தொடுக்­கப்­பட்­டுள்ள வழக்­கிலும் அவ்­வாறு தான் கூறப்­பட்­டுள்­ளது.

ஆனால் அது JOSEPH அல்ல. JOSFH என்­பதே சரி­யா­னது. கூட்டு நட­வ­டிக்கை பாது­காப்பு படை தலை­மை­யகம் (Joint Operation Security Forces Headquarters) என்­பதே இதன் விரி­வாக்கம்.

இந்த ஜோசப் முகா­மி­லேயே, ஜெனரல் ஜய­சூ­ரிய பணி­யாற்­றி­யி­ருந்தார். அங்­குள்ள சித்­தி­ர­வதைக் கூடத்தில், துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படும் கைதிகள் அலறும் சத்தம் அதி­கா­ரி­க­ளுக்கும் கேட்கும் என்று சாட்­சி­யங்கள் அளிக்­கப்­பட்­டி­ருந்­தன.

இதன் மூலம், சித்­தி­ர­வ­தை­களை அவர் அறிந்­தி­ருந்தார், அதற்கு பொறுப்­பாக இருந்தார் என்­பது ஒரு குற்­றச்­சாட்டு.

வன்னிப் படை­களின் தள­பதி என்ற வகையில், போரின் இறு­திக்­கட்­டத்தில், பொது­மக்கள் கொல்­லப்­பட்­டமை, மருத்­து­வ­ம­னைகள் தாக்­கப்­பட்­டமை போன்­ற­வற்­றுக்கும் இவர் பொறுப்­புக்­கூற வேண்டும் என்­பது மற்­றொரு குற்­றச்­சாட்டு.

இதன் அடிப்­ப­டையில் தான், ஜெனரல் ஜய­சூ­ரி­ய­வுக்கு எதி­ரான வழக்­குகள் தொடுக்­கப்­பட்­டன. ஆனால், இந்த வழக்­குகள் தாக்கல் செய்­யப்­ப­டு­வ­தற்கு முதல் நாளான, ஆகஸ்ட் 27ஆம் திக­தியே, பிரே­சி­லி­லிருந்து வெளி­யேறி விட்டார் அவர்.

அவர் டுபாய் வழி­யாக கடந்த 30 ஆம் திகதி கொழும்பு வந்து சேரு­வ­தற்­கி­டையில், போர்க்­குற்ற வழக்­கிற்கு அஞ்சி தப்­பி­யோடி விட்­ட­தாக பர­வ­லாக செய்­திகள் உலா­வின.

ஜெனரல் ஜய­சூ­ரி­யவின் பணிக்­காலம் முடிந்து விட்­டது, அவ­ரது வெளி­யேற்றம் முன்­னரே திட்­ட­மி­டப்­பட்­டது என்­கி­றது அர­சாங்கம். ஆனால், வழக்குத் தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளதை அறிந்தே வெளி­யே­றி­யி­ருக்கக் கூடும் என்­பது, யஸ்மின் சூகாவின் சந்­தேகம். அதனை அவர் லண்­டனில் கூறி­யி­ருந்தார்.

ஒரு வழி­யாக, ஜெனரல் ஜய­சூ­ரிய கொழும்பு வந்து சேர்ந்து விட்டார். இங்கு வந்­ததும், அவர் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய போது, சில விட­யங்­களைக் கூறி­யி­ருக்­கிறார்.

வழக்கில் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்­ளது போல, இறு­திக்­கட்டப் போரில், இரா­ணுவ அணி­க­ளுக்கு நேர­டி­யாக உத்­த­ர­வு­களை தான் வழங்­க­வில்லை என்றும் அவ்­வாறு கூறப்­பட்­டுள்­ளது பொய் என்றும் கூறி­யி­ருக்­கிறார்.

அவ­ரது இந்தக் கருத்து உண்­மை­யா­னதும் கூட. முழு உத்­த­ர­வு­களும் கொழும்பில் இருந்தே பிறப்­பிக்­கப்­பட்­டன, வன்­னிப்­ப­டை­களின் தள­ப­தி­யாக இவர், வெறும் டம்­மி­யாகத் தான் இருந்தார்.

ஆனாலும், இரா­ணுவத் தள­ப­தி­யான பின்னர், தனது மேற்­பார்­வையில் தான் வன்னிப் படை நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக பல­இ­டங்­களில் கூறி­யி­ருந்தார். அதுவே அவ­ருக்கு வினை­யாக வந்­தி­ருக்­கி­றது.

ஆனாலும், ஜோசப் முகாமில் இருந்­த­தாக கூறப்­பட்­டுள்ள சித்­தி­ர­வதைக் கூடம் பற்றி இவர் எதையும் கூற­வில்லை. அதுவும் கூட இவ­ருக்கு எதி­ரான வழக்கில் உள்­ளது.

Sarath_Fonseka

இறுதிப் போர் தொடர்­பாக வழக்குத் தொடர வேண்­டு­மானால் சரத் பொன்­சே­கா­வுக்கு எதி­ரா­கவே தொடர வேண்டும் என்றும், அவரே போருக்கு தலைமை தாங்­கினார் என்றும் பழி­போ­டவும் ஜெனரல் ஜய­சூ­ரிய தவ­ற­வில்லை.

ஆனாலும், இந்த விட­யத்தில், இவர் தப்­பிக்க முடி­யா­த­படி சில சான்­றுகள் இருப்­பதை மறுக்க முடி­யாது. 2013ஆம் ஆண்டு, பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யாகப் பொறுப்­பேற்ற போது, ஜெனரல் ஜய­சூ­ரி­யவின், வர­லாறு பற்­றிய பதிவு ஒன்றை பாது­காப்பு அமைச்சு இணை­யத்­தளம் வெளி­யிட்­டது. அதில் பின்­வ­ரு­மாறு கூறப்­பட்­டுள்­ளது,-

“He has been the Commander, Security Forces Wanni since August 2007 before he took over the mantle of the Army. To his credit, General Jagath Jayasuriya has been actively engaged in the overall military planning and operations in the Wanni.”

வன்னிப் படை­களின் தள­ப­தி­யாக, 2007 ஆகஸ்ட்டில் பொறுப்­பேற்ற ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரிய, வன்­னியில் ஒட்­டு­மொத்த இரா­ணுவத் திட்­ட­மிடல் மற்றும் நட­வ­டிக்­கை­களில் தீவி­ர­மாக ஈடு­பட்டார் என்­பதே மேற்­படி, பந்­தியின் சுருக்கம்.

வன்னி படை நட­வ­டிக்­கையில் வெறும் டம்­மி­யாக பயன்­ப­டுத்­தப்­பட்­டாலும், அதி­கா­ர­பூர்வ தள­ப­தி­யாக இருந்­ததால், இவ­ருக்கு சிக்கல் தான்.

அதே­வேளை, அர­சாங்கம் வெறும் பேச்­ச­ளவில் நிற்­காமல், தமக்கு எதி­ராக சர்­வ­தேச விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­ப­டாது என்று ஐ.நாவிடம் வாக்­கு­றுதி பெற வேண்டும் என்றும் ஜெனரல் ஜெகத் ஜய­சூ­ரிய, கோரி­யி­ருக்­கிறார்.

இவ­ரது இந்தக் கருத்­துக்கள், போர்க்­குற்ற விசா­ரணை பீதியில் இருக்­கிறார் என்­பதை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

ஜெனரல் ஜய­சூ­ரிய, கொழும்பு வந்து சேர்ந்து விட்­டாரே, இனிமேல் போர்க்­குற்ற வழக்­கு­களால் அவரை என்ன செய்ய முடியும்? என்ற கேள்வி பல­ருக்கும் இருக்­கி­றது.

பிரேசில் உள்­ளிட்ட இலத்தீன் அமெ­ரிக்க நாடு­களில் கூட, ஜெனரல் ஜய­சூ­ரி­ய­வுக்கு சட்ட ரீதி­யான பாது­காப்பு இருந்­தது, இலங்­கையின் தூது­வ­ரான அவ­ருக்கு இரா­ஜ­தந்­திர விலக்­கு­ரிமை அளிக்­கப்­பட்­டி­ருந்­தது, குற்­ற­வியல் சட்­டங்­களின் கீழ், வெளி­நாட்டுத் தூது­வர்­க­ளுக்கு எதி­ராக வழக்குத் தொட­ரவோ கைது செய்­யவோ கூடாது என்­பது வியன்னா பிர­க­ட­னத்தில் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளது.

எனவே, பிரே­சிலில் தொடுக்­கப்­பட்ட வழக்கின் அடிப்­ப­டையில், ஜெனரல் ஜய­சூ­ரிய கைது செய்­யப்­ப­டலாம் என்றோ அதன் அடிப்படையில், மின்­சார நாற்­கா­லிக்கு கொண்டு செல்­லப்­ப­டுவார் என்றோ எதிர்­பார்க்க முடி­யாது.

இந்த வழக்கைத் தொடர்ந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த, சட்ட நிபு­ண­ரான, கார்லோஸ் காஸ்­ரே­சனா பெர்­னாண்டஸ் இதனை அறி­யாமல் இந்த வழக்கைத் தொடர்ந்­தி­ருக்­க­வில்லை.

உண்மை மற்றும் நீதிக்­கான அனைத்­து­லகத் திட்­டத்தின் சார்பில், வழக்­கு­களைத் தாக்கல் செய்த ஸ்பானிஷ் சட்­ட­நி­பு­ண­ரான கார்லோஸ் பெர்­னாண்டஸ், ஒன்றும் சாதா­ர­ண­மா­னவர் அல்லர். போர்க்­குற்­றங்கள் சார்ந்த வழக்­கு­களில் மிகவும் பிர­ப­ல­மா­னவர்.

அதுவும் இலத்தீன் அமெ­ரிக்க சர்­வா­தி­கா­ரிகள், போர்க்­குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ரான வழக்­கு­களில் வாதா­டி­யவர் என்­பது பல­ருக்கும் தெரி­யாத விடயம்.

1976ஆம் ஆண்டு தொடக்கம், 1981ஆம் ஆண்டு வரை, ஆஜென்­ரீ­னாவை ஆட்சி செய்த சர்­வா­தி­காரி, ஜோசப் ராபெல் விடே­லா­வுக்கு எதி­ராக, 1996ஆம் ஆண்டு சட்ட நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­த­வர்­களில் ஒருவர் தான், கார்லோஸ் பெர்­னாண்டஸ்.

இந்த சட்ட நட­வ­டிக்­கை­களின் தொடர்ச்­சி­யாக, ஜோசப் விடே­லா­வுக்கு, எதி­ராக சுமத்­தப்­பட்ட இரண்டு மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டு­க­ளுக்­காக, ஆயுள் தண்­ட­னை­யையும், 50 ஆண்டு சிறைத்­தண்­ட­னை­யையும் பெற்றார். சிறை­யி­லேயே அவர் மர­ணத்தை தழு­வவும் நேரிட்­டது.

அது­போ­லவே, சிலியில் சர்­வா­தி­கார ஆட்சி நடத்­திய ஜெனரல் அகஸ்டோ பினோ­சேக்கு எதி­ராக, கார்லோஸ் பெர்­னாண்டஸ் தான் ஸ்பானிய தேசிய நீதி­மன்­றத்தில் வழக்குத் தொடர்ந்­தி­ருந்தார். இவ­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு தீர்ப்பு அளிக்­கப்­பட முன்­னரே, 2006இல் மர­ண­மாகி விட்டார்.

அது­போ­லவே குவாட்­ட­மா­லாவில், ஜனா­தி­ப­தி­யாக இருந்த, அல்­போன்சோ போட்­டிலோ உள்­ளிட்ட போர்க்­குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக வழக்­கு­க­ளையும் தாக்கல் செய்­தவர் கார்லோஸ் பெர்­னாண்டஸ்.

போர்க்­குற்­றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்­பான சட்­டங்­களில் அனு­பவம் மிக்க இவர் தான், ஜெனரல் ஜய­சூ­ரி­ய­வுக்கு இலத்தீன் அமெ­ரிக்க நாடு­களில் இந்த வழக்கைத் தாக்கல் செய்­துள்ளார்.

ஜெனரல் பினோசே, ஜோசப் விடேலா போன்­ற­வர்­க­ளுக்கு எதி­ராக நாங்கள் வழக்­கு­களை ஆரம்­பித்த போது, இருந்த ஆதா­ரங்­களை விடவும், அதி­க­மான ஆதா­ரங்கள் இந்த வழக்கில் இருப்­பது தனக்கு அதிர்ச்­சி­யாக இருந்­தது என்று அவர் கூறி­யி­ருக்­கிறார்.

இரா­ஜ­தந்­திர விலக்­கு­ரிமை, ஜெனரல் ஜய­சூ­ரி­ய­வுக்கு உள்­ளது என்­பது தெரியும், இந்த வழக்கின் மூலம் அதனை நீக்கி, அவரை நாட்டை விட்டு வெளி­யேற்­று­வதே தமது நோக்கம் என்று ஆரம்­பத்­தி­லேயே, அவர் கூறி­யி­ருந்தார்.

வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்ட பின்னர் தான், ஜெனரல் ஜய­சூ­ரிய பிரே­சிலை விட்டு வெளி­யேறி விட்டார் என்­பது கார்லோஸ் பெர்னாண்டஸுக்கு தெரியும்.

அதற்குப் பின்னர், கருத்து வெளி­யிட்ட அவர், பிரே­சிலை விட்டு வெளி­யே­றி­யதன் மூலம், தமது வழக்கை ஜெனரல் ஜய­சூ­ரிய சுல­ப­மாக்கி விட்­ட­தாக கூறி­யி­ருக்­கிறார்.

“பிரே­சிலை விட்டு ஜய­சூ­ரிய வெளி­யே­றி­ய­தை­யிட்டு நான் கவ­லைப்­ப­ட­வில்லை. வழக்கு இப்­போது தான் ஆரம்­பித்­தி­ருக்­கி­றது.

அவர் எமது வழக்கை இல­கு­வாக்­கி­யி­ருக்­கிறார். ஏனென்றால், தப்­பிச்­சென்ற அவர் இனிமேல், வேறெங்கும் விலக்­கு­ரி­மையை அனுபவிக்க முடியாது” என்று அவர் கூறியிருப்பதன் மூலம், இந்த வழக்கு விவகாரம் இப்போது முடிவுக்கு வராது என்பது உறுதியாகியிருக்கிறது.

அத்துடன், ஜெனரல் ஜயசூரிய மீண்டும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்குத் திரும்பினால், கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று, தமது வழக்கில் திருத்தம் செய்ய முடியும் என்றும் கார்லோஸ் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, இதுபோன்ற போர்க்குற்ற வழக்குகளை மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அமெரிக்காவிலும், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா பிரித்தானியாவிலும், மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் சுவிட்சர்லாந்திலும் எதிர்கொண்டிருக்கின்றனர்.

மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு எதிராக பிரித்தானியாவில் வழக்குத் தொடுக்கப்பட்ட போது, உடனடியாகவே அவர் நாடு திரும்பி விட்டார்.

அதுபோல, மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், சுவிட்சர்லாந்துக்குள் நுழைந்தால் கைது செய்யப்படும் நிலை உள்ளது.

எனினும், நியூயோர்க்கில் ஐ.நாவுக்கான பிரதி தூதுவராக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இராஜதந்திர விலக்குரிமையால் வழக்கில் இருந்து தப்பினார்.

இப்போது, ஜெனரல் ஜயசூரிய போர்க்குற்ற வழக்கில் சிக்கியிருக்கிறார். இந்த வழக்கு அவருக்கு இலங்கையில் பாதுகாப்பு அச்சத்தைக் கொடுக்காது. ஆனால் வெளிநாடுகளில் அத்தகைய நிலை இருக்கும் என்று கூற முடியாது.

அதேவேளை, வெளிநாடுகளில் தொடுக்கப்பட்டுள்ள இதுபோன்ற வழக்குகள், உள்நாட்டு போர்க்குற்ற விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கான அழுத்தங்களை அரசாங்கத்துக்கு கொடுக்கக் கூடும்.

-சுபத்திரா –

Share.
Leave A Reply