சர்ச்சைக்குரிய தொலைக்காட்சி நாடகத்தை ஒளிபரப்புவதை பிரபல இந்திய தொலைக்காட்சி நிறுவனம் திடீர் என்று நிறுத்தியுள்ளது.
அந்த தொலைக்காட்சி சேனலில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நாடகம் பெஹ்ரிதார் பியா கி.
கடந்த ஜூலை மாதம் 17ம் திகதி முதல் ஒளிபரப்பான இந்த நாடகம் சர்ச்சையில் சிக்கியது.
நாடகத்தின்; கதையால் அதற்கு எதிராக பலர் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் புகார் தெரிவித்தனர்.
9 வயது சிறுவனுக்கும், 18 வயது பெண்ணுக்கும் திருமணம் செய்து வைத்து அவர்களின் வாழ்க்கையை காட்டி வந்தனர்.
9 வயது அஃபான் கான் கணவராகவும், தேஜஸ் பிரகாஷ் 18 வயது மனைவியாகவும் நடித்தனர்.
ஒரு சிறுவன் இளம்பெண்ணை பின்தொடர்வது, திருமணம் செய்து முதல் இரவு அறைக்குள் செல்வது ஆகியவற்றை பார்த்த மக்கள் நாடகத்திற்கு தடை விதிக்குமாறு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் புகார் தெரிவித்தனர்.
புகார்கள் எழுந்ததை அடுத்து நாடகம் ஒளிபரப்பாகும் நேரத்தை இரவு 8.30 மணியில் இருந்து 10.30 மணிக்கு மாற்றினார்கள். அப்படியும் எதிர்ப்பு வலுத்தது.
எதிர்ப்பு வலுத்ததை அடுத்து அந்த தொலைக்காட்சி நிறுவனம் பெஹ்ரிதார் பியா கி நாடகத்தை 28ம் திகதி முதல் ஒளிபரப்பவில்லை.
நாடகத்தை நிறுத்திவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.