கும்பகோணம் அருகே இன்று நடைபெறுவதாக இருந்த காதலனின் திருமணத்தை தர்ணா போராட்டம் நடத்தி காதலி தடுத்து நிறுத்தியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
கும்பகோணம் அருகே உள்ள கோவிலாச்சேரியை சேர்ந்த பாபுராஐன், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த துர்காதேவி என்ற பெண்ணை கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், துர்காவை கைவிட்டு வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த விசலூர் சங்கீதா என்ற பெண்ணை பாபுராஜன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.
இதையடுத்து கும்பகோணம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த மாதம் துர்கா தேவி புகார் அளித்திருந்தார்.
இதையறிந்த பாபுராஜன், திருமணத்தை நிறுத்தக்கூடாது என்று கும்பகோணம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், பாபுராஜன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே நிச்சயித்தவாறு சுவாமிமலை ஆலயத்தில் இன்று திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அங்கு வந்த துர்காதேவி தர்ணா போராட்டம் நடத்தியதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது.
திருமணம் நின்ற நிலையில் காதலன் பாபுராஐன் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டனர். துர்காதேவி அளித்த புகாரின்பேரில் பாபுராஜன் மற்றும் குடும்பத்தினரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.