தம்புள்ளை – அனுராதபுரம் பிரதான வீதியில் புலாகல பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு பெண் உயிரிழந்ததுடன் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தம்புள்ளை புலாகல பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீயானி மங்கலிகா என்ற 50 வயதான பெண்ணே விபத்தில் பலியாகியுள்ளார்.
மகளும், அவரது நண்பியும் பேருந்தில் இருந்து இறங்கியதும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வீதியை கடக்க முயற்சித்த போது மோட்டார் சைக்கிள் ஒன்று பெண் மீது மோதியுள்ளது.
விபத்தில் காயமடைந்த பெண் வீதியில் விழுந்து கிடந்த போது அருகில் உள்ள கடை ஒன்றின் உரிமையாளரும், இறந்த பெண்ணின் சகோதரரும் பெண்ணை தூக்க முயற்சித்த போது தம்புள்ளை திசையில் இருந்த வேகமாக வந்த ஜீப் வண்டி இவர்கள் மீது மோதியதாக சம்பவத்தை நேரில் பார்த்த உயிரிழந்த பெண்ணின் புதல்வி கூறியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் மோதுண்டு காயமடைந்த பெண், ஜீப் வண்டி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். முதல் விபத்து நடந்து மூன்று நிமிடத்திற்கு பின் அடுத்த விபத்து நடந்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த இரண்டு ஆண்களும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து சம்பந்தமாக ஜீப் வண்டியின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தம்புள்ளை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.