*தேவைப்படின் மேலும் நடவடிக்கை எடுக்கப்படலாம்
*காணாமல்போனோர் அலுவலகத்தை அமையுங்கள்
*படையினரிடமுள்ள காணிகளை விடுவியுங்கள்
*பயங்கரவாத தடைச்சட்டத்தின் வழக்குகளை முடியுங்கள்
*பாதிக்கப்பட்ட மக்கள் விரக்தி அடைந்துள்ளனர்
*ஜெனிவா பிரேரணையை விரைவாக அமுல்படுத்தவும்
*மனித உரிமை பேரவையை தணிப்பதற்கு முயற்சிக்க வேண்டாம்
*கால அட்டவணையுடன் முன்னேற்றங்கள் அவசியம்
இலங்கையானது சர்வதேச மனிதாபிமான சட்டம், மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டதாக கூறப்படும் விடயத்தில் நம்பகரமான பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்காவிடின் இந்த விவகாரம் சர்வதேச நியாயாதிக்கத்தை நோக்கிப் பயணிக்கும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் கடுமையாக எச்சரித்துள்ளார்.
அத்துடன் இது ஐ.நா. மனித உரிமை பேரவையை தணிப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியாக இருக்கக்கூடாது. மாறாக பாதிக்கப் பட்ட மக்களின் வேதனையை ஆராய்வதாக அமையவேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஜெனிவாவில் ஆரம்பித்ததையடுத்து முதலாவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது 40 நாடுகளின் நிலைமை தொடர்பாக பேரவையின் அமர்வில் உறுப்பு நாடுகளுக்கு விளக்கமளித்த செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பில் முக்கியமான சில விடயங்களை குறிப்பிட்டிருக்கின்றார்.
அவர் நேற்றைய ஜெனிவா அமர்வில் தொடர்ந்து உரையாற்றுகையில்;
இலங்கை அரசாங்கம் காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தை உடனடியாக நிறுவவேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றேன். அதுமட்டுமன்றி மக்களுக்கிடையில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களையும் அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்கவேண்டும்.
விசேடமாக இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை உடனடியாக விடுவிக்கவேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தினால் பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக தீர்க்கவேண்டும். இந்த வழக்குகள் நீண்டகாலமாக தேங்கிக்கிடக்கின்றன.
அதுமட்டுமன்றி பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்கவேண்டும் என்றும் அதற்குப் பதிலாக கொண்டுவரப்படும் சட்டமானது சர்வதேச தரத்திற்கு அமைவாக இருக்கவேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
மேலும் வடக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன்மூலம் அரசாங்கத்தின் தாமதமான மறுசீரமைப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட மக்கள் விரக்தியடைந்துள்ளனர் என்பது தெளிவாகின்றது.
அதுமட்டுமன்றி ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணையை முழுமையாக அமுல்படுத்தவேண்டுமென்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றேன்.
அதனூடாக பொறுப்புக்கூறல் பொறிமுறையை அரசாங்கம் உருவாக்கி அதன் செயற்பாடுகளை ஒரு காலநேர அட்டவணைக்குள் செயற்படுத்தவேண்டும் என்றும் குறிப்பிடுகின்றேன்.
இதேவேளை இந்த செயற்பாடுகளானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைபேரவையை தணிப்பதற்காக முன்னெடுக்கும் செயற்பாடுகளாக வெளிக்காட்டப்படக்கூடாது.
மேலும் இலங்கையானது சர்வதேச மனிதாபிமான சட்டம், மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டதாக கூறப்படும் விடயத்தில் நம்பகரமான பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்காவிடின் இந்த விவகாரம் சர்வதேச நியாயாதிக்கத்தை நோக்கிப் பயணிக்கும் என்பதையும் தெரிவிக்கின்றேன் என்றார்.