இனந்தெரியாத சிலர் குறுக்குப் பாதை ஒன்றினூடாக முச்சக்கரவண்டி ஒன்றில் தன்னை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி, தன்னிடமிருந்து தங்கச்சங்கிலி உள்ளிட்ட சில உடைமைகளை கொள்ளையிட்டுச் சென்றதாக பொய்யான முறைப்பாடொன்றை பதிவு செய்த மத்துகம பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவியொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரத்தியேக இசை வகுப்பொன்றுக்கு சென்றுகொண்டிருந்தபோது இனந்தெரியாதவர்களால் தான் கடத்தப்பட்டதாகவும், அதன்போது தன்னிடமிருந்த கைத்தொலைபேசி, தங்கச் சங்கிலி மற்றும் வயலின் ஆகியன கொள்ளையிடப்பட்டு, தான் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தொடங்கொட பொலிஸ் நிலையத்தில் மாணவியொருவரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம் மாணவி கடத்தப்பட்டதாகக் கூறப்படும் தினத்திலிருந்து மூன்று நாட்களின் பின்னரே முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவியின் வாக்குமூலத்துக்கமைய அவர் கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்பட்ட குறுக்கு வீதியிலுள்ள அனைத்து கண்காணிப்பு கெமராக்களையும் சோதனையிட்டபோது அவர் கூறியதை போன்று எந்தவொரு காட்சிகளும் அவற்றில் பதிவாகியிருக்காததை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸாருக்கு சந்தேகம் வலுத்ததனால் மாணவியின் நெருக்கமான நண்பர் வட்டாரத்தை சேர்ந்த சிலரிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
அவ் விசாரணைகளின் மூலம், அவர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட தினத்தில் எந்தவொரு பிரத்தியேக வகுப்புகளும் நடைபெறவில்லை எனவும், அன்றைய தினம் மாணவி அவரது காதலனுடன் கடற்கரை உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கொள்ளையிடப்பட்டதாக கூறப்பட்ட, மாணவியின் கைத்தொலைபேசி அவரது காதலனின் உறவினரொருவரிடமிருந்து மீட்கப்பட்ட அதேவேளை, நண்பியொருவரின் வீட்டிலிருந்து அவரது வயலினையும், மாணவியின் வீட்டு அலுமாரியில் ஆடைகளுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தங்கச்சங்கிலியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதன்பின்னர், முறைப்பாட்டாளரான மாணவியிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது, தான் காலனுடன் சென்ற பயணத்தை வீட்டாருக்கு மறைப்பதற்காகவே இவ்வாறு கடத்தல் நாடகமாடியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், பொலிஸாரின் நேரத்தை வீணடித்து, அவர்களை திசைதிருப்பி, போலி முறைப்பாடு செய்த காரணத்துக்காக முறைப்பாட்டாளரான மாணவியை தொடங்கொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.