காருக்குள்ள யாரு, கடைசியா பாரு” என்று ஒரு சவாலாம். யார் இப்படியெல்லாம் தலைப்பு வைப்பது?
சிநேகன் மாதிரியே, பிக் பாஸ் டீமிக்குள்ளும் ஒரு கவிஞர் இருக்கிறார் போல. அந்தக் காரை எங்கிருந்து பிடித்து வந்தார்களோ. தெரியவில்லை.
நூற்றாண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு பழைய ‘சொப்பன சுந்தரி’ வைத்திருந்த விண்டேஜ் வகை வாகனமாக இருந்தது.
கால்களைச் சற்று நீட்டி கூட வைக்க முடியாத அந்தக் குறுகிய காருக்குள், பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஏறி உட்கார வேண்டுமாம்.
பஸ்ஸர் ஒலி அடித்தவுடன், அனைவரும் கலந்தாலோசித்து ஒருவரை நாமினேட் செய்து, “அவர் ஏன் இறங்க வேண்டும்?” என்பதற்கான காரணங்களைச் சொல்லி இறக்க வேண்டுமாம். இப்படியே கடைசிவரை தாக்குப் பிடிக்கும் நபருக்குப் பத்து மதிப்பெண் கிடைக்கும்.
முதலில் சென்ற சிநேகன், ஏதோ அந்த காரை 180 மைல் வேகத்திற்கு ஓட்டப் போவது போல ஓட்டுநர் இருக்கையைப் பிடித்துக் கொண்டார்.
ஆரவ் அவரது பக்கத்தில் அமர்ந்து கொள்ள, தாமதமாக பிறகு வந்தவர்கள் எங்கு அமர்வது என்று தெரியாமல் விழித்தனர்.
பின் இருக்கையை சுஜாவும் கணேஷூம் ஆக்கிரமித்துக் கொள்ள, பிந்துவும் ஹரீஷூம் எப்படி அமர்வது என்று குழம்பினார்கள்.
பிறகு கணேஷின் மடியில் பிந்து அமர்ந்து கொள்ள ஹரீஷ் கார்னர் சீட்டில் ஒதுங்கினார். சற்று முன்னர்தான் கணேஷிற்கு போதாத வேளை என்று சொல்லியிருந்தேன். அப்படி இல்லை போல.
‘இந்த வண்டி எவ்வளவு மைலேஜ் தரும்.. எவ்வளவு வேகம் போகும்’ என்றெல்லாம் வையாபுரி விசாரித்துக் கொண்டிருந்தார்.
ரொம்ப முக்கியம். எப்படியாவது நேரம் போக வேண்டும் அல்லவா? ஒரு மாதிரியாக காருக்குள் நெருக்கடி நிலையை அவர்கள் உணரத் தொடங்கியபோது, ‘சிறகுகள் நீளுதே” என்ற உற்சாகமான பாடல் ஒலிக்கத் தொடங்கியது.
சற்று நேரம் தங்களின் சங்கடத்தை அவர்களால் மறக்க முடிந்தது. பாடலுக்கு ஏற்ப தலையாட்டத் தொடங்கினார்கள்.
ஆனால் பிக் பாஸ், தெளிய வைத்து தெளிய வைத்து அடிப்பதில் விற்பன்னர் என்பதை மறந்து போனார்கள்.