மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கார் மாவட்டத்தில் மகப்பேறுக்காக வந்தப் பெண்ணுக்கு மரத்தடியின் கீழ் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் சுமார்
80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தது.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. மேலும், அரசு மருத்துவமனைகள் குறித்த பெரும் கேள்விகளையும் எழுப்பியது.
மருத்துவமனை முழுவதும் தரம் உயர்த்தப்படாத நிலையில், நீட் தேர்வால் மட்டுமே தரமான மருத்துவர்கள் உருவாக்க முடியும் என்ற வாதத்தையும் மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், பா.ஜ.க ஆளும் மாநிலமான மத்தியப் பிரதேசத்திலிருந்து மீண்டும் ஒரு விவகாரம் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம் ராஜ்கார் மாவட்டத்தின் பையோரா பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்குப் பெண் ஒருவர் பிரசவத்துக்காக சென்றுள்ளார்.
அவருக்கு அங்குள்ள மரத்தடியின் கீழ் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மரத்துக்கு அடியில் பெட் மற்றும் விரிப்பு இல்லாத இரும்புக் கட்டில் போடப்பட்டு அதில் அவர் படுக்க வைக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் போடப்படும் டிரிப்ஸ், மரக்கிளையில் பொருத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இடமில்லாததால், அவருக்கு வெளியே இடமளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனைத் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.