இராணுவத்தின் அதி உயர் பதவியான பீல்ட் மார்ஷல் பதவியை வகிக்கும் இரா ணுவ வீரரான சரத்பொன்சேகாவை பாராளுமன்ற உறுப்பினராக வைத்திருப்பதன் மூலம் நாட்டில் இராணுவ சதிப்புரட்சி இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிக மாக காணப்படுகின் றன. எவ்வாறு ஹிட்லர் இராணுவ வீரனாக இருந்து ஆட் சியை பிடித்தாரோ அதேபோன்று இலங்கையிலும் நடக்கலாம்.
ஆகவே, இவருக்கு எதிராக வழக்கு தொடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் சட்டத்தரணி அஜித் பிரசன்ன தெரிவித்தார்.
நாட்டின் சிரேஷ்ட சட்டத்தரணிகள் சிலர் இவ்வாறு அமைச்சர்
சரத் பொன்சேகாவுக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கம் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சர் சரத் பொன்சேகா இராணுவம் தொடர்பிலும் போரக்குற்றம் தொடர்பிலும் பல்வேறுபட்ட அபிப்பிராயங்களை முன்வைத்து நாட்டின் இராணுவத்திற்கு களங்கத்தை ஏற்படுத்துகின்றார்.
அத்துடன் ஒரு இராணுவத்தின் உயர் பதவியான பீல்ட் மார்ஷல் பதவிக்குரிய சலுகைகளை அனுபவித்துக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினராகவும் செயற்படும் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆனால், அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இது தொடர்பில் இலங்கையின் சிரேஷ்ட சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
ஆனால், அதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையின் அரசியலமைப்பை பின்பற்றுவதாக சத்தியப்பிரமாணம் எடுத்துள்ளார்.
அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு சத்தியப்பிரமாணம் எடுத்துள்ளனர். அவர்களுக்கும் ஒரு கடமை இருக்கன்றது. அது என்னவென்றால், இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதற்கு முன்னர் இதற்கு ஒரு முடிவு எடுக்க முடியும்.
அத்துடன், இலங்கையில் ஒரு பீல்ட் மார்ஷல் என்கின்ற நிலையில் இருக்கின்றவருக்கு எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கைகள் பற்றி இராணுவ சட்டமூலத்தில் இல்லை.
ஏனென்றால் உண்மையில் இந்த பதவி இலங்கைக்கு உரியதல்ல. பீல்ட் மார்ஷல் பதவி என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையில் மூண்ட போரில் பங்கேற்று நாட்டிற்கு வெற்றியைத் தேடித்தருவதில் பங்காற்றிய முக்கிய வீரர்களுக்கு வழங்கும் உயரிய பதவியாகும்.
ஆனால் எமது நாட்டில் அவ்வாறு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கு எதிராக போர் இடம்பெறவில்லை. மார்ஷல் டிட்டோ போன்றவர்களே இதற்கு பொருத்தமானவர்கள் . உண்மையிலேயே இந்த பீரல்ட் மார்ஷல் என்கின்ற பதவிக்கு சரத் பொன்சேகா பொருத்தமானவர் அல்ல.
அத்துடன், இராணுவத்தில் இருப்பவரை பாராளுமன்றத்தில் வைத்திருப்பது நாட்டிற்கு பாரிய ஆபத்தை கொண்டுவந்துவிடும். இவ்வாறு இராணுவ தளபதியாக இருந்த ஹிட்லரும் கூட பாராளுமன்றத்தை சுற்றி பயங்கர ஆயுதங்கள், கனரக ஆயுதவாகனங்களை வரவழைத்து, பாராளுமன்ற ஜன்னல் வழியாக பீரங்கிகளை இலக்கு வைத்து , “என்னை இந்த நாட்டின் தலைவராக ஏற்றுக் கொள்கின்றீர்களா இல்லையா என ” அச்சுறுத்தல் விடுத்தே நாட்டை ஆளும் பொறுப்புக்கு வந்தார்.
ஆகவே, இவ்வாறு சீருடையை கழற்றி வைக்காத ஒரு இராணுவத் தளபதியை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்தால் அன்று ஹிட்லர் செய்தது போன்று ஒரு இராணுவ சதிப்புரட்சியை ஏற்படுத்தி இந்த ஜனநாயக நாட்டின் ஆட்சியை சரத் பொன்சேகா கவிழ்ப்பதற்கு தாராளமாகவே இடம் இருக்கின்றது.
மேலும், அவருக்கு இராணுவத்தரப்பில் இன்னும் ஆதரவு உண்டு. மகேஷ் சேனாநாயக்க இராணுவத்தளபதியானதும் ஏனைய அமைச்சர்களை சந்திக்கவில்லை.
அவர் ஜனாதிபதியை சந்தித்த பின்னர் சரத்பொன்சேகாவையே சந்திக்கச் சென்றார். அது எதைக்காட்டுகின்றது? இன்றும் எல்லோரும் சரத் பொன்சேகாவுக்கு கீழ்ப்படிவாக இருப்பதையே காட்டுகின்றது.
நான் ஒரு சட்டத்தரணி. நாட்டின் அரசியலமைப்பிற்கு கீழப்படிகின்றேன் என்று சத்தியப்பிரமாணம் செய்த ஒரு சட்டத்தரணி. ஆகவே, யாராவது அரசியலமைப்பை மீறுவார்கள் என்றால் ஒரு சட்டத்தரணி என்றவகையில் அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பது எமது கடமை.
அந்தவகையில் சரத் பொன்சேகாவும் இலங்கையின் அரசியலமைப்பை மீறியுள்ளார். அப்படி நான் சொல்வதற்கு காரணம் இருக்கின்றது. அது என்னவென்றால், அரசியலமைப்பின் 91 ஆவது ஷரத்தின் 1 ஏ IX இன் பிரகாரம் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டவர்களின் தகுதிகள் பற்றி அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
முக்கியமாக முப்படைகளில் பணியாற்றும் எந்தவொரு வீரனுக்கும் தேர்தலில் போட்டியிட முடியாது. அத்துடன் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியாது.
அப்படி ஒரு வரைமுறை இருப்பதற்கும் காரணம் ஒன்றுண்டு. இராணுவத்தில் நிரந்தரப் படையில் இருக்கும் ஒருவருக்கு இராணுவம் தொடர்பில் முடிவுகளை எடுக்கமுடியும்.
அவர்களுக்கு ஆயுதம் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகவேதான் அவர்களை பாராளுமன்ற உறுப்பினராக அரசியலமைப்பின் பிரகாரம் ஏற்பதில்லை.
ஆனால், சரத் பொன்சேகாவோ இராணுவத்தின் உயரிய பதவியான பீல்ட் மார்ஷல் பதவியை அனுபவித்துக்கொண்டே பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார்.
அது மட்டுமன்றி அவருக்கு அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புக்கு முரணாகவே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுள்ளார்.
நான் சொல்வது பிழை என்றால் சரத்பொன்சேகா என்மீது வழக்கொன்றை தொடுக்கலாம். கடந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போதும் பீல்ட் மார்ஷல் சீருடையுடனும் அதற்கான ஒரு சின்னததையும் கையில்கொண்டே சரத்பொன்சேகா அமர்ந்திருந்தார்.
ஏன்? அண்மையில் இராணுவத்தளபதியான பின்னர் மகேஷ் சேனாநாயக்க சரத்பொன்சேகாவை சந்திக்க சென்றபோதும் அதன் பின்னர் கடற்படைத்தளபதியான ட்ராவிஸ் சின்னையாவும் அவரை சந்திக்கச் சென்றபோதும் தத்தமது சீருடைகளிலேயே சென்றிருந்தனர்.
அந்தவேளையில் சரத் பொன்சேகாவும் சீருடையிலேயே காணப்பட்டார். ஒரு இராணுவ பொறுப்பில் இருப்பவருக்கே அந்த சீருடையை அணிய முடியும். அத்தோடு அவர் இன்றும் பீல்ட் மார்ஷலுக்குரிய சலுகைகளைப் பெற்று வருகின்றார்.