வவுனியா கூமாங்குளத்தில் இன்று (18.09) காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்
வவுனியா கூமாங்குளத்தில் வசித்து வரும் பாஸ்கரன் விதூசன் (வயது-20) என்ற இளைஞன் கடந்த ஆண்டு க.பொ.த உயர்தர விஞ்ஞான பிரிவில் பரீட்சை எழுதியிருந்தார்.
தகுதி காணாமையால் இந்த ஆண்டும் உயர்தர பரீட்சை எழுதிவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இன்று காலை வீட்டில் குறித்த இளைஞனும் தாயாரும் இருந்துள்ளனர்.
தாயார் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு கடைக்கு சென்று வீடு திரும்பிய போது வீட்டின் அறையினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் அடிக்கடி கல்வி விடயம் சம்பந்தமாக கதைப்பதாகவும் இந்த முறை எவ்வாறு பெறுபேறு வருகிறதோ என பெற்றோரிடம் கவலையுணர்வுடன் கதைப்பதாகவும் பெற்றோர் கூறினார்.
தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.