தனது 34 வயதான விதவை மருமகள் மீது அசிட் வீசிய 74 வயதான மாமனாரை கடுவலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்ணின் கணவர் சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில் தனது 7 வயதான பிள்ளையுடன் மாமா மற்றும் மாமியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந் நிலையில் கடந்த 15ஆம் திகதி தனது குழந்தையுடன் நித்திரையிலிருந்த வேளை தன் மீது திரவம் ஒன்று விழுவதை உணர்ந்து எழும்புவதோடு அதிக வேதனையை அனுபவித்துள்ளார்.
வேதனையால் துடி துடித்த பெண் அலறியவாறு தன் குழந்தையையும் அழைத்துக்கொண்டு வீதிக்கு ஓடிவந்து முச்சக்கரவண்டி ஒன்றில் ஏறி வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
வைத்திய சாலை அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பதற்கு முன்னர்; தன் மீதும் குழந்தை மீதும் அசிட் வீசியது தன்னுடைய மாமனாரே என்று பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே பொலிஸார் 74 வயதுடைய குறித்த பெண்ணின் மாமனாரை கைது செய்துள்ளனர்.
மேலும் அசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட 7 வயதுடைய குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடாத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.