மும்பையில், வெள்ளம் தேங்கியிருந்த தண்டவாளத்தில், 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது பயணிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
வெள்ளத்தில் அதிவேகமாக சென்ற ரயில்
மும்பையில், பலத்த மழை பெய்துவருவதால், நகரமே தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. ரயில் தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கிக்கிடக்கின்றன.
பெரும்பாலான புறநகர் ரயில் சேவைகள் ரத்துசெய்யப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், நேற்று மும்பை நல்லசோப்ரா ரயில் நிலையத்தைக் கடந்த ரயில் ஒன்று, 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது.
இருபுறமும் அதிவேகத்தில் தண்ணீர் தெறிக்க, ரயிலை அடையாளம் காண முடியவில்லை. ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள், ரயிலை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, வைரலாகியது.
ஏற்கெனவே, அடிக்கடி ரயில் விபத்து நிகழ்ந்துகொண்டிருக்கையில், பயணிகளின் பாதுகாப்பைப் பற்றி சிறிதும் அக்கறை இல்லாமல், ரயிலை அதிவேகத்தில் இயக்கிய ஓட்டுநர்மீது நடவடிக்கை எடுக்க, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ ”ரயில்வே பாதுகாப்பு விதிகளின்படி, தண்டாவளத்துக்கு மேல் 100 மி.மீட்டர் உயரத்துக்குத் தண்ணீர் தேங்கியிருந்தால், 50 கி.மீ வேகத்தில்தான் ரயில் இயக்கப்பட வேண்டும்.
நல்லசோப்ரா ரயில் நிலையத்தில் 70 மி.மீ உயரத்துக்குதான் தண்ணீர் தேங்கியிருந்தது. இதனால், ஓட்டுநர் சரியான வேகத்தில்தான் ரயிலை இயக்கியிருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.