மேரி லேண்ட் மாநிலத்தின் ஆளுநர் பதவிக்காக போட்டியிடும் இலங்கையின் கிரிஷாந்தி விக்ணராஜா
அமெரிக்காவின் மேரி லேண்ட் மாநிலத்தின் ஆளுநர் பதவிக்காக போட்டியிடும், இலங்கையின் கிரிஷாந்தி விக்ணராஜா பிரசார நடவடிக்கை ஈடுபட்டுள்ளார்.
இவர் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் மிச்செல் ஒபாமாவின் கொள்கை வகுப்பாளராக கடமையாற்றியிருந்தமை சிறப்பம்சமாகும்.
யேல் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை நிறைவு செய்த கிரிஷாந்தி விக்ணராஜா, இம்முறை மேரிலாண்ட் ஆளுனர் பதவிக்கு போட்டியிடும் ஒரேயொரு பெண் வேட்பாளராவார்.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக நாட்டைவிட்டு வௌியேறிய கிரிஷாந்தியின் பெற்றோர் ஆசிரியர்களாவர்.
9 மாத குழந்தையாக அமெரிக்காவிற்குச் சென்ற கிரிஷாந்தியின் தற்போதைய வயது 37.
ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆளுனர் பதவிக்குப் போட்டியிடும் கிரிஷாந்தி தமது பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.
250,000 தனியார் வேலைவாய்ப்பு, அதிவேக இணைய வசதி, வருடமொன்றுக்கு கல்விக்காக 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு போன்ற வாக்குறுதிகளை அவர் முன்வைத்துள்ளார்.
அத்துடன், குழந்தை பெற்றவுடன் பெற்றோருக்கு மூன்று மாத விடுமுறை வழங்கப்படும் என கிரிஷாந்தி தமது விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளமை விசேட அம்சமாகும்.