தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகியோர் கொள்கையில் உறுதியாக இருப்பதால் கட்சிபேதமின்றி தனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாக நாமல் ராஜபக் ஷ எம்.பி தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக் ஷ எம்.பி.தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த பதிவினை மேற்கொண்டுள்ளார்.
அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாராளுமன்றத்திற்கு வந்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வியாழேந்திரன் எம்.பி.க்கள் மாகாண சபைத் திருத்தச் சட்ட வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
கூட்டமைப்பில் இருந்து கொண்டும் கொள்கையில் உறுதியாக இருக்கும் இவ்விருவருக்கும் கட்சி பேதமின்றி பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றுள்ளது.
முன்னதாக 1988ஆம் ஆண்டு இரண்டாம் இலக்க மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் கடந்த 20ஆம் திகதி நடைபெற்றிருந்தது.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் விவாத்தில் உரையாற்றிருந்தார். அதேநேரம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பாராளுமன்றத்திற்கு சமுகமளித்திருந்தார்.
இருப்பினும் வாக்கெடுப்பு நடத்தும்போது இருவரும் பாராளுமன்றத்திலிருந்து வெளியேறிருந்தனர்.
இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதானகட்சியான தமிழரசுக்கட்சியினை சார்ந்த பத்து உறுப்பினர்கள், பங்காளிக்கட்சியான ரெலோவின் கோடீஸ்வரன் எம்.பி ஆகியோர் இச்சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்கள்.
இந்நிகழ்வுக்கு அடுத்த சில நாட்களில் மாகாணங்களுக்கு அதிகாரப்பகிர்வை ஆதரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மாகாண சபை தேர்தல்களை பிற்போட்டு அவற்றின் வினைத்திறனான செயற்பாடுகளை வலுவிழக்கச் செய்யும் திருத்தச் சட்டமூலத்தினை ஆதரித்தது ஏன்? எனக் கேள்வி எழுப்பி டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை நாமல் ராஜபக்ஷ எம்.பி வெ ளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.