கல்கிசை பொலிஸ் பிரிவில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான மனிதாபிமான முகவரகத்தின் பாதுகாப்பின் கீழ், மூன்று மாடி வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த மியன்மாரில் இருந்து வந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றி நாடு கடத்துமாறு பிக்குகள் தலைமையிலான குழுவினர் நேற்று அவ்வீட்டை சுற்றி வளைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனால் அப்பகுதி எங்கும் பெரும் பதற்றமான சூழ் நிலை உருவானதுடன் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் அவர்களை தமது பொறுப்பில் எடுத்தனர்.
இந்த நிலையில் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களை பொலிஸ் பொறுப்பில் எடுத்து பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளதாகவும், நேற்றைய இந்த சம்பவம் தொடர்பில் கல்கிசை நீதிவானுக்கு அறிக்கை சமர்பித்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விஷேட பொலிஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர கேசரிக்கு தெரிவித்தார்.
நேற்று காலையும், மாலையும் குறித்த வீட்டை தேரர்கள் தலைமையிலான குழுவினர் சுற்றிவளைத்து கலகம் விளைவிக்கும் வண்ணம் நடந்துகொண்ட நிலையில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் கல்கிசை -, இரத்மலானை வீதியில் அதிக வாகன நெரிசலும் ஏற்பட்டதுடன் பிரதேசத்தில் பதற்றமும் அதிகரித்தது.
இந்த நிலையில் ஸ்தலத்துக்கு உடனடியாக கல்கிசை பொலிஸார் அழைக்கப்பட்டு நிலைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நேற்று காலை 10.15 மணியளவில் பிக்குகள் தலைமையில் குறித்த ரோஹிங்யா முஸ்லிகள் தங்கவைக்கப்பட்டிருந்த வீட்டுக்கு வந்துள்ள குழுவினர் வீட்டின் முன்பாக, அவர்களை வெளியேற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, அவர்கள் வீட்டுக்குள் நுழையவும் முற்பட்ட நிலையில் ஸ்தலத்துக்கு கல்கிசை பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். இதனையடுத்து பாடசாலைக்கு சென்றிருந்த அகதிச் சிறுவர்கள் ஓரிருவர் தவிர ஏனையோரை பொலிஸ் ட்ரக் வண்டி ஊடாக கல்கிசை பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸார் அழைத்து சென்றனர்.
அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இவ்வாறு அவர்களை பொலிஸார் பொறுப்பேற்றதாக கல்கிசை பிராந்திய பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந் நிலையில் பாடசாலையில் இருந்த சிறுவர்களும் பின்னர் பாதுகாப்பு கருதி பொலிஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
அதன்பின்னர் நிலைமையை ஆராய்ந்த பொலிஸார் அகதிகளை மீளவும் அவர்கள் வசித்த வீட்டில் பிற்பகல் வேளையில் மீள குடியமர்த்தினர்.
எனினும் மீளவும் மாலை 5.30 மணியளவில் அப்பகுதியில் கூடிய சுமார் 70பேர் வரையிலான பிக்குகள் உள்ளிட்ட கடும்போக்கு பெரும்பான்மை இனத்தவர்கள் கலகத்தை ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டதுடன்.அவர்கள் வீட்டினுள் அத்துமீறி பிரவேசிக்க முயற்சித்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டது. இதற்கு மேலதிகமாக அவர்கள் பிரதான பாதையில் வாகன போக்குவரத்துக்கு இடைஞ்ல் ஏற்படும் வண்ணமும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந் நிலையில் மாலை வேளையில் மீளவும் அகதிகளை பாதுகாக்க பொலிஸார் கடும் பிரயத்தனத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதன்போது இரு பொலிஸாருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. இந் நிலையில் நிலைமை மோசமடைவதை உணர்ந்த பொலிஸார் ரோஹிங்யா அகதிகளை தமது பொறுப்பில் எடுத்து, ட்ரக் வண்டியில் பொலிஸ் பாதுகாப்புடன் கல்கிசை பொலிஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
இந் நிலையில் நேற்று இரவு முழுவதும் அந்த அகதிகள் பொலிஸ்பாதுகாப்பின் கீழ் கல்கிசை பொலிஸ் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி 30 ரோஹிங்யா முஸ்லிம்கள் காங்கேசன்துறை கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் குறித்த ரோஹிங்யா முஸ்லிம்கள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்களை மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டது.
அதன் பின்னரான வழக்கு விசாரணைகளின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான மனிதாபிமான முகவரகம், குறித்த ரோஹிங்யா முஸ்லிம்களை பொறுப்பேற்றது. $மல்லாகம் நீதிவான் நீதிமன்றில், ஐ.நா. அகதிகளுக்கான மனிதாபிமான முகவரகம் சார்பில் அவர்களை வேறு நாடொன்றில் அகதிகளாக குடியேற்றும் வரை, மிரிஹான தடுப்பு முகாமுக்கு வெளியே வைத்து பராமரிக்க அனுமதி பெறப்பட்டிருந்தது.
இதனையடுத்து முஸ்லிம் எய்ட் என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் அனுசரணையில் குறித்த 30 பேரும் இரத்மலானை பகுதியில் மூன்று மாடி வீடொன்று பெறப்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த 30 பேரில் இலங்கைக்கு வந்த பின்னர் புதிதாக ஒரு குழந்தை பிறந்துள்ள நிலையில் தற்போது மொத்தமாக 31 பேர் அங்கு தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் 7 பெண்களும் 16 பேர் வரையில் சிறுவர்களுமாவர். அவர்களில் பலர் பிரதேசத்தின் பாடசாலை ஒன்றிலும் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இந் நிலையில் மியன்மாரில் இருந்து தீவிரவாதிகள் அகதிகள் எனும் போர்வையில் நாட்டுக்குள் வந்துள்ளதாகவும் அவர்கள் சட்ட விரோதமாக தங்கியுள்ளதாகவும் தெரிவித்தே கல்கிசை பகுதியில் உள்ள குறித்த மூன்று மாடிக் கட்டிடம் பிக்குகள் தலைமையிலான குழுவினரால் சுற்றிவளைக்கப்பட்டது.
ரோஹிங்யா முஸ்லிம்கள் நாட்டுக்குள் வரவில்லை எனவும் அவர்களை தாம் பொறுப்பேற்கப் போவதும் இல்லை எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்த நிலையில், அப்படி யாரும் இருந்தால் தகவல் தாருங்கள் என கோரியதாகவும், இந்த வீட்டில் ரோஹிங்யா முஸ்லிம்கள் உள்ளார்கள் அவர்களை உடனடியாக நாட்டை விட்டு அனுப்ப வேண்டும் எனவும் சுற்றி வளைத்து கலகம் செய்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் கோஷம் எழுப்பினர். இதன்போது அவர்கள் கலகத்தை ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டனர்.
எனினும் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் அகதி அந்தஸ்து கோரிய ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான மனிதாபிமான முகவரகத்தின் பாதுகாப்பின் கீழ் இருந்துள்ளமை பொலிஸார் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் அவர்களின் பாதுகாப்பை பொலிஸார் உறுதி செய்ய நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான மனிதாபிமான முகவரகம் அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடாத்தவுள்ளதுடன், இந்த பிக்குகளின் நடவடிக்கை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இந் நிலையில் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நத்தன முணசிங்க, மேல் மாகாணத்தின் தெற்கு பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த விக்ரமசிங்க ஆகியோரின் மேற்பார்வையில் கல்கிசை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சந்தன அத்துகோரளவின் நேரடி கட்டுப்பாட்டில் கல்கிசை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் பிரதேசத்தின் பாதுகாப்பும் ரோஹிங்யா அகதிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.