அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியில் டிக்கோயா பட்டகலை சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் அப்பாவும், மகனும் பலத்த காயங்களுடன் டிக்கோயா மாவட்ட ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 11.30 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டிக்கோயா போடைஸ் 30 ஏக்கர் என்ற பகுதியிலிருந்து புளியாவத்தை நகரை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த அப்பாவும், மகனுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
சாஞ்சிமலையிலிருந்து அட்டன் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்றில் டிக்கோயா பட்டல்கலை எனும் இடத்தில் உள்ள சந்தியில் நேருக்கு நேர் மோதுண்டு விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பஸ்ஸின் அதிக வேகமே இவ்விபத்திற்கான காரணம் என தெரிவிக்கும் பொலிஸார் பஸ் சாரதியை கைது செய்துள்ளனர்.
அப்பாவும், மகனும் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் கண்காணிப்பு கெமரா (சீ.சீ.டீ.வி) வில் பதிவாகியுள்ளதாக இவ்விபத்து விசாரணையை மேற்கொள்ளும் அட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.